search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Centre orders"

    டெல்லியில் 3 சிறுமிகள் பட்டினியால் இறந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. #SiblingDeath #StarvationDeath
    புதுடெல்லி:

    டெல்லியில் மந்தவாலி என்ற பகுதியில் மங்கள் என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். ரிக்‌ஷா தொழிலாளியான இவருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

    இவருடைய மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் இவர்களின் 8, 5, 2 வயது பெண் குழந்தைகள் பட்டினியால் தவித்தனர். வருவாய் இல்லாததால் வீட்டுக்கு வாடகையும் கொடுக்க முடியவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அவர்களை காலி செய்ய சொன்னார்.



    அதை தொடர்ந்து வேறு பகுதிக்கு மங்கள் குடும்பத்துடன் குடியேறினார். அப்போது அவருடைய ரிக்‌ஷா திருட்டு போய் விட்டது. வீட்டில் இருந்த உணவு பொருட்களுள் தீர்ந்தது. இதனால் அக்கம்பக்கத்தினரிடம் உணவு வாங்கி சிறுமிகள் சாப்பிட்டனர். பின்னர் அவர்களின் உதவியும் கிடைக்கவில்லை.

    இதனிடையே மங்கள் வேலைக்காக வீட்டை விட்டு சில நாட்களுக்கு முன்பு சென்றார். தந்தை, தாய் கவனிப்பு இல்லாததால் 3 சிறுமிகளும் பட்டினியால் வீட்டில் முடங்கி கிடந்தனர்.

    இந்நிலையில், மயங்கிய நிலையில் 3 சிறுமிகளும் 24-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 3 சிறுமிகளின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து டாக்டர்கள் கூறுகையில், அந்த சிறுமிகளின் வயிற்றில் உணவோ, தண்ணீரோ எதுவும் இல்லை. அவர்கள் சாப்பிட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

    இது குறித்து மாநில அரசு தரப்பில் கூறுகையில், ஆம் ஆத்மி அரசு வீடு தேடி ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய கவர்னரின் அனுமதியை கேட்டது. ஆனால் கவர்னர் இதற்கு அனுமதி வழங்காததால் தான் இந்த சம்பவம் நடந்ததாக குற்றம்சாட்டியது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

    இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் ரமேஷ் பிதூரி, மகேஷ் கிரி ஆகியோர் பேசுகையில், ‘டெல்லியில் ரேஷன் வினியோகத்தில் ஊழல் நடக்கிறது. மானிய விலை ரேஷன் பொருட்கள் ஏழை மக்களை சென்றடைவது கிடையாது. துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா தொகுதியில் தான் இந்த பட்டினிச்சாவு நடந்து உள்ளது. மக்களை பட்டினியால் சாகடிக்கும் இந்த அரசு இனியும் இருக்கக்கூடாது. உடனே ஆம் ஆத்மி அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

    மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஷ் சந்திர மிஸ்ரா பேசும்போது, ‘பட்டினிச்சாவு விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’ என கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் பதில் அளிக்கையில், ‘இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அதே சமயம் பட்டினியால் தான் சிறுமிகள் இறந்தார்களா? என உறுதியாக தெரியவில்லை. பத்திரிகை செய்திகளை வைத்து உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது’ என்றார்.

    காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசுகையில், ‘இதை முக்கிய பிரச்சினையாக எடுத்து விவாதிக்க வேண்டும்’ என்றார். ‘அரசு ஏழ்மையை ஒழிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது’ என ராவ் இந்தர்ஜித் சிங் பதில் அளித்தார்.

    இதனிடையே பட்டினிச்சாவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று உத்தரவிட்டார்.  #SiblingDeath #StarvationDeath #tamilnews
    ×