search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DAMAGE TO PADDY"

    • அறுவடைக்கு தயாரான 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது
    • பயிர்களை கையில் ஏந்தி கண்ணீர்வடிக்கும் விவசாயிகள்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுக்காக்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர்.

    கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல் இந்தாண்டு உரிய நேரத்தில் பருவமழை தொடங்கி அவ்வப்போது சிறு சிறு மழையாக பெய்தது. இதன் மூலம் கிடைத்த நீரை விவசாயிகள் நீர் நிலைகளில் சேமித்து வைத்து விவசாயம் செய்தனர். மேலும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள இடங்களில் வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து விவசாயிகள் விவசாயம் செய்திருந்தனர்.

    அவ்வாறு காப்பாற்றப்பட்டு வந்த நெற்பயிர்கள் நல்ல முறையில் விளைந்து அறுவடைக்கு தயாரானது. இன்னும் இரண்டொரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நேற்று பெய்த தொடர் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் மூழ்கிய பயிர்களை கையில் எடுத்து கண்ணீருடன் பார்த்து வேதனையடைந்தனர்.

    இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் விவசாயிகள் நாங்கள் ஆண்டு தோறும் அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம், நகைகளை வைத்தும், விவசாயக் கடன்கள் வாங்கியும் ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்தோம். இந்தாண்டு போதிய மழை இல்லாவிட்டாலும் கிடைத்த தண்ணீரை கொண்டும், வெளியிலிருந்து வாங்கியும் விவசாயம் செய்திருந்தோம். முழு விளைச்சல் இல்லாவிட்டாலும் விளைந்த நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது பெய்து வருகிற தொடர் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகிவிட்டது. எனவே விவசாயிகளின் துயர நிலையை அரசு அறிந்து பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    • அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    புதுக்கோட்டை

    அன்னவாசல் சுற்றுவட்டார பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. இந்தநிலையில் இரண்டாவது நாளாக நேற்று மாலை அன்னவாசல், இலுப்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த தொடர் மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் அன்னவாசல் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்பட்டது. குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த தொடர் மழையால் அன்னவாசல் அருகே உள்ள பரம்பவயல் பெரிய கண்மாய் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர், நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    மேலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள வாய்க்கால், குளங்கள், வாரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ×