search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvaiyaru Thyagaraja Aradhana"

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை தஞ்சாவூருக்கு வருகிறார்.
    • கவர்னர் வருகையையொட்டி தஞ்சை மற்றும் திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

    இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளையுடன் இந்த விழா முடிவடைகிறது.

    நாளை காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடைபெற உள்ளது. இந்த விழாவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நாளை காலை 7.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பின்னர், காலை 9 மணி முதல் 10 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதையடுத்து, காலை 10 மணிக்கு நாகசுரம், 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை, முற்பகல் 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் உள்பட தொடர்ந்து இரவு 10.20 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனிடையே, இரவு 8 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் வீதி உலா நடைபெறவுள்ளது.

    இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை தஞ்சாவூருக்கு வருகிறார். தஞ்சாவூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கும் அவர், தொழில், வர்த்தக சங்க பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்.

    பின்னர் நாளை காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தில் பங்கேற்று, மீண்டும் ஓட்டலுக்கு திரும்பிய பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். இதையடுத்து, பிற்பகலில் புறப்பட்டு திருச்சிக்குச் சென்று விமானம் மூலம் சென்னைக்குச் செல்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டி தஞ்சை மற்றும் திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×