search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்தில் 2 பேருக்கு தலா 1,446 ஆண்டு சிறை
    X
    தாய்லாந்தில் 2 பேருக்கு தலா 1,446 ஆண்டு சிறை

    கடல் உணவு மோசடி வழக்கு: தாய்லாந்தில் 2 பேருக்கு தலா 1,446 ஆண்டு சிறை

    தாய்லாந்தில் ரூ.12 கோடி கடல் உணவு மோசடியில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 1,446 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாங்காக் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
    பாங்காக் :

    தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் லாம்கேட் கடல் உணவு உணவகம் என்ற பெயரில் ஒரு உணவகம் செயல்பட்டு வந்தது.

    இந்த உணவகத்தில் விதவிதமான கடல் உணவுகள் பிரபலமாக விளங்கின. மக்கள் தேடித்தேடிப்போய் சாப்பிட்டார்கள். வியாபாரத்தை மேலும் வளர்ச்சி அடையச்செய்வதற்காக ஒரு உத்தியை அதிரடியாக உணவக உரிமையாளர்கள் வகுத்தனர்.

    10 பேருக்கு கடல் உணவு வழங்குவதற்கு 28 டாலர் (சுமார் ரூ.2,100) தொகையை முன்கூட்டியே செலுத்தி வவுச்சர் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு வரிசைப்படி உணவு வழங்கப்படும் என அறிவித்தனர்.

    இது வழக்கமான விலையை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதியது. எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு தொகையை செலுத்தி பதிவு செய்து வவுச்சர்களை வாங்கினார்கள்.

    பல்லாயிரகணக்கானோர் பணம் செலுத்தி வவுச்சர் பெற்றதாக தெரிகிறது. இப்படி அந்த உணவகம் 1.6 மில்லியன் டாலர் (சுமார் ரூ.12 கோடி) தொகையை வாரி சுருட்டியது.

    தொடக்கத்தில் வவுச்சர் பெற்றிருந்தவர்கள், உணவகத்துக்கு வந்து அந்த சலுகைத்திட்டத்தின்கீழ் உணவைப் பெற்று சாப்பிட்டு ருசிக்க முடிந்தது. ஆனால் பதிவு செய்தவர்களுக்கு கடல் உணவு பரிமாற பல மாதங்கள் ஆகும் என்ற நிலை உருவானது.

    இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அத்தனை பேரின் தேவையை சந்திக்கிற அளவுக்கு சமைத்து பரிமாற ஏற்ற அளவுக்கு கடல்வாழ்உயிரினங்கள் கிடைப்பதில்லை என்று அறிவித்து, உணவகத்தை கடந்த மார்ச் மாதம் திடீரென மூடி விட்டார்கள். இதனால் பணம் செலுத்தி வவுச்சர் பெற்றிருந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனினும் பணம் செலுத்தி வவுச்சர் பெற்றவர்களுக்கு, தொகை திரும்பத்தரப்படும் என உணவக உரிமையாளர்கள் அறிவித்தனர். அதற்கு முன்பாகவே 818 வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர்.

    அதன்பிறகும் நூற்றுக்கணக்கானோர் ஓட்டல் நிர்வாகம் மீது புகார் செய்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அந்த உணவகத்தின் உரிமையாளர்களான அப்பிசார்ட் போவர்ன்பஞ்சரக்கையும், பிரபாசோர்ன் போவர்ன்பஞ்சாவும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் மீது பாங்காக் கோர்ட்டில் போலீசார் மோசடி வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது அவர்கள் 2 பேரும் தங்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் குற்றவாளிகள் என கோர்ட்டு முடிவு செய்தது.

    அவர்கள் 2 பேருக்கும் தலா 1,446 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அவர்கள் குற்றத்தை மறுக்காமல் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனைக்காலம் பாதியாக, 723 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் அந்த நாட்டு சட்டப்படி உண்மையிலேயே தலா 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்தால் போதுமானது.

    தாய்லாந்தில் 2017-ம் ஆண்டு ஒரு மோசடி வழக்கில் குற்றவாளிக்கு 13 ஆயிரம் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
    Next Story
    ×