search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore robbery"

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சண்முகம். சத்துவாச்சாரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    நேற்று இரவு வெளியூர் சென்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், அவரது மனைவி வேலூர் வந்தனர். வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன.

    இதனைக்கண்டதும் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    போலீஸ் குடியிருப்பில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கொள்ளை நடந்த போலீஸ் குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்கள் வரும் இடங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் 3-வது கண்ணாக விளங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் போலீஸ் குடியிருப்புகளில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் போலீசார் குடும்பத்தினர் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது.

    அனைத்து போலீஸ் குடியிருப்புகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
    வேலூர் தொரப்பாடியில் இளம்பெண்ணிடம் 2 வாலிபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ஆசாத் ரோட்டை சேர்ந்தவர் சேட்டு இவரது மனைவி சாயினா (வது 25). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள காந்திஜி 3-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சாயினாவிடம் முகவரி விசாரிப்பது போல் அவர் அணிந்திருந்த நகையை கழட்டி கொடுக்கும் படி மிரட்டினர். அதிர்ச்சியடைந்த சாயினா உயிருக்கு பயந்து தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை கழட்டி கொடுத்தார்.

    செயினை வாங்கி கொண்ட அந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது சாயினா கத்தி கூச்சலிட்டார் அதற்குள் அந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

    இது குறித்து சாயினா பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    வேலூரில் இது போன்று தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.37 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள நாராயணபுரம் எம்.எம்.எம். ரெட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (வயது 55). தொழிலதிபர். இவர் தனது குடும்பத்தோடு நேற்று முன்தினம் மைசூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். 4 பீரோக்களில் இருந்த 65 பவுன் தங்க நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள், வைர கம்மல்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

    நேற்று காலை ஜோதீஸ்வரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டியிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜோதீஸ்வரனுக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இது குறித்து ஜோதீஸ்வரன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திருப்பத்தூர் டி.எஸ்.பி.தங்கவேலு, ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தது பார்வையிட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் பைனான்சியர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றன.
    வேலூர்:

    வேலூர் தென்னமரத் தெருவை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50). பைனான்சியர். ஊதுபத்தி ஏஜென்சி தொழில் செய்து வருகிறார்.

    நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் கதவை உடைத்து அங்கு சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை வீடு திரும்பிய பன்னீர் கதவு உடைந்து கிடப்பதையும், பீரோ திறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வேலூர் மாநகர பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×