search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavoorchatram worker murder"

    கள்ளக்காதலுக்காக கள்ளக்காதலனை ஏவி கணவனை மனைவி கொலை செய்திருப்பது பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாவூர்சத்திரம்:

    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள கரிசலூரை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (வயது 42). சாக்கு தைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (37). இவர்களுக்கு அன்புபிரியா (11), சக்திபிரியா( 9) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த மாதம் 20-ந் தேதி ஆறுமுகநயினார் மனைவி, குழந்தைகளுடன் பெத்தநாடார்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றார். மறுநாள் அவர் ஊருக்கு திரும்பி வரவில்லை. அவருடைய மனைவி ஜெயந்தி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டுக்கு வந்தன‌ர். கணவரை காணவில்லை என ஜெயந்தி அதிர்ச்சியுடன் அக்கம்பக்கத்தில் கூறினார்.

    இதையடுத்து ஆறுமுகநயினாரை உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். ஜெயந்தியும் அவர்களுடன் சேர்ந்து கணவரை தேடிவந்தனர். இந்த நிலையில் 22-ந்தேதி பக்கத்து ஊரான மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள குளத்தில் ஆறுமுகநயினார் பிணமாக மிதந்தார்.

    அவரது உடலுக்கு அருகில் உள்ள குளத்துகரையில் மது பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் சிதறி கிடந்தது. இதுபற்றி பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார், ஆறுமுகநயினாரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆறுமுகநயினார் போதையில் குளத்தில் விழுந்து இறந்ததாக முதலில் கூறப்பட்டது.

    ஆனால் அவரது கழுத்தில் வெட்டுக்காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆறுமுகநயினாரின் பிரேத பரிசோதனை அறிக்கை தென்காசி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்தனர். அந்த அறிக்கையில் கழுத்து அறுபட்டு இறந்த பின்புதான் தண்ணீரில் உடல் போடப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தங்கள் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் ஆறுமுகநயினாரின் மனைவி ஜெயந்தியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    அவரது செல்போன் உரையாடல்கள் மற்றும் விபரங்களை சேகரித்த போலீசாரின் கிடுக்கி பிடி விசாரணையில் ஜெயந்தி தனது கள்ளக்காதலனான களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஜெயந்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் எனது தாய்மாமா மகன் களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த கணபதி என்பவரது மகன் தங்கராஜ் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. தங்கராஜ் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். எனது கணவரிடமும் நண்பராக பழகினார். இதனால் யாருக்கும் சந்தேகம் வராமல் இரவிலும் வந்து தங்கி இருந்து விட்டு காலையில் செல்வார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் கள்ளக்காதல் எனது கணவர் ஆறுமுகநயினாருக்கு தெரிந்துவிட்டது. இதனால் எனது கணவர் தங்கராஜை வீட்டிற்கு வரக்கூடாது என்று தகராறு செய்தார். இதே போல் என்னிடமும் நீ இனி தங்கராஜிடம் பேசக்கூடாது என்று கண்டித்தார். இதனால் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி நான் தங்கராஜிடம் கேட்டபோது, ‘உன் கணவன் உயிருடன் இருந்தால் நாம் சந்தோசமாக இருக்க முடியாது. எனவே உன் கணவனை யாருக்கும் தெரியாமல் கொலை செய்து விட்டு நாம் தப்பிவிடலாம்’ என்று கூறினார். இது எனக்கும் சரி என்று பட்டது. எனவே இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.

    எங்கள் திட்டப்படி கடந்த ஜூலை 20-ந்தேதி தங்கராஜ், ஆறுமுகநயினாரிடம் போனில் நான் உங்கள் கோயில் திருவிழாவிற்கு வருகிறேன். இனி நான் தவறாக நடக்கமாட்டேன் என்று கூறி வீட்டிற்கு வந்தார். இதனை உண்மை என்று நம்பிய ஆறுமுக நயினார், தங்கராஜூடன் கோயில் திருவிழாவிற்கு சென்றார்.

    கோயில் திருவிழா என்பதால் நாம் இருவரும் மது வாங்கி குடித்து சந்தோசமாக இருக்கலாம் என்று தங்கராஜ் கூறினார். இதற்கு ஆறுமுக நயினார் சம்மதித்தார். அப்போது மது பாட்டில் வாங்க வேண்டுமே என்று ஆறுமுகநயினார் கேட்டார். அதற்கு தங்கராஜ் நான் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டேன் என்று கூறி நாகல்குளம் குளத்து கரையில் வைத்து குடிக்கலாம் என்று குளத்துகரைக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் குளத்து கரையில் அமர்ந்து இருவரும் மது குடித்த‌னர். போதை ஏறியதும் தள்ளாடிய ஆறுமுக நயினாரை தங்கராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆட்டை அறுப்பது போல் நடு கழுத்தில் நீளமாக அறுத்து கொலை செய்தார்.

    பின்னர் ஆறுமுக நயினாரின் வேட்டியை பிடித்து தரதரவென்று இழுத்து குளத்து தண்ணீரில் தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து ஒன்றும் தெரியாதது போல் வந்து என்னிடம் கூறிவிட்டு அங்கிருந்து களக்காடு தப்பிச்சென்றார்.

    இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்தனர். அதில் தங்கராஜ், ஆறுமுகநயினாரை அழைத்துக்கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. இதைவைத்து எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து கைதான‌ தங்கராஜ், ஜெயந்தி இருவரையும் போலீசார் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையிலடைக்க உத்தர‌விட்டார். கைதான தங்கராஜ் திருமணமாகி தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×