search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police warning"

    • குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
    • மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில் வீண் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    * மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    * 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை மக்கள் கேட்டறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார்.
    • பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்ரம் அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் , பெரியகோவில் பகுதியில் கடும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் விதமாக வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார். இதை மற்றொரு வாலிபர் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்.

    இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக, இருவர் குறித்து மேற்கு தஞ்சை போலீஸ் நிலையத்தினர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவினர் விசாரணை நடத்தினர்.

    இதில், வாகனத்தை ஓட்டியவர் தஞ்சை கீழவாசல் குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அருணாசலம் (வயது 23), இதை வீடியோ எடுத்தவர் குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசன்னா (24) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அருணாசலம், பிரசன்னாவுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இருவரையும் இதுபோன்று பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 

    • ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
    • தலைமறைவாக உள்ள சுகந்தாராமை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவையில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட 2 கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் குரங்கு ஸ்ரீராம், கோகுல் ஆகியோர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டனர்.

    போலீசார் விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்ததும் மாநகர போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண் உள்பட 18 பேரை தொடர்ச்சியாக கைது செய்தனர். மேலும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    ஏற்கனவே வீடியோ வெளியிட்டு கைதான கவுதம் என்பவருடன் தொடர்பில் இருந்த கணபதி காமராஜர்புரத்தை சேர்ந்த சுகந்தாராம் (வயது 26) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தியுடன் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

    இதனையடுத்து சரவணம்பட்டி போலீசார் அவர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள சுகந்தாராமை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே இவர் மீது சரவணம்பட்டி, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி, கொலைமிரட்டல், கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

    இதுபோன்று ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதனையும் மீறி சுகந்தாராம் கத்தியுடன் வீடியோ வெளியிட்டு உள்ளதால் போலீசார் அவர் கடும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    • இளைஞர்கள் அதிக சத்தத்துடன் ஹாரன் அடிப்பதும், மோட்டார் சைக்கி ளை தாறுமாறுமாக ஓட்டுவதுமாக இருந்தனர்.
    • இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி முடிந்து மாணவிகள் செல்லும்போது, மோட்டார் சைக்கிளில் வரும் சில இளைஞர்கள் அதிக சத்தத்துடன் ஹாரன் அடிப்பதும், மோட்டார் சைக்கிளை தாறுமாறுமாக ஓட்டுவதுமாக இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பள்ளி ஆசிரியர்கள் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்தனர். போதையில் இருந்த இளைஞர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆசிரியர்கள், மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்களை சிறைபிடித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடம் வந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தனர்.
    • போட்டி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரை வரை இன்று கடலில் படகு போட்டி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கடலில் காற்றும், சீற்றமும் காணப்பட்டதால் படகு போட்டி நடத்த கூடாது என்று கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர். மேலும் கன்னியாகுமரி போலீசாரும் கடற்கரைக்கு சென்று படகு போட்டி நடத்த கூடாது என்று கூறினர்.

    ஆனால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தனர். இதனால் போலீசாருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் போலீசாரின் தடையை மீறி கடலில் படகு போட்டி நடந்தது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசாரின் உத்தரவை மீறி கடலில் படகு போட்டி நடத்தியது பற்றி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    • வடநாட்டில் இருந்து வருபவர்கள், பணியாற்றும் கம்பெனிகளிலும் மற்றும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் வசித்து வருகின்றனர்.
    • வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பனியன் கம்பெனிகள் மற்றும் அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பணி செய்து வருகின்றனர். வடநாட்டில் இருந்து வருபவர்கள், பணியாற்றும் கம்பெனிகளிலும் மற்றும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 14 ந்தேதி திலகர் நகர் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றும் வடமாநிலத்தை சேர்ந்த சில வாலிபர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர்களை துரத்தி தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த பரபரப்பு இன்னும் தீராத நிலையில் கடந்த 29 ந்தேதி திருப்பூர் மாஸ்கோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில வாலிபர்கள் பாக்கு போட்டு எச்சிலை அருகில் உள்ளவர்கள் மீது உமிழ்வதாக கூறி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் துரித நடவடிக்கை எடுத்து இரு தரப்பு மோதலையும் தடுத்தனர்.

    இந்நிலையில் வட மாநிலத்தவர்கள் தொடர்பான இன்னொரு சம்பவ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை அடுத்த நியூ திருப்பூர் அருகே பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பரமசிவம்பாளையத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 29ந்தேதி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது எதிர்பாராத வகையில் மோதியுள்ளது. இதையடுத்து அங்கு திரண்ட வடமாநில கும்பல் வாகனத்தின் சாவியை பிடுங்கி கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளது. இதனால் திருப்பூரை சேர்ந்த அந்த நபர் மன்னிப்பு கேட்டு விட்டு தனது மகளுடன் மோட்டார் சைக்கிளை மீட்டு சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அது இப்போது வைரலாகியுள்ளது. இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என திருப்பூர் காவல்துறையினர் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொங்குபாளையம் ரோட்டில் 3 நாட்களுக்கு முன்புசாலையில் நடந்த சிறிய வாகன விபத்து தொடர்பாக வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் சம்பத்குமார் என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது, பொங்குபாளையம் ரோட்டில் வடமாநில தொழிலாளர் மீது இடித்ததில் கீழே விழுந்தவரின் செல்போன் சேதடைந்துள்ளது. அதை சரிசெய்ய பண உதவி கேட்டுள்ளார். அதை சம்பத்குமார் கொடுத்து விட்டு வந்துள்ளார். இதை அவரே வாக்குமூலமாக அளித்துள்ளார்.

    இதனை சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் பைக்கை பிடுங்கி அட்டகாசம் தமிழரை சுற்றி வளைத்து பணம் பறித்த வடமாநில கும்பல் என தவறான பதிவுகளை பரப்புகிறார்கள். இந்த வதந்தியை நம்ப வேண்டாம். அது பொய்யானது. இவ்வாறு வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • விதிகளை மீறினால் ஜெயில் தண்டனை, அபராதம்.
    • நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தவறு செய்த நபருக்கு 2 வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம்அ பராதம் விதிக்கப்படும்.

    கோவை,

    கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உடைப்பதற்கு விற்கப்பட்ட கார் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

    அந்த கார் ஆர்.சி. பெயர் மாற்றம் செய்யா மலேயே 10 பேர் கை மாறியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் குண்டு வைப்பதற்காகவே பழைய வாகனத்தை வாங்கியது தெரிய வந்தது.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பழைய வாகனங்களை வாங்கும் வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசார் கூறியதாவது:-

    வாகனங்கள் உடைக்கும் தொழிலில் ஈடுபடுவோர் அனைவரும் மோட்டார் வாகன பராமரிப்புத்துறை வழங்கிய உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிமத்தை தணிக்கை அதிகாரிகள் பார்வையில் படுமாறு கடையில், அலுவலகத்தில் வைக்க வேண்டும்.ஒவ்வொரு உரிமமும் 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்திருக்க வேண்டும். உரிமம் புதுப்பிக்கப்படாமல் தொழிலில் ஈடுபட்டால், தக்க சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு சுகாதார அலுவலர் மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் தொழில் நடைபெறும் இடத்திற்கான இருப்பிடத் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    விற்பனைக்கு வரும் வாகனங்களை முறைமைப் படுத்த தனி பதிவேடுகள் வைத்து பராமரிக்க வேண்டும். அந்த பதிவேட்டில் உடைப்பதற்காக வாங்கப்பட்ட வாகனத்தின் பதிவு எண்,சேசிஸ் எண், என்ஜின் எண், மாடல் உரிமையாளர் விபரம், விற்போர்களின் முகவரி மற்றும் செல்போன் எண் விவரங்கள் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வாகனத்தின் விலை போன்றவை பதிவு செய்யப்பட வேண்டும்.

    பதிவேடு ஒவ்வொரு நாளும் காலை ,மாலை தணிக்கை செய்யப்பட்டு உரிமையாளரால் கையொப்பமிடப்பட்டு இருக்க வேண்டும். இந்த பதிவேடு போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கும் போது தணிக்கைக்கு காண்பிக்கப்படல் வேண்டும்.

    வாகனங்களை விற்போர் விபரங்களை கணிணியில் பதிவேற்றம் செய்தால் அதன் நகலை மாதம் ஒருமுறை சம்மந்தப்பட்ட எல்லைக்குரிய போலீஸ் நிலைய அதிகாரியிடம் வழங்க வேண்டும்.

    கடையில் பணிபுரியும் ஊழியர்களின் முகவரி ,ஆதார் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவைகளை வைத்திருத்தல் வேண்டும். மேலும் ஊழியர்களின் இதர விவரங்களையும் மற்றும் நன்னடத்தை சான்று போலீசாரிடம் இருந்து பெற்று பராமரித்து வர வேண்டும். அரசு அலுவலர்கள் தணிக்கையின் போது கடையில் உள்ள வாகனத்தின் உதிரி பாகங்கள் குறித்த முழு விவரங்களையும் கடையின் உரிமையாளர் தெரிவிக்க வேண்டும்.

    உள்நோக்கத்தோடு தெரிந்தே தணிக்கை அதிகாரி கேட்கும் தகவலை அளிக்க மறுத்தாலோ அல்லது தவறான தகவல் அளித்தாலோ 6 மாதங்கள் ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் அபராதம் இரண்டும் சேர்ந்த தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

    கடைக்கு கொண்டு வரப்படும் வாகனங்கள் திருட்டு வாகனங்களாக இருப்பின் அல்லது சந்தேகத்திற்கு இடம் அளிக்கக் கூடிய வாகனங்களாக இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அல்லது கடையின் உரிமையாளர் திருடப்பட்ட வாகனம் என்பதை தெரிந்தே வைத்திருந்தாலும் மற்றும் அவற்றின் உடைக்கப்பட்ட உதிரி பாகங்களை விற்பனை செய்ய வைத்திருந்தாலும்,3 வருடங்கள் ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    உரிமம் இல்லாமல் பழைய வாகன உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு சாமான்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தால் ஒரு வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    2-வது முறையாக நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தவறு செய்த நபருக்கு 2 வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம்அ பராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு, சப்-கலெக்டர் (பயிற்சி) சவுமியா, உதவி கமிஷனர்கள் சரவணன், அருள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்வோர்களை போலீசார் மடக்கி பிடித்து வருகின்றனர்.
    • வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா எனவும் சோதனை செய்தனர்.

    நெல்லை:

    திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்வோர்களை போலீ சார் மடக்கி பிடித்து வருகின்றனர்.

    இன்றும் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பேட்டை காட்சி மண்டபம், டவுன், ஸ்ரீபுரம், சந்திப்பு, வண்ணார்பேட்டை, சமாதானபுரம், மார்க்கெட், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற வர்களை கண்காணி த்தனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமலும், செல்போன் பேசிக் கொண்டு சென்றவர்களை பிடித்து எச்சரிக்கை செய்தனர்.

    நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தும், இனி இதுபோன்று வந்தால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர். ஒரு சில இடங்களில் மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது. டவுன் காட்சி மண்டபம் பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்தவர்களிடம் ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை சரிபார்த்தனர். மேலும் வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா எனவும் சோதனை செய்தனர். மது குடித்து சென்றவர்களுக்கு புதிய சட்டத்தின்படி 10 மடங்கு அபராதம் வசூலித்தனர்.

    • 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.
    • தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    வெள்ளகோவில்

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் தென்புறம் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது.அணையில் இருந்து கீழ்பவானி பாசன பிரதான கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் தண்ணீர் தற்போது வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.

    இந்த நிலையில் வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் இப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள நகர, கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், வடமாநில தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நேரில் வந்து கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மேலும் இப்பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் குளிப்பதற்கு தடை என போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர்.மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைபோலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுதுள்ளார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    வட்டார போக்கு வரத்து அலுவலர் ஜெயபாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ரவிகுமார், காவேரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    விலைமதிக்க முடியாத மனித உயிர் இழப்புகளை தடுக்கவே தமிழக அரசு வருடந்தோறும் சாலை பாதுகாப்பு வார விழா நடத்துகிறது

    வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தடுக்க முடியும். தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளே விபத்துகளில் அதிகம் பேர் உயிர் இழப்பதாக சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகையால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் ஹெல்மேட் கட்டாயம் அணிய வேண்டும்.

    கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும்.

    குழந்தை பருவத்தில் வாகனம் ஓட்டக் கூடாது. குழந்தை பருவத்தில் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். செல்போன் பேசிக் கொண்டும், மது அருந்தியும் வாகனம் ஓட்டக் கூடாது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் வட்டார போக்கு வரத்து அலுவலர் ஜெயபாஸ்கர் சாலை விதிகளை பின்பற்றுவது பற்றிய துண்டு பிரசுரங்களை மாணவ -மாணவிகளுக்கு வழங்கினார்.

    வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் பிளக்ஸ் போர்டு வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் முன்பகுதி மற்றும் எதிர்புறத்தில் அனுமதியின்றி அரசியல் கட்சியினர், ஜாதிசங்கங்கள், திருவிழா, திருமணவிழா, காதணிவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் போர்டு வைக்கின்றனர்.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதை தொடர்ந்து வாடிப்பட்டி காவல் துறையினர் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.

    வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பதாதைகள், வால் போஸ்டர்கள் வைக்க அனுமதி கிடையாது. மீறினால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews

    கல்லூரிகளில் கத்தி கலாசாரத்தை புகுத்தும் முன்னாள் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் சென்னையில் அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராம் ஆகியோர் மேற்பார்வையில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் பயணிக்கும் பஸ்களிலும், ரெயில்களிலும் நேற்று முன்தினம் போலீசார் சோதனை போட்டார்கள். அப்போது பிரச்சினைக்குரிய 150 மாணவர்கள் நேற்று முன்தினம் போலீசாரிடம் பிடிபட்டனர். புத்தகப்பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருந்த 2 கல்லூரி மாணவர்கள், 3 முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.



    அமைந்தகரை பகுதியில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான 8 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் அனைவரும் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

    நேற்றும் சென்னையில் உள்ள கல்லூரிகளின் வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநில கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்பதற்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    அதேபோல பச்சையப்பன் கல்லூரியிலும் நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. நேற்று எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. தென்சென்னை பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு கூடுதல் கமிஷனர் சாரங்கன் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்ய வேண்டும்? என்று போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களோடும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு கூடுதல் கமிஷனர் சாரங்கன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள கல்லூரிகளில் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் மாணவர்கள் அமைதியாக வந்து பாடங்களை கற்று செல்ல வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள்-பொதுமக்களிடையே மோதல் சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவும், பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

    மாணவர்கள் பயணிக்கும் பஸ்கள் மற்றும் ரெயில்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். கல்லூரிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் முன்னிலையில் கல்லூரிக்குள் செல்லும் மாணவர்களிடம் சோதனை நடத்தப்படும். கல்லூரிக்குள் கத்தி கலாசாரத்தை புகுத்தி மாணவர்களிடையே குழப்பத்தை உண்டாக்கி கலவரத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குறிப்பாக முன்னாள் மாணவர்களுக்கு கல்லூரிகளுக்குள் செல்ல அனுமதியில்லை. முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள். கலவரத்தை தூண்டும் முன்னாள் மாணவர்கள் மீது தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முன்னாள் மாணவர்கள் யார்? யார்? கலவரத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது பற்றிய பட்டியலை சேகரித்து வருகிறோம். அதுபோல, தற்போது படிக்கும் மாணவர்கள் யார்? யார்? தவறான வழிக்கு செல்கிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகிறோம். மாணவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அனைத்து கல்லூரிகளிலும் கவுன்சிலிங் மூலம் அறிவுரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இனிமேல் சென்னை நகரில் உள்ள கல்லூரிகளில் கத்தி கலாசாரத்தை அனுமதிக்க முடியாது. மேலும் கல்லூரிகள் அமைதியாக செயல்பட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×