search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian culture"

    • ஸ்ரீபகவத் கீதை உணவு பழக்கத்திற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பினை விளக்குகிறது
    • அசைவ உணவு பழக்கத்தை கைவிடுவது கடினமான செயல் அல்ல

    இந்தியாவில் பெரும்பாலானோர்கள் அசைவம், சைவம் இரண்டையும் உண்பவர்களாகவும், குறைந்தளவில் சில பேர் சைவ உணவை மட்டுமே உண்ணும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். பிற நாடுகளில் பெரும்பாலும் அசைவ உணவே அன்றாட உணவு.

    சைவ உணவு பழக்கத்திலேயே பால் மற்றும் பாலினால் தயாரிக்கப்படும் பொருட்களையும் உணவில் தவிர்க்கும் முறை வேகனிசம் எனப்படுகிறது. வேகனிசத்தை கடைபிடிப்பவர்கள் மிகவும் குறைவானவர்கள்.

    இன்று அக்டோபர் 1, 'உலக சைவ தினம்' என கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு மனிதரும் கடைபிடிக்கும் உணவு பழக்கம், அவர்களின் உடல் பலம், மன உறுதி மட்டுமின்றி ஆன்மிக தேடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இந்தியாவில் பண்டைய காலம் முதல் சைவ உணவு பழக்கம் பெரிதும் போற்றப்படுகிறது. இந்திய கலாச்சாரம் போர், உயிர் கொலை, மிருக வதை உட்பட பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்து அதனால் பெறப்படும் எந்த வெற்றியையும் இன்பத்தையும் ஆதரிப்பதில்லை.

    அசைவத்தை அறவே ஒதுக்குமாறு கூறாவிட்டாலும் இந்திய கலாச்சாரத்திலும், இந்து மத நூல்களிலும் சைவ உணவு மிகவும் உயர்வாக பேசப்படுகிறது. இந்து மத புனித நூல்களில் ஒன்றான ஸ்ரீபகவத் கீதையில் உணவு பழக்கத்திற்கும் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பது விளக்கப்படுகிறது.

    நாம் கொண்டாடும் பண்டிகைகளிலும், பழக்க வழக்கங்களிலும் சில தினங்களுக்கு அசைவத்தை ஒதுக்கி வைப்பது நமது குடும்பங்களில் காலம் காலமாக நடக்கிறது.

    உடலாரோக்கியத்தில் செரிமானமே முக்கிய பங்கு வகிக்கிறது என அனைத்து மருத்துவ முறைகளும் ஏற்கின்றன. நல்ல செரிமானத்திற்கு சைவ உணவு உதவுவதை ஆங்கிலேய மருத்துவர்களே ஒப்பு கொள்கின்றனர்.

    குழந்தைகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், திருமணமானவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்பட்டவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் வயோதிகர்கள் உட்பட அனைவருக்கும் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சைவ உணவிலேயே தேவைக்கு அதிகமாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நம்மில் பலர் அசைவ உணவு வகைகள் எங்கெங்கு கிடைக்கின்றன என்பதை தேடி தெரிந்து கொண்டு அங்கு சென்று ஒரு பிடி பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு உயிரை பலவந்தமாக கொன்று அதன் மாமிசத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவினால் நாவிற்கு கிடைக்கும் சுவைக்கு அடிமையாகி அசைவத்தை உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் பலர் தவிக்கின்றனர்.

    ஆனால், அது அத்தகைய கடினமான செயல் அல்ல.

    மீன்கள், கோழிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் மனிதர்களை போன்றே உணர்வுள்ள ஜீவன்கள்தான். தன்னிடம் சிக்கி கொண்ட மனிதர்களை பிற மனிதர்கள் கொல்லும் போது, சிக்கியவர்களுக்கு ஏற்படும் வலியும், அச்சமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு மிக தீவிரமானது.

    உணவுக்காக கொல்லப்படும் உயிரினங்களும், அவை கொல்லப்படும் சில நொடிகள் இதே போன்றுதான் பரிதாபமாக தவிக்கும் என்பதை சில வினாடிகள் உணர்ந்து சிந்தித்தால், நம் மனதில் தோன்றும் இரக்கமே அசைவ உணவு பழக்கத்திலிருந்து நம்மை விடுபட வைக்கும்.

    தன்னூன் பெருக்கற்கு தான்பிறிது ஊனுண்பான்

    எங்ஙனம் ஆளும் அருள்

    தன் உடம்பை பெருக்க செய்வதற்காகவே மற்றோரு உயிரின் உடம்பை தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும் எனும் திருக்குறள் வாசகங்களை உணவு மேசைக்கருகே சுவற்றில் மாட்டி வைத்தால், தட்டில் அசைவம் இருந்தாலும் எடுத்து உண்ண மனம் வருமா?

    ×