search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police warning"

    பஸ் மற்றும் ரெயில்களில் கல்லூரி மாணவர்கள் கலாட்டா செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் நாளை (திங்கட்கிழமை) கலைக் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்க உள்ளன.

    சுமார் 1½ மாதங்கள் கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரி செல்ல மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். பஸ், ரெயில்களில் புறநகர்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்களது முதல் நாள் பயணத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    மாணவர்கள் செய்து வந்த இந்த கோலாகல ஏற்பாடு பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. மாணவர்களின் பஸ் பயண கொண்டாட்டம் நிச்சயமாக பயணிகளுக்கு இடையூறாக மாறும் என்று தெரிய வந்தது.

    இது மாணவர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் அபாயம் இருப்பது தெரிய வந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் கலைக் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவம் நடந்து வருகிறது. குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே தான் மோதல் சம்பவம் அதிகமாக உள்ளது.

    இதை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்கள் கல்லூரிக்கு மாநகர பஸ், மின்சார ரெயில்களில் வருகிறார்கள்.

    இதில் மாநகர பஸ்சில் வரும் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் ஒரு குழு தலைவனை தேர்ந்தெடுப்பதுண்டு. அவருக்கு ‘ரூட்டு தல’ என்று பெயர் வைத்து பஸ்களில் பயணம் செய்கிறார்கள்.

    ‘ரூட்டு தல’ என்பவர் தலைமையில் செயல்படும் அவர்கள் மற்ற கல்லூரி மாணவர்களிடம் தகராறில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக பெண்களை கிண்டல் செய்வது தொடர்பாக அவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவம் நடக்கிறது.

    பஸ்சுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் தாக்கி கொள்வது, தெருக்களில் கத்தியுடன் ஓடுவது போன்ற சம்பவங்கள் சென்னையில் நடந்தன.

    இந்த நிலையில் கலைக் கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன. இதையடுத்து பஸ்களில் மாணவர்களிடையே நடக்கும் மோதல் சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    இது தொடர்பாக நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் உதவி கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம் மற்றும் துணை கமி‌ஷனர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் வரும் மாநகர பஸ் வழித்தடங்களை கண்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். பிரச்சினையில் ஈடுபடும் மாணவர்களை பெற்றோருடன் அழைத்து அறிவுரை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக போலீசார் ஒவ்வொரு பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கினார்கள். அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் நேற்று தனது அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை பெற்றோர்களுடன் அழைத்து அறிவுரை வழங்கினார்.

    போலீஸ் அறிவுரையில், “மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வழக்குகளில் சிக்கினால் எதிர்காலம் பாதிக்கப்படும். வேலை கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். பஸ்சில் செல்லும் போது கலாட்டாவில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

    சென்னை நகரில் 202 மாநகர பஸ் வழித்தடங்களில் கல்லூரி மாணவர்கள் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 75 மாணவர்கள் கலாட்டா செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 75 மாணவர்களையும் போலீசார் அழைத்து அறிவுரை கூறியுள்ளனர்.

    நாளை கல்லூரிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பஸ் வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #tamilnews

    ×