search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர் சிலை அகற்றம்"

    • இரவு நேரத்தில் தடாலடியாக சிலையை அகற்றுவதில் நோக்கம் அரசியல் கொண்டதாக உள்ளது என அன்பழகன் வாக்குவாதம் செய்தார்.
    • அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள வருவாய்த்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை-விழுப்புரம் சாலை வில்லியனூரில் இருந்து பெரம்பை செல்லும் சாலையின் புறவழிச்சாலையின் மையப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை இருந்தது.

    1998-ம் ஆண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த நடராஜன் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவினார்.

    வில்லியனூர் பகுதியில் புதுவை-விழுப்புரம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தை தடுக்க சாலை நடுவே பல கிலோ மீட்டர் தூரம் வரையில் சென்டர் மீடியன் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வில்லியனூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை அகற்றாமல் சாலையை விரிவுப்படுத்த முடியாது என்ற நிலையில் எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சப்-கலெக்டர் முரளிதரன் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஜி.ஆர். சிலையை அகற்றினர்.

    இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையிலான அ.தி.மு.க.வினர் யாரை கேட்டு சிலையை அகற்றி இருக்கிறீர்கள் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சிலையை அகற்ற அரசு அனுமதி கொடுத்திருந்தாலும் சிலையை அகற்றுவது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை. சொல்லியிருந்தால் அ.தி.மு.க.வினரே சிலையை அகற்றி கொடுத்திருப்போம்.

    இரவு நேரத்தில் தடாலடியாக சிலையை அகற்றுவதில் நோக்கம் அரசியல் கொண்டதாக உள்ளது என அன்பழகன் வாக்குவாதம் செய்தார்.

    அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள வருவாய்த்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஏற்கனவே சிலை இருந்த இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் சாலையின் ஓரத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர். வருவாய்த்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலை அதிகாரிகள் வைக்கப் போவதாக சொன்ன இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அப்போது பேசிய அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், அகற்றப்பட்ட சிமெண்டால் ஆன எம்.ஜி.ஆர். சிலை வெண்கல சிலையாக மாற்றி வைப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். விரைவில் அரசு வெண்கல சிலையை அமைக்க வேண்டுமென கூறினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இன்று சாலை விரிவாக்க நடந்து வரும் நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×