search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female baby sold"

    தெலுங்கானா மாநிலத்தில் மனைவி எதிர்ப்பை மீறி பெண் குழந்தை ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் பிபிநகர் மண்டலம் சின்ன பலுகு தண்டா கிராமத்தை சேர்ந்தவர் புக்யாசேகர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பத்ரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் 3-வது முறையாக கர்ப்பம் அடைந்த பத்ரிக்கு அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. வருமானம் குறைவாக இருப்பதால் அப்பெண் குழந்தையை விற்க தந்தை புக்யாசேகர் முடிவு செய்தார்.

    அதற்கு அவரது பெற்றோர், மற்றும் பத்ரியின் சகோதரர் பாண்டு ஆகியோர் சம்மதித்தனர். இதை அறிந்த பத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்து கணவரிடம் சண்டை போட்டார்.

    அவரை கணவர், மாமனார், மாமியார் மிரட்டினர். குழந்தையை கொடுக்காவிட்டால் வீட்டுக்கு அழைத்து செல்ல மாட்டோம் என்றனர். அதனால் வேறு வழியின்றி குழந்தையை கொடுத்தார்.

    இதையடுத்து இடைத்தரகர் மூலம் பெண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு ஒரு தம்பதியினருக்கு விற்றனர்.

    குழந்தையை விற்றது தொடர்பாக குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் போலீசிடம் புகார் செய்தனர். போலீசார் புக்யாசேகர், அவரது பெற்றோரிடம் விசாரித்த போது குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டனர்.

    பத்ரியின் சகோதரர் பாண்டு ஏற்பாட்டில் நரசிங்கராவ் என்பவர் தனது உறவினர் நரசிம்மராவுக்கு குழந்தையை விற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தந்தை புக்யாசேகர், அவரது பெற்றோர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ×