search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை மீட்பு"

    • குழந்தை அதிகாலை நேரத்தில் திடீரென வீட்டில் இருந்து வழி தவறி வெளியே சென்று விட்டான்.
    • குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை அக்கம்பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடி அலைந்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் ‌தாதகாப்பட்டி கேட் சவுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணபதி - கங்கா தம்பதி. இவர்களது ஆண் குழந்தை மாறன் (வயது 3). கணபதி, கங்கா இருவரும் தாதகாப்பட்டி உழவர் சந்தை பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று கணபதி முதலில் கடை திறப்பதற்காக சென்றுவிட்டார்.

    தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அதிகாலை நேரத்தில் திடீரென வீட்டில் இருந்து வழி தவறி வெளியே சென்று விட்டான். கங்கா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவர் குழந்தை வெளியே சென்றதை சரிவர கவனிக்கவில்லை.வழி தவறிய குழந்தை சவுந்தர் நகர் பகுதியில் அழுத படியே சுற்றித் திரிந்தான். அப்பகுதியைச் சேர்ந்த யாருக்கும் குழந்தையை அடையாளம் தெரியவில்லை. இதனிடையே குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை அக்கம்பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடி அலைந்தனர்.

    தாதகாப்பட்டி கேட் உழவர் சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அன்னதானப்பட்டி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி அங்கு அழுதபடி நின்ற குழந்தையிடம் சென்று பேச்சு கொடுத்தார். இதையடுத்து அருகில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரித்ததில் காய்கறி வியாபாரிகள் கணபதி - கங்கா ஆகியோரின் ‌ குழந்தை தான் என்பதை உறுதி செய்து கொண்டார்.பின்னர் குழந்தையை அங்கிருந்து உடனடியாக மீட்டு அவனது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் இந்த துரித செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • குழந்தையை கடத்திய நபர் யார்? எதற்காக கடத்தினார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அலிமூப்பன் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி நாகூர் மீராள். இவர்களுக்கு நஜிலா பாத்திமா(வயது 3) என்ற பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சாகுல் அமீது தனது குடும்பத்துடன் சென்றார்.

    அங்கு இரவில் கணவன்-மனைவி 2 பேரும் குழந்தையுடன் பள்ளிவாசலில் தூங்கினர். நள்ளிரவில் அங்கு வந்த ஒரு மர்ம நபர் குழந்தையை நைசாக கடத்தி சென்றார்.

    இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை தேடி வந்தார்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஆத்தங்கரை பள்ளி வாசல் மற்றும் அதனை சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புகள், கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.

    அப்போது அதில் ஆண் ஒருவர் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கடத்தி செல்வதும், சிறிது தூரம் நடந்து சென்ற பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த காரில் ஏறி அந்த நபர் தப்பித்து செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அந்த காரை அடையாளப்படுத்தி தூத்துக்குடி, குமரி மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சாலைகளில் போலீசார் அதிரடி வாகன சோதனையும் செய்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை திருச்செந்தூர்-கரம்பைவிளை சாலையில் 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தனியாக அழுது கொண்டிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து திருச்செந்தூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த குழந்தை ஆத்தங்கரை பள்ளிவாசலில் மர்ம நபரால் கடத்தப்பட்ட நஜிலா பாத்திமா என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே கடத்தல் கும்பலை தேடி கூடங்குளம் போலீசாரும் அந்த இடத்துக்கு வந்தனர். அதனை தொடர்ந்து போலீசார் குழந்தையின் பெற்றோரை அழைத்து திருச்செந்தூரில் சென்று குழந்தையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர். அதன்படி இன்று காலை குழந்தை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே குழந்தையை கடத்திய நபர் யார்? எதற்காக கடத்தினார்? போலீசார் பின்தொடர்வதை அறிந்து அந்த நபர் குழந்தையை விட்டு சென்றாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×