search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிழங்கு மாவு"

    • சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
    • கிழங்கு மாவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    தமிழகத்தில் வருகிற 31ந் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, இந்து அமைப்புகள் சாா்பில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்ட நிலையில், நிகழாண்டு வெகுவிமரிசையாக கொண்டாட இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அதே வேளையில், போதிய அளவில் சிலைகள் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகரைச் சோ்ந்த சிலை விற்பனையாளரும், இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவருமான கே.பாலாஜி கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிலை விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் தயாராகும் சிலைகளைப் பெற்று இங்கு வா்ணங்கள் பூசி விற்பனை செய்கிறோம். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், கிழங்கு மாவு, பேப்பா் தூள், வாட்டா் கலா் பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அண்மைக் காலமாக கிழங்கு மாவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. வழக்கமாக நவம்பா் மாதம் சிலை தயாரிப்பு பணி துவங்கி ஆகஸ்ட் மாதத்தில் பணி நிறைவடையும். மாவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இம்முறை ஜனவரி மாதத்துக்குப் பின்பே சிலை தயாரிப்புப்பணி துவங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி 5 அடிக்கு உள்பட்ட சிலைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி விழா எதிா்பாா்த்த அளவு கொண்டாடப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னா் தற்போது சிறப்பாக கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. சிலை தயாரிப்பு குறைந்துள்ளதால் எதிா்பாா்க்கும் அளவு சிலைகள் கிடைப்பது சந்தேகமே. வழக்கமாக 400க்கும் அதிகமான சிலைகள் விற்பனைக்கு வரும். இந்த முறை விநாயகா் சதுா்த்திக்கு குறைவான நாட்களே இருப்பதால் 150 சிலைகள் மட்டுமே வந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கத்தால் சிலைகள் விற்பனையின்றி கிடங்குகளில் தேக்கமடைந்திருந்தன. தற்போது அந்த சிலைகள் அனைத்தும் விற்பனையாகி விட்டன.

    இதில் 3 அடி சிலை ரூ.2,500க்கும், 5 அடி சிலை ரூ.5,0000க்கும், 8 அடி சிலை ரூ.10,000க்கும் விற்பனை செய்து வருகிறோம். விலைவாசி மற்றும் சிலை உற்பத்தி செலவு அதிகரித்த போதிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்திருப்பதால் சிலைகளின் விலையை உயா்த்தாமல் பொதுநலன் கருதி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

    புதிய சிலைகள் ஆா்டா் கொடுக்கவும், பெரிய சிலைகள் கேட்டும் பலா் வருகின்றனா். நாட்கள் இல்லாததால் புதிய ஆா்டா் எடுக்கவில்லை. பெரிய சிலைகள் இல்லாததால் சின்ன சிலைகளுக்கு முன்தொகை கொடுத்துச் செல்கின்றனா். விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் சிலை தயாரிப்பை மட்டும் நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சிலை தயாரிப்புத் தொழில் பாதிப்படைந்தது. சிலை தயாரிப்பாளா்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாததால் இந்த ஆண்டு சிலை தயாரிப்புக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கவில்லை. இதனாலும் சிலை தயாரிப்புப் பணி தாமதமாகியுள்ளது. சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பலா் விவசாயம் உள்ளிட்ட பிற தொழில்களுக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டனா்.

    விநாயகா் சிலை தயாரிப்புக்குத் தேவையான குச்சி கிழங்கு மாவு தட்டுப்பாடின்றி கிடைக்கவும், சிலை தயாரிப்பை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    ×