search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜப்பான் மீன்பிடி கப்பல் மீது ரஷிய சரக்கு கப்பல் மோதி விபத்து - மீனவர்கள் 3 பேர் பலி

    ஜப்பான் மீன்பிடி கப்பல் மீது ரஷிய சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் மீனவர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.‌
    டோக்கியோ:

    ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ பிராந்தியத்தின் மோன்பட்சு நகரில் உள்ள துறைமுகத்துக்கு அருகே டைஹாச்சி ஹொக்காவ்மரு என்கிற மீன்பிடி கப்பல் நண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.‌ இந்த மீன்பிடி கப்பலில் 5 மீனவர்கள் இருந்தனர்.‌அப்போது அந்த வழியாக ரஷியாவின் அமூர் என்ற சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்தது. இந்த கப்பலில் 23 மாலுமிகள் இருந்தனர்.‌அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ரஷியாவின் சரக்கு கப்பல் ஜப்பான் மீன்பிடி கப்பல் மீது மோதியது. இதில் மீன்பிடி கப்பல் கடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த மீனவர்கள் 5 பேரும் நீரில் மூழ்கினர்.‌இதையடுத்து ரஷிய சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகள் உடனடியாக கடலில் குதித்து மீனவர்களை மீட்டனர். ஆனால் அவர்களில் 3 பேர் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

    இதுகுறித்து ரஷிய மாலுமிகள் ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு சேவைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் மீனவர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.‌பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக ஜப்பானில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் பலியான மீனவர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு ரஷிய தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த விபத்து குறித்து ஜப்பான் தரப்பில் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
    Next Story
    ×