search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை காங்கிரஸ் தலைவர்"

    • முன்னாள் ஆலய தர்மகர்த்தாவும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா ஆஜரானார்.
    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக விசரணை நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக விசரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விசாரணையில் ஆஜராவதற்காக தெற்கு கள்ளிகுளம் முன்னாள் ஆலய தர்மகர்த்தாவும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா ஆஜரானார்.

    அவரிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயக்குமார், மரண வாக்குமூலம் என்ற பெயரில் எழுதி இருந்த முதல் கடிதத்தில் தனது உயிருக்கு ஆபத்து இவர்களால் நேரலாம் என்று பலரது பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

    அதில் முதல் நபராக ஆனந்த ராஜாவின் பெயரை குறிப்பிட்டு இருந்ததார். இந்நிலையில் இன்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஜெயக்குமாரின் நண்பர்கள், உறவினர்கள், என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
    • வாக்குமூலங்களை போலீசார் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், வேலையாட்கள், ஊர் மக்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் சிக்கியுள்ள ஆதாரங்கள், சாட்சியங்களின் வாக்குமூலங்களை போலீசார் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர். கடந்த 4-ந்தேதி ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய நாள் மற்றும் அதற்கு அடுத்த நாள் வரை கரைசுத்துபுதூர் சுற்றுவட்டாரத்தில் அதிகம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் பட்டியலை எடுத்துள்ளனர். அதன் மூலம் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் ஒரு திருப்பம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஜெயக்குமார் வழக்கில் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களிடம் ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர் எழுத்து பூர்வமாக வாங்கிய தகவல்களை ஆராயும் பணி நடக்கிறது.

    1,500 பக்கங்கள் கொண்டதாக ஒப்படைக்கப்பட்ட அந்த தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் கவனமாக படித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஜெயக்குமார் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார்.
    • வங்கிகளை நாடுவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயக்குமார் உடல் கிடந்த இடம், அவரது தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள், பணிப்பெண்கள், உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடதப்பட்டுள்ளது.

    அவர் கடந்த 4-ந் தேதி பிணமாக மீட்கப்படுவதற்கு முன்பு வரை கடைசியாக 3 நாட்களுக்கு எங்கெல்லாம் சென்றார்? அவருடன் அதிக நேரம் இருந்தவர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயக்குமார் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார். அவற்றை ஆய்வு செய்ய வங்கிகளை நாடுவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு, ஜெயக்குமார் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு சென்று கடைசி 2 ஆண்டுகள் அவரது வங்கி கணக்கில் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்கின்றனர். அவரது வங்கி கணக்கிற்கு யாரெல்லாம் பணம் செலுத்தி உள்ளனர்? ஜெயக்குமார் யாருக்கெல்லாம் பணம் அனுப்பி உள்ளார்? என்பது குறித்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே நேரத்தில் மற்றொரு குழுவினர் திசையன்விளை பஜார் பகுதியில் உள்ள விடுதிகளில் கடைசி 2 மாதங்கள் வந்து தங்கி இருந்தவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில், அவர் கடிதத்தில் எழுதி வைத்திருந்த அவர்களுக்கு சம்மன் அனுப்பவும், தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பவில்லை.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஜெயக்குமாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது தோட்டத்திலும் சென்று மீண்டும் ஆய்வில் ஈடுபட்டனர். தோட்டத்தை முழுமையாக அளவீடு செய்தனர். பின்னர் ஆய்வு நடத்தி கிடைக்கப்பெற்ற தடயங்களை சேகரித்தனர்.

    இந்நிலையில் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 4 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. நடத்திய விசாரணை மற்றும் தோட்டத்தில் நடத்திய ஆய்வுகளில் கிடைத்துள்ள சில தடயங்களையும், ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசார் தங்களது விசாரணையின்போது சேகரித்து ஒப்படைத்துள்ள தடயங்களையும் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் ஒப்பிட்டு பார்த்து அதன்மூலம் ஏதேனும் புதிய தகவல்கள் கிடைக்குமா? என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட போலீசார் விசாரணையில் என்னென்ன செய்தார்கள் என்பதை ஆய்வு செய்து, அவர்கள் செய்ய தவறியவற்றை குறிப்பெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பவில்லை. தற்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிசெய்து வருகிறோம்.

    அதன்பின்னர் அவர்களுக்கு பதிவு தபால் அனுப்புவதற்கு தேவையான பணிகள் நடக்கும். இன்னும் சில நாட்களில் சம்மன் அனுப்பப்படும். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை ஒரு வாரத்தில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 32 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    • தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 4 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை தேடுதல், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் சம்பவத்தன்று நடந்தவற்றை எழுத்துப்பூர்வமாக வாக்குமூலமாக பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இன்று ஜெயக்குமார் மரண வழக்கில் ஏற்கனவே போலீசாரால் விசாரிக்கப்பட்ட அவரது உறவினர்கள், தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். இதற்காக ஒரு குழு கரைசுத்துபுதூருக்கு சென்று இந்த விசாரணையை மேற்கொள்கின்றனர்.

    மேலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசி 2 நாட்கள் வந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் விபரங்களை கேட்டறிய முடிவு செய்துள்ளனர்.

    அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழில் அதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 32 பேருக்கும் இன்னும் ஓரிரு நாளில் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியவை உள்ளிட்டவற்றை விளக்கமாக எழுதி ஒப்படைத்தனர்.
    • முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவையான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கை கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நேற்று பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின், மகள் கேத்தரின் ஆகியோர் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வருமாறு அழைக்கப்பட்டு இருந்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் மதியம் ஒரு காரில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது கேத்தரின் கை குழந்தையுடன் விசாரணைக்கு வந்திருந்தார். பின்னர் அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நேரடி விசாரணை நடத்தினார்.

    அதன்பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் ஆகியோர் முன்னிலையில் அவர்களது குடும்பத்தினர் சம்பவத் தன்று நடந்த நிகழ்வுகள், ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியவை உள்ளிட்டவற்றை விளக்கமாக எழுதி ஒப்படைத்தனர்.

    இந்த விசாரணையானது மாலை 6.45 மணி வரை அதாவது சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. அதன்பின்னர் ஜெயக்குமார் குடும்பத்தினர் காரில் ஏறி ஊருக்கு புறப்பட்டனர். தொடர்ந்து இன்று ஒரு குழு கரைசுத்து புதூருக்கு சென்று ஜெயக்குமாரின் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர். மற்றொரு குழு ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவையான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    • முதல்கட்டமாக ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
    • விசாரணை முழுவதும் சி.பி.சி.ஐ.டி. முத்தரசி முன்னிலையில் முழுக்க முழுக்க நடைபெற்று வருவதால் மர்ம மரண வழக்கு சூடுபிடித்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் சுமார் 3 வாரங்களாக எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அன்றைய தினமே தங்களது விசாரணையையும் தொடங்கினர். முதல்கட்டமாக ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உள்பட பலரிடம் விசாரித்தனர்.

    தொடர்ந்து 2-வது நாளான நேற்று அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் நேற்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் அதிகாரிகள் கரைசுத்துபுதூருக்கு மீண்டும் புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்களிடம் தங்களது சந்தேக கேள்விகளை கேட்டு அதற்கு விளக்கம் பெற்றனர்.

    இந்நிலையில் இன்று காலையில் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் போலீசார் 2 வாகனங்களில் மீண்டும் கரை சுத்துபுதூருக்கு புறப்பட்டனர்.

    ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மற்றும் அவரது மகன்களான கருத்தையா, ஜோ மார்ட்டின் ஆகியோரிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் கூறும் தகவல்களை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்க முடிவு செய்துள்ளனர். மேலும் அவரது வீட்டின் அருகே உள்ள அக்கம்பக்கத்தினரிடமும், நண்பர்களிடமும் விசாரிக்க உள்ளனர்.

    இந்த விசாரணை முழுவதும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி முன்னிலையில் முழுக்க முழுக்க நடைபெற்று வருவதால் மர்மச்சாவு வழக்கு சூடுபிடித்துள்ளது.

    ஜெயக்குமார் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை முடிந்த பின்னர், இறப்புக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் 2-வது நாளாக சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
    • சம்பவம் நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    20 நாட்களுக்கு மேலாகியும் இந்த வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழவில்லை.

    எனவே இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தையும் மாவட்ட போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நேற்றே ஒப்படைத்தனர். உடனடியாக வழக்குப்பதிவு செய்த நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையையும் தொடங்கினர்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா செல்வி, முனியாண்டி, சூர்யன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று திசையன் விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூருக்கு சென்று விசாரணையை தொடங்கினர்.

    இந்நிலையில் இன்று மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் 2-வது நாளாக சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.

    அங்கு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்று ஆய்வு செய்த நிலையில், சம்பவம் நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்களிட மும் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் ஜெயக்குமாரின் வீட்டில் பொருத்தியிருக்கும் கேமராக்கள், அவை எந்த திசையை பார்த்து இருக்கின்றன, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தோட்டதிற்கான வியூ பாய்ண்ட் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    இதனிடையே ஜெயக்குமார் எழுதியதாக கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து நெல்லைக்கு வருகிறார்.

    இதனால் அவரும் கரைசுத்துபுதூருக்கு சென்று விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது. 

    • ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை.
    • நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2-ந்தேதி உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் 4-ந்தேதி காலையில் அவரது வீட்டின் பின்னால் இருக்கும் அவரது தோட்டத்தில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் பிணமாக மீட்கப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மர்ம மரணம் என உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவரது மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு மர்மம் நீடித்து வந்தது.

    இந்நிலையில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த பல்வேறு தடயங்களின் அடிப்படையில் போலீசாரும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடல் இரும்பு கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகு பகுதியில் கடப்பாக்கல் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ஆனால் அதிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை.

    இதற்கிடையே அவரது டி.என்.ஏ. பரிசோதனை, உடல் எலும்புகள் மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயர்ரக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளுக்காக போலீசார் காத்திருந்தபோதும் தொடர்ந்து வேறு பல கோணங்களிலும் தனிப்படையினர் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில் 3 வாரம் ஆகியும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலகராணி நியமனம் செய்யப்பட்டு, அவர் இன்று காலை மர்ம மரணம் என வழக்கினை பதிவு செய்துவிட்டு, விசாரணையை தொடங்கினார். 

    • 6 வகையான ஆய்வறிக்கைகளின் முடிவுக்காக நெல்லை மாவட்ட போலீசார் காத்திருக்கின்றனர்.
    • தனிப்படையில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பல அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    பல்வேறு தடயங்கள் சிக்கி உள்ள நிலையிலும் அவர் மரணத்திற்கு காரணம் என்ன என்பது போலீசாருக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

    இந்த வழக்கின் விசாரணையை 10 தனிப்படையினர் மேற்கொண்டு வரும் நிலையில், ஒவ்வொரு படையினரும் ஒவ்வொரு கோணத்தில் அரசியல், தொழில், குடும்பத்தினர், உறவினர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    தற்போது வரை உறுதியான முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலையில் இறுதியாக டி.என்.ஏ. மாதிரி, உடல் எலும்பு பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட 6 வகையான ஆய்வறிக்கைகளின் முடிவுக்காக நெல்லை மாவட்ட போலீசார் காத்திருக்கின்றனர்.

    அந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும். அதன்பின்னரே அவர் கொலை செய்யப்பட்டாரா என்பதையே போலீசார் உறுதி செய்வார்கள்.

    இந்த நிலையில் இதுவரை அமைத்திருந்த தனிப்படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் இதுவரை நடைபெற்ற முக்கியமான சில கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை திறம்பட தேடிக்கண்டுபிடித்து கைது செய்த போலீஸ் அதிகாரிகளை கொண்டு புதிதாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த தனிப்படையில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பல அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முதல் தங்களது விசாரணையை தொடங்கி விட்டனர்.

    திசையன்விளைக்கு 4 ஜீப்களில் புறப்பட்டு சென்ற அந்த தனிப்படை முதலாவதாக நேற்று மாலையில் ஜெயக்குமாரின் உறவினர்கள், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடல் கிடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர். இன்றும் காலை முதலே விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

    • உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடைக்கு சென்று ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய வீடியோவும் வெளியாகி இருந்தது.
    • ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள்.

    நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் கடந்த 10 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன் மேற்பார்வையில் நெல்லை சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படையினர் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 32 பேர் முக்கிய பிரமுகர்கள் ஆவர்.

    கடந்த 2-ந்தேதி அன்று ஜெயக்குமார் மாயமான நிலையில் மறுநாள் 3-ந்தேதி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுநாளே ஜெயக்குமார் வீட்டு அருகே உள்ள தனது தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கம்பிகளால் சுற்றப்பட்டிருந்த நிலையில் பெரிய கடப்பா கல்லும் கட்டப்பட்டிருந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடந்த 10 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.

    உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடைக்கு சென்று ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய வீடியோவும் வெளியாகி இருந்தது. அந்த டார்ச் லைட்டும் ஜெயக்குமார் எரிந்த நிலையில் கிடந்த இடத்தில் இருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டது. தோட்டத்து கிணற்றில் இருந்து கத்தி ஒன்றும் கிடைத்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இப்படி ஜெயக்குமார் கொலை தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அடுத்தக்கட்ட விசாரணைக்கு தயாராகி வருகிறார்கள்.

    ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், சந்தேக மர்மமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும் ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ளப்போகும் ஒருவர் பெரிய கடப்பா கல்லை உடலில் கட்டிக் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை.

    அதே நேரத்தில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சில்வர் நிறத்திலான கையடக்க பிரசை வாயில் திணித்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை. எனவே ஜெயக்குமாரை யாரோ திட்டமிட்டு கொலை செய்து எரித்துக் கொன்று இருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. ஜெயக்குமார் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சில பொருட்கள் அவரது வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து ஜெயக்குமாரின் உறவினர்கள் சிலரே அவரை தீர்த்துக் கட்டி இருக்கலாமோ? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக அவரது கடிதங்களையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கடிதங்கள் உயிரிழப்பதற்கு முன்பு அவரால் எழுதப்பட்டவைதானா? என்பதை கண்டறிவதற்காக தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகே ஜெயக்குமார் எழுதிய கடிதத்தின் உண்மை தன்மை பற்றிய விவரங்கள் தெரியவரும்.

    ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாருக்கு கிடைத்து உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயக்குமாருக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் எல்லை மீறி போய் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

    இதில் ஜெயக்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது உறவினர்களே திட்டம் போட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகமும் வலுத்து உள்ளது. இப்படி ஜெயக்குமாரின் மரணத்தில் இறுதிக் கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதே நேரத்தில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கலாமா? என்கிற கோணத்திலும் போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உயிரிழப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தனது சொத்துக்கள் தொடர்பாக ஜெயக்குமார் உயில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அவர் எழுதியுள்ள மற்ற கடிதங்களில் தனக்கு பணம் தர வேண்டியவர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். எந்த இடத்திலும் அவர் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்கிற தகவலை குறிப்பிடவில்லை. இதன்மூலம் தனது மரணத்துக்கு பிறகு தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற எண்ணத்துடன் ஜெயக்குமார் செயல்பட்டிருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    இதன்மூலம் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இருப்பினும் ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம் ஒரு வாரத்தில் விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.ஜி.கண்ணன் இதனை தெரிவித்துள்ள நிலையில் 10 தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை நெருங்கி உள்ள போலீசார் அவர்களை பிடிக்க பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

    • கடந்த 2-ந்தேதி இரவு ஜெயக்குமார் மாயமாவதற்கு முன்பாக கடைசி 2 மணி நேரம் பயணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • 2-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் தோப்புவிளைக்கு நேரடியாக செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மச்சாவு வழக்கில் ஒரு வாரத்தை கடந்த பின்னும் இதுவரை உறுதியான முடிவுக்கு வர முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் நிலையில், அவர் உடல் எரிக்கப்பட்டு கிடந்த தோட்டத்தில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அங்கு ஏதேனும் தடயங்கள் சிக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நேற்றும் 5-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஜெயக்குமார் பிணமாக கிடந்த குழியில் மீண்டும் ஆய்வு செய்தபோது அதில் எரிந்த நிலையில் டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்கனவே கடந்த 2-ந்தேதி அன்று இரவில் அவர் மாயம் ஆவதற்கு முன்பாக திசையன்விளை பஜாரில் ஒரு டார்ச் லைட் வாங்கினார். அவை அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் அவரது குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அந்த டார்ச் லைட் அவர் திசையன்விளையில் வாங்கியது தானா? என்பதை அறிய கடை உரிமையாளரிடம் அந்த லைட்டை கொண்டு சென்று தனிப்படையினர் இன்று விசாரிக்கின்றனர். அதில் ஏதேனும் கைரேகைகள் உள்ளதா? என கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    தோட்டத்தில் தேக்கு மரங்கள் அதிகமாக இருப்பதால் அதில் இருந்து விழுந்துள்ள காய்ந்த இலை சறுகுகளை அப்புறப்படுத்தி வேறு ஏதேனும் தடயங்கள் சிக்குகிறதா எனவும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்படுகிறது.

    ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட தடயங்கள் அனைத்தும் அவரது வீடு மற்றும் தோட்ட பகுதிகளிலேயே சிக்கி வருவதால் இன்னும் சில தினங்களில் வழக்கு முடிவுக்கு வந்துவிடும் எனவும், தற்போது இறுதிகட்ட தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 2-ந்தேதி இரவு அவர் மாயமாவதற்கு முன்பாக கடைசி 2 மணி நேரம் பயணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்று இரவு உவரியை அடுத்த குட்டம் அருகே உள்ள தோப்புவிளை பகுதியில் ஜெயக்குமாரின் செல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆனதாக ஏற்கனவே போலீசார் தெரிவித்தனர். அவரது சொந்த ஊரான கரைசுத்து புதூரில் இருந்து தோப்புவிளை மொத்தம் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

    ஜெயக்குமார் அரசியில் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் யாரையும் சந்திக்க வேண்டும் என்றால் இந்த பாதையில் தான் வழக்கமாக குட்டம், தோப்புவிளை கிராமங்களுக்கு செல்வார். ஆனால் 2-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் தோப்புவிளைக்கு நேரடியாக செல்லவில்லை. அதற்கு பதிலாக வேறு ஒரு சுற்றுப்பாதையை பயன்படுத்தி சென்றுள்ளார். அவர் கரைசுத்துபுதூரில் இருந்து காரில் 7.30 மணிக்கு புறப்பட்டு திசையன்விளை, மன்னார்புரம், அணைக்கரை, பெருங்குளம், உறுமன்குளம், பெட்டைக்குளம், அணைக்குடி, குட்டம் வழியாக சுமார் 43 கிலோமீட்டர் சுற்றி சென்று தோப்புவிளையை அடைந்துள்ளார்.

    அவர் மன்னார்புரம் விலக்கில் உள்ள பெட்ரோல் பங்கில் இரவு 8 மணிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு அதன் பின்னர் வேறு எங்கும் தனது காரை நிறுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் ஜெயக்குமாரின் காரில் வேறு யாரும் பயணம் செய்யவில்லை என்றும் அந்த பங்க் ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனியாக தோப்புவிளை சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த இரவு நேரத்தில் அதுவும் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய காட்டு வழிப்பாதையில் 43 கிலோமீட்டர் சுற்றி அவர் பயணம் மேற்கொண்டது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவரது அந்த கடைசி 2 மணி நேர பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    ×