search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி வாலிபர் கொலை"

    கள்ளக்குறிச்சி அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்கீரனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவரது மனைவி அஞ்சலை (29). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    மணிகண்டன் கேரளாவில் குடும்பத்துடன் தங்கியிருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தென்கீரனூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள மணிகண்டன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

    வீட்டில் இருந்த மனைவி அஞ்சலையிடம் அவர் தகராறு செய்தார். இதைத் தொடர்ந்து அஞ்சலை தனது 3 குழந்தைகளையும் அழைத்து கொண்டு அருகில் உள்ள தனது அத்தை பூவாயி வீட்டுக்கு சென்று விட்டார்.

    இரவு 9 மணி அளவில் மது போதையில் இருந்த மணிகண்டன் மனைவியை தேடி பூவாயி வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த பூவாயியின் மகள் சாந்தியிடம் என் மனைவி மற்றும் குழந்தைகளை எங்கே என்று கேட்டார். உடனே சாந்தி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அங்கு கிடந்த செங்கலை எடுத்து அருகில் உள்ள வீடுகள் மீது வீசினார். இதைத்தொடர்ந்து அந்த வீடுகளில் இருந்த அரவிந்த் (28), ஆனந்த் (30) ஆகியோர் ஓடிவந்து, மணிகண்டனிடம் தகராறு செய்தனர். ஏன் எங்கள் வீடுகள் மீது செங்கலை வீசினாய்? என்று தட்டிக்கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள நடுகாலனியில் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மணிகண்டன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் கள்ளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

    ×