search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருடசேவையையொட்டி உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.
    X
    கருடசேவையையொட்டி உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.

    திருப்பதி பிரம்மோற்சவம்: தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி உற்சவர் மலையப்பசாமி வீதிஉலா

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று இரவு தங்கக்கருட வாகனவீதி உலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கொட்டும் மழையில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வதுநாளான நேற்று இரவு 7 மணியில் இருந்து 12 மணிவரை தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடந்தது. வீதிஉலா புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென மழை பெய்யத் தொடங்கியது. கருட வாகனத்தில் தங்க வைர நகைகள், சகஸ்ர மாலை, லட்சுமி ஆரம், மகர கண்டி, கடிக ஹஸ்தம் உள்ளிட்ட ஆபரண அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி மீது மழை தூறல் விழாமல் இருக்க, கூம்பு வடிவ பாய் குடையாகப் பிடிக்கப்பட்டு கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.

    திருமாலுக்கு இடையறாது சேவை செய்பவர்களில் முக்கியமானவர் கருடன். திருமாலுக்கு கருடன் தாசன், நண்பன், வாகனம், ஆசனம், கொடி, மேல்கட்டி மற்றும் விசிறியாய் திகழ்கிறார். கருடன் வேதத்தால் புகழப்பட்டவர். அவரே வேத சொரூபம். மந்திரங்களில் கருட மந்திரம் சிறப்பு வாய்ந்தது. கருட மந்திர ஜபம் வானத்தை தாண்டுவது. ஜலம், நெருப்பு, வாயு ஆகியவற்றில் பயமின்றி நுழைவது. இந்திர ஜாலம் உள்ளிட்ட சித்திகளை தரக்கூடியது.

    கருட சேவையை பார்ப்பதற்காக திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம்.

    கருடனுக்கு நீண்ட மூக்கு, வெண்கழுத்து, விசிறி போல் இறக்கைகள். சூரிய மண்டலத்தில் சஞ்சரிப்பவர். அனைத்துக் கைங்கரியங்களை செய்யத் தயாராக இருப்பவர். திருமாலின் வாகனமாகவும், கொடியாகவும் திகழ்பவர். கருடன் பல்வேறு சிறப்புகளை பெற்றவர். கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கொட்டும் மழையில் நான்கு மாடவீதிகளில் உலா வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. கருடசேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது.
    Next Story
    ×