search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்புளூயன்சா காய்ச்சல்"

    • கடந்த 2 மாதங்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது பெரிதாக இல்லை.
    • டெங்கு பாதிப்பை பொறுத்தவரை 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முக கவசம் அணிவது அவசியம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஏறத்தாழ 1¼ லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. அதேபோல் காய்ச்சலுக்கு என ஒவ்வொரு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலால் (எச்1 என்1 வைரஸ்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 465 ஆகும்.

    இதில் 5 வயதுக்கு உட்பட்ட 81 குழந்தைகளும், 5-14 வயதுக்கு உட்பட்டவர்களில் 62 பேரும், 15-65 வயதுக்கு உள்ளானவர்கள் 223 பேரும், 65 வயதுக்கு மேற்பட்டோர்களில் 99 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 10 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 269 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 186 பேர் தங்களது வீடுகளிலும் தனிமைபடுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தலைவலி, உடல்வலி, காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இந்த வைரசின் தாக்கம் பாதிப்பை உண்டாக்குகிறது. அவர்கள் தங்களை தனிமைக்படுத்தி கொண்டாலே அது போதும். அதற்கு முன்பு டாக்டர்களின் ஆலோசனை பெற வேண்டும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முக கவசம் அணிவது அவசியம்.

    ஐரோப்பிய நாடுகளில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு என தனி தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதேபோல் உலகில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவிற்கு என 5-வது தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கின்றனர். கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் 4 ஆயிரத்து 193 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 10 லட்சத்து 89 ஆயிரத்து 529 பேர் பயன் அடைந்திருக்கின்றனர்.

    கடந்த 2 மாதங்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது பெரிதாக இல்லை. நாளொன்றுக்கு 400-ல் இருந்து 500-க்குள்தான் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது. இதனால் பதற்றமடைய தேவையில்லை. டெங்கு பாதிப்பை பொறுத்தவரை 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×