search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 youths dies"

    களக்காடு அருகே நள்ளிரவில் வேன் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழச்சாலைப்புதூரை சேர்ந்தவர்கள் முருகன் மகன் முத்துராஜ் (வயது28), சாமி மகன் மகேஷ் (27). இவர்கள் விவசாய கூலி தொழிலாளர்கள் ஆவார்கள். நேற்று இவர்கள் மற்ற தொழிலாளர்களுடன் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் வாழைத்தார் சுமக்கும் பணிக்கு சென்றனர்.

    இரவில் வேலை முடிந்ததும் முத்துராஜ், மகேஷ் உள்பட 12 தொழிலாளர்கள் ஒரு ஆட்டோவில் நாங்குநேரியில் இருந்து களக்காடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை கீழ வடகரையை சேர்ந்த செல்லையா மகன் வேல் முருகன் (27)ஓட்டி வந்தார்.

    இதுபோல் களக்காட்டில் இருந்து ஒரு வேன் புறப்பட்டு நாங்குநேரிக்கு சென்று கொண்டிருந்தது. சுப்பிரமணியபுரம் அருகே சுந்தரபாண்டியபுரம் பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது எதிர் பாராதவிதமாக வேனும், ஆட்டோவும் நேருக்கு நேராக பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

    அதில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கதறினர். தகவல் அறிந்து வந்த களக்காடு போலீசாரும், அப்பகுதி பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முத்துராஜ், மகேஷ், மகேஷின் சகோதரர் ரமேஷ் (25), ராதா கிருஷ்ணன் (17), ஜெகநாதன் (23), சசிகுமார் (19), செல்வ குமார் (16), ரமேஷ் (26), சுதாகர் (24), சேகர் (40), லெட்சுமணபாண்டி (49), பாலகிருஷ்ணன் (22) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலன் இன்றி முத்துராஜ், மகேஷ் இருவரும் இரவில் உயிரிழந்தனர். ராதாகிருஷ்ணன் உள்பட 9 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாலும், 9 பேர் படுகாயம் அடைந்ததாலும் அவர்களது சொந்த ஊரான கீழச்சாலைப் புதூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. விபத்து பற்றி சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா ஆட்டோ டிரைவர் வேல் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×