search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி-7 உச்சி மாநாடு
    X
    ஜி-7 உச்சி மாநாடு

    உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி

    பெண் குழந்தைகள் கல்வி, எதிர்கால தொற்று நோய்கள் தடுப்பு, பசுமை வளர்ச்சிக்கு நிதி அளித்தல் ஆகியவற்றுக்கு ஆதரவாக தலைவர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்து உறுதி எடுத்தனர்.
    லண்டன்:

    உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு செயல்படுகிற ‘ஜி-7’ அமைப்பின் உச்சிமாநாடு, இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகுதியில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நேற்று இந்த மாநாடு முடிந்தது.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நடத்திய இந்த உச்சிமாநாட்டில், கொரோனா தொற்றுக்கு பிறகு முதன் முறையாக உலக தலைவர்களான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.

    கோப்புப்படம்


    கொரோனா வைரசுக்கு எதிராக உலகமெங்கும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது, பெரிய நிறுவனங்கள் தங்கள் நியாயமான வரிகளை செலுத்தச்செய்வது மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பணத்தின் உதவி கொண்டு பருவநிலை மாற்றம் பிரச்சினையை சமாளிப்பது என தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

    இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசும்போது, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனை புதிய காற்றின் சுவாசம் என வர்ணித்தார். பெண் குழந்தைகள் கல்வி, எதிர்கால தொற்று நோய்கள் தடுப்பு, பசுமை வளர்ச்சிக்கு நிதி அளித்தல் ஆகியவற்றுக்கு ஆதரவாக தலைவர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்து உறுதி எடுத்தனர். போரிஸ் ஜான்சன் பேசுகையில், ஜி-7 நாடுகள் குறைந்தபட்சம் 100 கோடி தடுப்பூசிகளை வழங்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதில் பாதி தடுப்பூசி அமெரிக்காவில் இருந்தும், 10 கோடி இங்கிலாந்தில் இருந்தும் வரும்.

    ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடச்செய்வது குறித்த தலைவர்களின் உறுதியை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் பாராட்டினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜி-7 தலைவர்களிடம் நான் கூறிய சவால் என்னவென்றால், தொற்றுநோயை உண்மையாகவே முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அடுத்த ஆண்டு ஜெர்மனியில் ஜி-7 உச்சிமாநாடு நடக்கிறபோது, உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீததத்தினருக்காவது தடுப்பூசி போட்டு விட வேண்டும் என்பதுதான். அதை நாம் செய்து முடிப்பதற்கு நமக்கு 1,100 கோடி டோஸ் தடுப்பூசி வேண்டும். இது அத்தியாவசியமானது. இன்னும் அதிக தடுப்பூசி தேவை. அவை விரைவாக தேவை.

    கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்து பாதுகாப்புகளை தற்காலிகமாக விலக்கிக்கொள்வதும் நாடுகளுக்கு அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும், மத்திய வருமான நாடுகளுக்கும் உதவுகிற விதத்தில் ஒரு உள்கட்டமைப்பு திட்டத்தை ஏற்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இது சீனாவின் ‘பெல்ட் மற்றும் சாலை’ திட்டத்தின் முன் முயற்சியின் பிரதிபலிப்பாக அமையும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்தது.
    Next Story
    ×