என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம்பெருமாள் யாளி வாகனத்தில் உள்திருவீதிகளில் வலம் வந்த போது எடுத்த படம்.
    X
    நம்பெருமாள் யாளி வாகனத்தில் உள்திருவீதிகளில் வலம் வந்த போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம்: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் இன்று வீதி உலா

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் தைத்தேர் திருவிழாவின் 4-ம் நாளான நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு 4 உத்திர வீதிகளில் வலம் வருகிறார். 3-ம் நாளான நேற்று காலை நம்பெருமாள் சிம்மவாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 4.45 மணிக்கு வாகன மண்டபம் வருகிறார். அங்கிருந்து காலை 5.15 மணிக்கு இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 12 மணிக்கு வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.

    வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    நாளை(புதன்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 17-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 18-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருகிறார். 19-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 20-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் 4 உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 21-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான 22-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×