search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thai thiruvizha"

    ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
    நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று ஆயில்ய நட்சத்திரம் ஆகும். எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகராஜா கோவிலுக்கு வழிபாடு நடத்த வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை 4 மணியில் இருந்தே குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

    அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளாவை சேர்ந்தவர்களும் ஏராளமானவர்கள் நாகராஜா கோவிலுக்கு வந்திருந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ் சள் பொடி தூவியும் வழி பாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்கு அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு நாகராஜரை வணங்கச் சென்றார்கள். ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    இந்த பூஜைகளில் ஆண்களும், பெண்களும் திரளாக பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து சிவன், அனந்த கிருஷ்ணர் ஆகிய சாமிகளை பக்தர்கள் வணங்கினார்கள். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் தைத்தேர் திருவிழாவின் 4-ம் நாளான நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு 4 உத்திர வீதிகளில் வலம் வருகிறார். 3-ம் நாளான நேற்று காலை நம்பெருமாள் சிம்மவாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 4.45 மணிக்கு வாகன மண்டபம் வருகிறார். அங்கிருந்து காலை 5.15 மணிக்கு இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 12 மணிக்கு வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.

    வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    நாளை(புதன்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 17-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 18-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருகிறார். 19-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 20-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் 4 உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 21-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான 22-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு தை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தந்திரி நீலகண்டபட்டதிரி திருக்கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து கொடி மரத்துக்கு தீபாராதனை நடந்தது.

    இதில் நீதிபதிகள் ஜாண் ஆர்.டி.சந்தோஷம், கோமதிநாயகம், திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, தாசில்தார் அணில்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வணங்கிவிட்டு நாகராஜரை தரிசனம் செய்தனர்.

    நேற்று இரவில் பக்தி பாடல் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. அதைத் தொடர்ந்து புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளினார்.

    இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, மண்டகப்படி, இன்னிசை கச்சேரி ஆகியவற்றை தொடர்ந்து புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    15-ந் தேதி இரவு சிங்க வாகனத்திலும், 16-ந் தேதி இரவு கமல வாகனத்திலும், 17-ந் தேதி இரவு ஆதிசேஷ வாகனத்திலும், 18-ந் தேதி யானை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 21-ந் தேதி அதாவது 9-ம் நாள் திருவிழாவன்று காலை 7 மணிக்கு நடக்கிறது. அதன்பிறகு அன்னதானம் வழங்கப்படுகிறது. 10-ம் நாள் திருவிழாவன்று சப்தாவர்ணம் நடைபெற உள்ளது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் தை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலும் ஒன்று. நாகதோஷ பரிகாரத் தலங்களில் இந்த தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் தைப்பெருந் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 10 நாள் தை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6.15 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7.15 மணிக்கு இன்னிசை, 8.15 மணிக்கு சிறப்பு பரதநாட்டியம், 9 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    திருவிழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சுவாமி வாகனத்தில் எழுந்தருளல், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் போன்றவை நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு தேரை வடம்தொட்டு இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தேர் நாலு ரத வீதிகளையும் சுற்றி வரும். 9.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு இசை பட்டிமன்றம், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழாவான வருகிற 22-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம், 9.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    நாகராஜா கோவில் தேரோட்ட விழாவன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற பிப்ரவரி மாதம் 2-வது சனிக்கிழமை (9-ந் தேதி) குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும். வருகிற 21-ந் தேதி குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக்கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×