search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Government Hospital"

    நெல்லை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் டாக்டர் கல்யாண்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். #Swineflu
    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பல பகுதிகளில் பன்றி காயச்சல் பாதிப்பு இருந்தது. சுகாதார துறை நடவடிக்கையை தொடர்ந்து இந்த காய்ச்சல் பாதிப்பு வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் நெல்லையில் அரசு டாக்டர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பாளை ரகுமத் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கல்யாண்குமார். இவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த 4 நாட்களாக தீராத காய்ச்சலும், இருமலும் இருந்துள்ளது.



    இதையடுத்து சந்தேகமடைந்த அவர் ரத்த பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவக்கல்லூரி டீன் கண்ணன் தலைமையிலான டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

    மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா எனவும் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து டீன் கண்ணன் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் டாக்டர் கல்யாண்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உரிய சிகிச்சையளிக்கப்படுகிறது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் இல்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார். அதற்காக ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் சோதனை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் யாரும் அனுமதிக்கப்பட்டது இல்லை. இப்போது தான் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பாளை ரகுமத் நகரில் வேறு யாருக்கேனும் பன்றிக் காய்ச்சல் உள்ளதா? எனவும் ஆய்வு நடத்தி வருகின்றனர். #Swineflu

    தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்த 44 போலீசார் நெல்லையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் ஏராளமான வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியானதுடன், ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    அதுபோல போராட்டம் நடத்தியவர்கள் கல்வீசி தாக்கியதில் ஏராளமான போலீசாரும் காயம் அடைந்தனர். போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயம் அடைந்த அனைவரும் தூத்துக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து காயம் அடைந்த போலீசார்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற உத்தரவிடப்பட்டது. நேற்று நடந்த கலவரத்தில் 10 பெண் போலீசார் உள்பட 44 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இவர்களில் தலையில் பலத்த காயம் அடைந்த எட்டயபுரம் எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏட்டு ஜெய்சங்கர் பாளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேரி ஜகிர்தா (41), சகாய ராபின் (26), சோபியா (25), நித்யா (25), சபுரா பானு (30), கிரேஸ் மரியம்மாள் (36), பிரியா (33), செல்வராணி (43), அஜிதா (40), ஆகிய 10 பெண் போலீசாரும், அருண் கிறிஸ்டோபர் (26), அருண்குமார் (26), மணிரத்னம் (25), மனோ (27), சத்திய மூர்த்தி (27) உள்பட 33 போலீசார் காயம் அடைந்து பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதில் இன்று காலை 20 போலீசார் சிகிச்சை முடிந்து தங்கள் பணிக்கு திரும்பினர். 10 பெண் போலீசார் உள்பட 23 போலீசாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×