search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்மை கண்டறியும்"

    • கரைப்பாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி நித்யா (28) என்ற பட்டதாரி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக வெல்லம் ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி நித்யா (28) என்ற பட்டதாரி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இதனை தொடர்ந்து, வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகளுக்கு தீ வைப்பது, வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை குடியிருப்பில் தூங்கிக்கொண்டிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் மீது தீ வைப்பது, வாழைத் தோட்டத்தில் புகுந்து மரங்களை வெட்டி சாய்ப்பது உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது.

    இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே, நித்யா கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவின் பேரில், காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையிலான குழுவினர் கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்தினர், தீ வைக்கப்பட்ட வெல்ல ஆலைகள், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடுகள், வாழை மரங்கள் வெட்டப்பட்ட தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜேடர்பாளையம் பகுதியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து உண்மை கண்டறிய தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளோம். பல கட்டங்களாக ஆய்வு செய்து காங்கிரஸ் கட்சி தலைமையிடம் ஆய்வை சமர்ப்பிப்போம்.

    பாதிக்கப்பட்ட நித்யா குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். கலவரத்தில் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வு குழுவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் சித்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டச் செயலாளர் வக்கீல் துரைசாமி, கபிலர்மலை வட்டாரத் தலைவர் பழனிச்சாமி, பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரன், வட்டாரப் பொதுச் செயலாளர் சண்முகம், துணைத் தலைவர் காளியப்பன், பரமத்திவேலூர் நகர தலைவர் பெரியசாமி, பாண்டமங்கலம் நகரத் தலைவர் மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அல்லி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×