search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore hospital"

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலியானர். இந்தநிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த கர்ப்பிணி பெண் உள்பட 5 பேருக்கு பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. #DengueFever #Swineflu

    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பருவமழை காரணமாக பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி . இவரது மகன் தமிழரசன் (வயது 19). இவர் உடுமலையில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தமிழரசன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து அவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    அவரது ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது தமிழரசனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு கொசுவலையுடன் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டு.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு தமிழரசன் பரிதாபமாக இறந்தார்.

    இதனையடுத்து காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க மருத்துவ குழுவினர் தமிழரசன் வசித்த பகுதி, படித்த கல்லூரி ஆகியவற்றில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த கர்ப்பிணி பெண், அவரது கணவர், மாமியார் ஆகியோர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.

    இதற்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்கள் ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர்களுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தார். எனவே 3 பேரையும் டாக்டர்கள் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஏற்கனவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பன்றி காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 35 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் என மொத்தம் 37 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்புடன் தினசரி ஏராளமானோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்புகள் உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது.

    காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று முகாம் அமைத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கையுடன் கொசுவலை கட்டிய சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

    இங்கு நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சைகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. #DengueFever #Swineflu

    ×