search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை போராட்டம்"

    வள்ளியூர் அருகே கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடக்கு ஆச்சியூரை சேர்ந்தவர் நம்பிராஜன், விவசாயி.

    தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இவருக்கும், இவரது தம்பி ஆறுமுகவேல் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

    நம்பிராஜன் நேற்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆறுமுக வேலுவுக்கும், அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகவேல் மண்வெட்டியால் தாக்கி அண்ணனை கொலை செய்தார்.

    இது தொடர்பாக வள்ளியூர் போலீசார், ஆறுமுகவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட நம்பிராஜன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நம்பிராஜனின் மனைவி இசக்கியம்மாள், மகள்கள் ஆறுமுக செல்வி, பேச்சித்தாய் மற்றும் உறவினர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நம்பிராஜன் உடலை வாங்க மறுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இடப்பிரச்சினை தொடர்பாக எங்கள் தாத்தா காலம் முதலே எங்களுக்கும், 2 சித்தப்பாக்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

    எங்களது பாட்டி முறையாக சொத்துக்களை எழுதி வைக்கவில்லை. இதனால் சொத்தில் பங்கு கேட்டு சித்தப்பாக்கள் எங்களது தந்தைக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.

    சம்பவத்தன்று வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த எங்களது தந்தையை 2 சித்தப்பாக்களும் சேர்ந்து மண்வெட்டியால் தாக்கி கொன்றனர். கொலைக்கு தூண்டுதலாக பாட்டி, சித்தப்பா ஆறுமுகவேலின் மனைவி, மற்றொரு சித்தப்பாவின் மனைவி, அத்தை ஆகியோர் இருந்துள்ளனர்.

    ஆனால் போலீசார் ஆறுமுகவேல் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வள்ளியூர் போலீசில் புகார் செய்தோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கொலைக்கு காரணமான 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் எங்களது தந்தையின் உடலை பெற்றுக்கொள்வோம்.

    மேலும் எங்களது சகோதரர் ஒருவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவரது உயிருக்கு எங்களது சித்தப்பாக்களினால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நெல்லை அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாரதிய ஜனதா-இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    மானூர் அருகே உள்ள நெல்லை திருத்து பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர்.

    இவர் கங்கைகொண்டான் சிப்-காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் இவர் உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் களக்குடிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவரை அங்கு விட்டு விட்டு மானூர் திரும்பினார்.

    எட்டாம்குளம் அருகே வந்த போது இவர் சாலையில் விழுந்து பலியானார். போலீசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் முருகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன், நிர்வாகி பிரம்மநாயகம், பா.ஜ. மாவட்ட தலைவர் தயாசங்கர், நிர்வாகிகள் சுரேஷ், முத்துபலவேசம், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் இன்று ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு மாநகர கிழக்கு மண்டல துணைகமிஷனர் சுரேஷ்குமார், உதவி கமிஷனர் விவேகானந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது முருகன் சாவில் மர்மம் இருப்பதால் அவரது உடல் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் கூறினர்.

    சம்பவம் நடந்த இடம் மாவட்ட காவல் எல்கைக்குட்பட்ட பகுதி என்பதால் கோரிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவிக்குமாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கி மனு கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 
    ×