search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவின் முறைகேடு"

    • தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
    • அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2019-20-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை ஆவினில் மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் என 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி ஆகிய இடங்களிலும் ஆவினில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் முறையாக தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பலருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்படவில்லை.

    ''முறையாக விண்ணப்பிக்காத பலர் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இந்த பணி நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒரு பணியிடத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை பணி அமர்த்தியதாகவும்" ஆவின் நிர்வாக அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் குழு மதுரை, தேனி, திருப்பூர் நாமக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்

    இந்த விசாரணையின்போது அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் குழு ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் வழங்கியது.

    இந்த அறிக்கையை பரிசீலித்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட மொத்தம் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் பிறப்பித்துள்ளார்.

    இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

    • பச்சா பாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கோப்புகளை ஆய்வு செய்தார்.
    • சுஜித்குமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பால் பொருட்களை விற்பனை செய்து அதற்கான தொகையை செலுத்தாமல் இருந்தது அமைச்சரின் ஆய்வுக்கு பின் தெரியவந்துள்ளது.

    கோவை:

    பால்வளத்துறை அமைச்சர் நாசர் கடந்த வாரம் கோவை மலுமிச்சம்பட்டி, மதுக்கரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பச்சா பாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கோப்புகளை ஆய்வு செய்தார்.

    அப்போது பால் விற்பனை பிரிவு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து கோவை ஆர்.எஸ்.புரம் பால் விற்பனை அதிகாரியான சுப்பிரமணியம் மற்றும் சுஜித்குமார் ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். சுப்பிரமணியம் ஆவின் அண்ணா தொழிற்சங்கத்தில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

    இவர் திருப்பூர் ஆவின் பார்லர் பொறுப்பாளராக இருந்தபோது ரூ.20 லட்சமும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் பால் விற்பனை அலுவலராக பணியாற்றியபோது ரூ.70 லட்சமும் என மொத்தம் ரூ.90 லட்சம் பால் பொருட்களை விற்றும் அதில் வந்த பணத்தை ஆவினுக்கு செலுத்தாமல் இருந்து வந்தது அமைச்சரின் ஆய்வில் தெரியவந்தது.

    சுஜித்குமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பால் பொருட்களை விற்பனை செய்து அதற்கான தொகையை செலுத்தாமல் இருந்ததும் அமைச்சரின் ஆய்வுக்கு பின் தெரியவந்துள்ளது.

    அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட சில தினங்களிலேயே 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊழல் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், தவறுகள் யார் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதனால் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

    ×