search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழுகும்"

    • சீரமைக்க அறங்காவலர் குழு தலைவர் நடவடிக்கை
    • 4 ஆயிரத்து 224 சதுரஅடி பரப்பளவில் இந்த அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மெயின்ரோட்டில் காந்தி மண்டபம் அருகில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்துறைக்கு சொந்தமான அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகம் கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. மொத்தம் 4 ஆயிரத்து 224 சதுரஅடி பரப்பளவில் இந்த அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. அரசு அருங்காட்சியகத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இந்து அறநிலையத்துறை இடத்தில் இயங்கி வருகிறது.

    இந்த இடத்துக்கு மாதம்தோறும் அருங்காட்சியகத்துறை பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு ரூ.9ஆயிரத்து 795 வாடகை செலுத்தி வருகிறது. இந்த அரசு அருங்காட்சியகத்தில் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்கால கல் சிலைகள், திமிங்கலத்தின் எலும்புக் கூடு, டால்பின் மீன் மற்றும் அதன் எலும்புக்கூடு, காடுகளில் வன மிருகங்கள் வசிக்கும் காட்சி, கடல் ஆமை, பழங்கால உலோகப்பொருட்கள், தோல்பாவை கூத்தில் பயன்படுத்தப்படும் தோல் பொம்மைகள், குமரி மாவட்டத்தில் முக்கியமாக பயிரிடப்படும் ரப்பர் தோட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி கோவிலில் பயன்படுத்தப்பட்டு வந்த பழங்கால தேர் மற்றும் கருட வாகனம் போன்றவை காட்சியகப்ப டுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி இந்த அருங்காட்சியகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் புகைப்பட கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.

    இந்த அரசு அருங்காட்சியகம் சமீபத்தில் பெய்த கன மழையினால் தண்ணீர் ஒழுகி அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த அரிய பொருட்கள் நாசமடைந்து உள்ளன. இதைத்தொடர்ந்து மழையில் ஒழுகும் அரசு அருங்காட்சியகத்தை சீரமைக்க வேண்டும் என்று அருங்காட்சியத்துறை அதிகாரிகள் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். அதன் பயனாக குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தை நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மழையில் ஒழுகும் அரசு அருங்காட்சியக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உறுதி அளித்தார்.

    ×