search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரக வளர்ச்சித் துறை"

    • ஊரகப் பகுதிகளில் 698 வீடுகள் கட்ட ரூ.16.75 கோடி நிதி ஒதுக்கீடு
    • அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

    கன்னியாகுமரி:

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்றிரவு கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.

    இன்று காலை அமைச்சர் கள் பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் ரூ.50கோடி செலவில் முன்மாதிரி வட்டார வள மைய புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    முன்மாதிரி வட்டார வள மைய கட்டிட பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    இதை தொடர்ந்து நுள்ளிவிளை ஊராட்சியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தினை தொடங்கி வைத்தார். ஆத்திவிளை ஊராட்சியில் காளான் உற்பத்தி அலகை பார்வை யிட்டார். பின்னர் தச்சமலை யில் பழங்குடியினரின் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.

    பின்னர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் சமத்துவ புரம் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-22 -ஆம் ஆண்டில் ரூ.241.574 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது நடப்பு ஆண்டிலும் இது வரை ரூ. 101.973 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஊரக பகுதிகளில் வீடு தோறும் தரமான குடிநீர் போதுமான அளவு வழங்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. 9 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 95 ஊராட்சிகளில் 1,43,436 குடியிருப்புகளுக்கு ரூ.47.76 கோடி செலவில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் நடப்பாண்டில் 28,851 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 80 சாலைகளை சீரமைக்க ரூ.42.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் ஊரகப் பகுதிகளில் 698 வீடுகள் கட்ட ரூ.16.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள 4 பெரியார் சமத்துவபுரங்களில் முதல் கட்டமாக 2 சமத்துவப்புரங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.1.348 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் சுய உதவி குழு உறுப்பினர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கும் தொழில்களை விரிவு படுத்துவதற்கும் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பெண்கள் முன்னேற்றத்திற்கு கடந்த ஆண்டு 10,226 சுய உதவி குழுக்க ளுக்கு ரூ.508.47 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் குமரி மாவட்டத்தில் 44 மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.88 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    கிராமப்புற மகளிர் சத்தான உணவை பெறும் வகையில் 4,100 மகளிருக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து விதைத்தோட்டம் அமைப்பதற்கு செடிகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டுள்ளன .

    கிராமப்புற விவசாயி களின் வருமானத்தை பெருக் கும் வகையில் குமரி மாவட்டத்தில் 4 ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை அமைக்க ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், தி.முக. மாவட்ட பொருளாளர் கேட்சன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. செயலா ளர் தாமரைபாரதி, மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், கன்னியாகுமரி சிறப்புநிலைபேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×