search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைக்காரர் சுட்டுக்கொலை"

    • போலீசார் அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தலைமறைவான மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    முசாபர்பூர்:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் ராம்பாக் சவுக் பகுதியில் இறைச்சிக்கடை வைத்து நடத்தி வந்தவர் அப்ரோஸ் காத்ரி. நேற்று முன்தினம் இவர் தனது கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம மனிதர்கள் அவரை பின் தொடர்ந்து வந்தனர். அப்ரோஸ் காத்ரி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்தவன் திடீரென தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் அவரை நோக்கி 3 முறை சுட்டான். இதில் தலையில் குண்டுகள் பாய்ந்த அப்ரோஸ் காத்ரி அப்படியே நடுரோட்டில் சுருண்டு விழுந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் இந்த சம்பவம் அரங்கேறியது.

    அவரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தயது. உடனே அவர்கள் ஒன்று திரண்டு அப்ரோஸ் காத்ரி உடலுடன் நடுரோட்டில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமறைவான மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இறைச்சிக் கடைக்காரர் சுட்டுக்கொல்லப்படும் பரபரப்பு வீடியோ காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மனதை பதற வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×