search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "France Croatia"

    வியாசர்பாடியில் இன்று இரவு பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதும் உலக கால்பந்து கால்பந்து இறுதி போட்டியை அகண்ட திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #WorldCupFinal
    பெரம்பூர்:

    இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும் உலக கால்பந்து போட்டி தொடங்கியதில் இருந்து அதன் மீது ரசிகர்கள் ஆர்வம் திரும்பியுள்ளது.

    கால்பந்துக்கு கொல்கத்தாவில்தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக வடசென்னை பகுதியில் கால்பந்து மிகவும் பிரபலம். அங்கு கால்பந்து விளையாட்டுதான் இளைஞர்களிடம் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

    வியாசர்பாடி முல்லை நகர், பக்தவச்சலம் காலனி, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், புளியந்தோப்பு கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் தினமும் இளைஞர்கள் கால்பந்து பயிற்சியில் ஈடுபடுவதை காண முடியும். அந்த அளவுக்கு வடசென்னை கால்பந்து விளையாட்டுடன் ஒன்றிபோய் இருக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்று இரவு நடக்கிறது. இதில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடக்கின்றன. இதில் உலக கோப்பையை கையில் ஏந்தும் அணி எது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    உலக கோப்பை போட்டி தொடங்கியது முதல் வட சென்னையில் ஒவ்வொரு போட்டியும் இளைஞர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். இன்று இரவு நடக்கும் இறுதி போட்டியை காண அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    இதற்காக குடிசை பகுதி குழந்தைகள் விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டு மையம் சார்பில் வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் அகண்ட திரை அமைக்கப்பட்டு உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்காக அங்கு திரை அமைக்கும் பணி உள்ளிட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.



    இதுகுறித்து நிர்வாகி தங்கராஜ் கூறும்போது, “வடசென்னை மக்களிடம் கால்பந்து ஒன்றிணைந்து விட்டது. குழந்தைகளிடம் கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் 2006-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி அகண்ட திரையில் ஒளிபரப்பு செய்தோம். தற்போது 4-வது முறையாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறோம்” என்றார்.

    இதே போல் ஹாரிங்டன் கால்பந்து அகடாமி ஐ.சி.எப். தெற்கு காலனியில் உள்ள பன்னோக்கு விளையாட்டு வளாகத்தில் கால்பந்து இறுதி போட்டி அகண்ட திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    பரபரப்பு மிகுந்த உலக கோப்பை இறுதிப்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் வியாசர்பாடி உள்ளிட்ட வடசென்னை பகுதியில் விழா கோலம் பூண்டிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் அங்கு கூடுகிறார்கள். இதனால் இன்று இரவு உற்சாகம் கரைபுரண்டு ஓடும் என்பதில் சந்தேகமில்லை. #WorldCupFinal #FRACRO
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் மோத உள்ளன. #WorldCupFinal #FRACRO
    மாஸ்கோ:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டியை எட்டின.

    இந்த நிலையில் உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், குரோஷியாவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் யுத்தத்தில் இறங்குகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.


    1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் உள்ளது. தோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது. கிரிஸ்மான் (3 கோல்), ‘இளம் புயல்’ கைலியன் பாப்பே (3 கோல்), பால் போக்பா, ஆலிவர் ஜீருட், ரபெல் வரானே உள்ளிட்டோர் பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். இவர்கள், களத்தில் இறங்கி விட்டால் புயல்போல் சுழன்று எதிரணியை உலுக்கி விடும் திறமை படைத்தவர்கள். இளமையும், அனுபவமும் கலந்த பிரான்சுக்கே இப்போது வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.


    அரைஇறுதியில் பெல்ஜியத்துக்கு எதிராக ஒரு கோல் அடித்த பிறகு ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத பிரான்ஸ் அணியினர், அதன் பிறகு முழுமையாக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இது மந்தமான யுக்தி என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் குரோஷிய வீரர்கள் தாக்குதல் தொடுப்பதில் கில்லாடிகள் என்பதால் பிரான்சும் தனது வியூகங்களை கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் பின்களத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறார்.

    இந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்ததும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியாவின் எழுச்சியை பறைசாற்றுகிறது. மூன்று ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்களிலும் பின்தங்கிய நிலையில் இருந்து சளைக்காமல் போராடி வெற்றிப்பாதைக்கு திரும்பிய குரோஷிய வீரர்கள் மனவலிமை மிக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை.


    தங்கப்பந்து விருது வெல்லும் வாய்ப்பில் உள்ள கேப்டன் லூக்கா மோட்ரிச்சும், இவான் ராகிடிச்சும் உலகின் தலைச்சிறந்த நடுகள வீரர்களாக வர்ணிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இவான் பெரிசிச், மரியோ மான்ட்ஜூகிச், வர்சல்ஜ்கோ ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். முதல்முறையாக இறுதி சுற்றை அடைந்துள்ள குரோஷியா, உலக கோப்பையை வசப்படுத்தி புதிய சரித்திரம் படைக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டி நிற்கும்.

    இந்த போட்டியை பொறுத்தவரை இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் விளங்குவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம். ஆனால் முதல் கோல் போடும் அணியின் கை எளிதில் ஓங்கிவிடும். இவ்விரு அணிகளும் உலக கோப்பையில் இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு அரைஇறுதியில் சந்தித்து இருந்தது. இதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பழிதீர்க்க குரோஷிய வீரர்கள் தங்களது முழு ஆற்றலையும் களத்தில் கொட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.


    கடைசியாக நடந்த மூன்று உலக கோப்பை இறுதி ஆட்டங்களும் கூடுதல் நேரத்திற்கு சென்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆட்டம் கூடுதல் நேரத்திற்கோ அல்லது பெனால்டி ஷூட்-அவுட்டுக்கோ சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் குரோஷியா ஏற்கனவே 2-வது சுற்று மற்றும் கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட் அனுபவத்தை சந்தித்து இருக்கிறது.

    இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    இறுதிப்போட்டியில் களம் காணும் உத்தேச அணி பட்டியல் வருமாறு:-


    பிரான்ஸ்: ஹூகோ லோரிஸ் (கோல் கீப்பர்), பெஞ்சமின் பவார்ட், ரபெல் வரானே, சாமுல் உம்டிடி, லுகாஸ் ஹெர்னாண்டஸ், பால் போக்பா, நிகோலோ கன்ட், கைலியன் பாப்பே, கிரிஸ்மான், பிளைஸ் மடுடி, ஆலிவர் ஜீருட்.

    குரோஷியா: டேனிஜெல் சுபசிச் (கோல் கீப்பர்), சிம் வர்சல்ஜ்கோ, டேஜன் லோவ்ரென், டோமாகோஜ் விடா, இவான் ஸ்டிரினிச், ராகிடிச், மார்சிலோ புரோஜோவிச், ஆன்ட் ரெபிச், லூக்கா மோட்ரிச், இவான் பெரிசிச், மான்ட்ஜூகிச்.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென்2, டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.  #WorldCup #WorldCupFinal #WorldCup2018 #FrancevsCroatia #FRACRO
    ×