search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் முற்றுகை"

    • ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது.
    • ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான பாலகுமரேசன் (வயது 48) தனது அலுவலகத்தின் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் பால்பண்ணையும், குடும்ப உணவகத்தையும் நடத்தி வந்தார்.

    இந்த ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தங்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்ட பணத்தை திருப்பி தரும்படி கேட்டும் ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் பாதிக்கப்பட்டதாக கூறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் அவர்களுக்கான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. இதனிடையே ஆதவா நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணையில் ' திடீர் திடீரென' 2 நாட்கள் பல லட்சம் மதிப்புள்ள வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் நிறுவனத்திற்கு பணம் கொடுத்தவர்கள் சார்பில் சிலர் அந்த பால் பண்ணையில் முகாமிட்டனர். இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பல்வேறு இடங்களை சேர்ந்த தற்காலிக ஆசிரியர், ஆசிரியைகள் 65 பேர் நேற்று திரண்டு வந்து அதிரடியாக பால் பண்ணைக்குள் நுழைந்தனர். தாங்கள் இந்த பால் பண்ணையின் பங்குதாரர்கள் என்று உரிமை கோரிய அவர்கள் பால குமரேசனின் விருப்பத்தின்படியே இங்கு வந்துள்ளதாகவும், மற்றவர்கள் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் குழுவினரை பார்த்து எவ்வித ஆவணமும் இல்லாத உங்களால் இந்த பால் பண்ணையை உரிமை கோர இயலாது என்றும், இதே போல் மற்றொரு தரப்பினரும் வந்தால் அது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதால் இங்கிருந்து உடனே சென்று விடுங்கள் என்றும் அறிவுறுத்தினர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த ஆசிரியர் குழுவினர் சோகத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். தொடர்ந்து பால்பண்ணையில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

    ×