search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nambiyar Dam"

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பாபநாசம், சேர்வலாறு அணைகள், கொடுமுடியாறு அணை, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி அணைகள், குண்டாறு, அடவிநயினார் அணைகளில் தண்ணீர் நிரம்பும் நிலையை அடைந்தது.
    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 15 மில்லி மீட்டர் மழையும், கடனாநதி அணை பகுதியில் 6 மில்லி மீட்டர் மழையும், கொடுமுடியாறு அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    தென்காசியில் 4.8 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழையும், கருப்பாநதி மற்றும் ராதாபுரம் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும், சேர்வலாறு சிவகிரி, செங்கோட்டை பகுதியில் தலா ஒரு மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. வள்ளியூர் அருகே உள்ள நம்பியாறு அணைக்கு முதலில் நீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நம்பியாறு மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், நம்பியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதன் காரணமாக விஜயன் தடுப்பணை நிரம்பி நம்பியாறு அணைக்கு தண்ணீர் வர தொடங்கியது. கடந்த 13-ந்தேதி நம்பியாறு அணை நீர்மட்டம் 12 அடியில் இருந்தது.

    இந்த நிலையில் நம்பியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நேற்று 21.84 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. நம்பியாறு அணை சிறிய அணை ஆகும். இதன் மொத்த நீர்மட்ட உயரமே 22.96 அடி ஆகும். இன்று காலை இந்த முழு அளவையும் எட்டி நீர் மட்டம் 22.96 அடியானது.

    இதைத்தொடர்ந்து அணை நிரம்பி தண்ணீர் வழிந்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொது மக்களும் நம்பியாறு அணை நிரம்பி வழிவதை ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பாபநாசம், சேர்வலாறு அணைகள், கொடுமுடியாறு அணை, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி அணைகள், குண்டாறு, அடவிநயினார் அணைகளில் தண்ணீர் நிரம்பும் நிலையை அடைந்தது.

    அணை பாதுகாப்புக்காக இந்த அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு அணையில் தற்போது தான் தண்ணீர் 90.10 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் மொத்த நீர்மட்டம் 118 அடி ஆகும்.ஆனால் 90 அடிக்கு பிறகு தான் பிரதானமாக விரிந்து காணப்படும். எனவே இதன் பிறகு நீர் மட்டம் மிகவும் குறைவாகவே உயரும். தற்போது வரை மணிமுத்தாறு அணையில் 53 சதவீதம் தண்ணீர் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்றொரு சிறிய அணையான வடக்கு பச்சையாறு அணைக்கு தற்போது தான் தண்ணீர் மிகவும் குறைந்த அளவு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஒரு அணை மட்டுமே நிரம்பாமல் தண்ணீர் மிகவும் குறைந்த அளவில் உள்ளது.

    வடக்கு பச்சையாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 50 அடி ஆகும். இந்த அணையில் தற்போது தான் 24.50 அடி நீர்மட்டம் உள்ளது. இது 22 சதவீத நீர் ஆகும். எனவே இந்த அணைக்கு மட்டுமே இன்னும் ஏராளமாக தண்ணீர் வரவேண்டியதுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து வெள்ளம் வடிந்து வருவதால், அனைத்து பகுதிகளிலும் விவசாய வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நம்பியாறு அணை நிரம்பியது. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாகவும் வெள்ளம் செல்கிறது. #Thamirabaraniriver
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக அடவி நயினார் அணை பகுதியில் 45 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு பகுதியில் 28 மில்லி மீட்டர் மழையும், நகர் புறமான செங்கோட்டையில் 19 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    பாபநாசம் அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 665 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 141.65 அடியாக உள்ளது. அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பை கருதி கால்வாய்கள் மூலம் வினாடிக்கு ஆயிரத்து 20 கன அடியும், கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 460 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 147.64 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 156 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 55 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. மேலும் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் முழு கொள்ளவையும் அடைந்து நிரம்பி வழிகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு அணைக்கும், வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் குறைந்த அளவே வந்ததால் அந்த அணைகள் நிரம்பாமல் இருந்தது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில் நம்பியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நம்பியாறு அணைக்கு தண்ணீர் வேகமாக வரத்தொடங்கியது. இன்று அணையின் நீர்மட்டம் 20.6 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 22 அடியாகும். சிறிய அணை என்பதால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 14 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 15 அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு அணைகளை தவிர மற்ற 9 அணைகளும் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    தொடர் மழை காரணமாக அணைகளில் இருந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதாலும், மழையினால் காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் வந்து சேர்வதாலும், தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாகவும் வெள்ளம் செல்கிறது.

    அகஸ்தியர் அருவியில் 4-வது நாட்களாக யாரும் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. பாபநாசம் தலையணை பகுதியிலும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    நெல்லை குறுக்குத்துறை முருகன்கோவில், தைப்பூச மண்டபம் ஆகியவைகள் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கியபடி உள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளார்கள். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் கடலுக்கு செல்கிறது. ஆனாலும் பல்வேறு கால்வாய்களில் இருந்து விவசாயத்திற்கு செல்லும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை என்று விவசாயிகள் கூறி வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த ஒரு நாள் மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்-45, குண்டாறு-28, செங்கோட்டை-19, கடனாநதி-6, பாபநாசம்-4, சிவகிரி-3, ராதாபுரம்-3, சேர்வலாறு-2, தென்காசி-2, கருப்பாநதி-1.5, ராமநதி-1

    இந்த நிலையில் இன்று பகலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் அணைகளுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. #Thamirabaraniriver



    ×