search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசிமேடு மீன்மார்க்கெட்"

    • மோக்கா புயல் காரணமாக சிறிய வகை படகுகளும் கடலுக்குள் செல்லாததால் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன் வரத்து முற்றிலும் குறைந்தது.
    • இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன் வாங்க ஏராளமானோர் மார்க்கெட்டுக்கு வந்தனர்.

    ராயபுரம்:

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் இன்று வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையைக் கடக்கிறது. புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    ஏற்கனவே கடந்த மாதம் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் உள்ளது. இதனால் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லவில்லை. சிறியவகை பைபர் படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக தடைகாலம் தொடங்கியது முதல் காசிமேடு மீன்மார்க்கெட்டுக்கு குறைந்த அளவு மீன்களே விற்பனைக்கு வந்தன.

    தற்போது மோக்கா புயல் காரணமாக சிறிய வகை படகுகளும் கடலுக்குள் செல்லாததால் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன் வரத்து முற்றிலும் குறைந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன் வாங்க ஏராளமானோர் மார்க்கெட்டுக்கு வந்தனர்.

    ஆனால் எதிர்பார்த்த மீன்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் விலையும் கடந்த வாரத்தை விட 2 மடங்கு அதிகமாக இருந்தது.

    சிறியவகை மீன்களான நெத்திலி, சங்கரா, நண்டு, இறால் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. இதில் பாறை, சங்கரா, கொடுவா, வவ்வால் மற்றும் சிறிய வகை மீன்கள் வரத்து முற்றிலும் இல்லை.

    இதனால் சிறிய வகை வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கும், பெரியவகை வஞ்சிரம் ரூ.2 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.

    இதேபோல் கடந்த வாரத்தில் ரூ.450 வரை விற்ற நெத்திலி இன்று ரூ.600-க்கும், சங்கரா ரூ.900-க்கும், இறால்-ரூ.600 வரையும், நண்டு ரூ.700 வரையும் விற்பனை ஆனது.

    இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, தடைகாலம் உள்ள நிலையில் புயல் சின்னம் காரணமாக சிறிய படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் காசிமேடு மார்க்கெட்டுக்கு இன்று குறைந்த மீன்களே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக மீன்விலை அதிகரித்து இருந்தது என்றார்.

    ×