search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mango Exhibition"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாம்பழம் சாகுபடி பருவத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொப்பலில் மாம்பழ மேளாவை தோட்டக்கலைத்துறை நடத்துகிறது.
    • இந்தாண்டு மாம்பழ மேளா கடந்த மே 23-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை நடக்கிறது.

    கொப்பாலா:

    உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழ மரங்கள் ஜப்பானில் பரவலாக வளர்க்கப்படுகிறது. அதன் விலை ஒரு பவுன் தங்கத்தை விட அதிகமாக உள்ளது. மியாசாகி மாம்பழம் ஒன்று ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இப்பழம் கிலோ ஒன்றுக்கு 2.5 லட்சம் முதல் 2.7 லட்சம் ரூபாய் விலையுண்டு.

    பொதுவாக மாம்பழம் கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை இருக்கும். ஆனால் மியாசாகி மாம்பழத்தின் விலை தங்கத்தின் விலைக்கு சமமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டத்தில் கண்காட்சியில் இந்த மாம்பழம் இடம் பெற்றுள்ளது.

    மாம்பழம் சாகுபடி பருவத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொப்பலில் மாம்பழ மேளாவை தோட்டக்கலைத்துறை நடத்துகிறது. இந்நிலையில், இந்தாண்டு மாம்பழ மேளா கடந்த மே 23-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்தாண்டு மாம்பழ மேளாவில் விலை உயர்ந்த மாம்பழமான மியாசாகியை மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஒரு மாம்பழத்தை மட்டும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கண்காட்சிக்கு கொண்டு வந்தனர். இந்த அதிசய மாம்பழத்தை பொதுமக்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இதனால் இந்த சிவப்பு மியாசாகி மாம்பழம் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

    மேலும் இங்கு கொப்பல் கேசர், பென்ஷன், தாஷேரி, ஸ்வர்ணரேகா, அல்போன்சா, தோதாபுரி, ரசமாரி, புனரி மற்றும் மல்லிகா போன்ற பிரபலமான ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மேளாவில் 51 விவசாயிகள் மாம்பழங்களை விற்பனை செய்ய ஸ்டால்களை அமைத்துள்ளனர்.

    மேளாவைப் பார்வையிட்ட கடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூஸ் கடை உரிமையாளர் ராமகிருஷ்ண பெவினகட்டி கூறுகையில், "ரூ.40 ஆயிரம் விலையுள்ள ஒரு மாம்பழத்தைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மியாசாகி ஒரு கிலோ ரூ.2.50 லட்சம் என மேளாவில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேளாவுக்குப் பிறகு இந்த மாம்பழத்தை யார் சாப்பிடுவார்கள் என்று நாங்கள் ஒரு அதிகாரியிடம் கேட்டபோது, அவர் ஒரே ஒரு மாம்பழம் தான் வந்திருக்கிறது என சிரித்தபடி கூறினார்.

    இது பற்றி தோட்டக்கலை துணை இயக்குனர் கிருஷ்ணா உக்குந்த் கூறுகையில், "கொப்பல் மாவட்டத்தில் மியாசாகி சாகுபடியை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ரகத்தை விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் வளர்க்க இத்துறை வழிகாட்டும்" என்றார்.

    இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் இந்த மாமரத்தை பாதுகாக்க 3 காவலாளிகள் மற்றும் 6 வேட்டை நாய்கள் நியமித்து உள்ளார். இது குறித்து கடந்த வருடம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×