search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருத்வாரா
    X
    குருத்வாரா

    72 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் மீண்டும் குருத்வாரா திறப்பு- சீக்கியர்கள் குவிந்தனர்

    72 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் மீண்டும் குருத்வாரா திறக்கப்பட்டதால் அங்கு சீக்கியர்கள் குவிந்து வருகின்றனர்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஜெலும், மாவட்டத்தில் ‘சோவா சாகிப்’ என்ற சீக்கியர்களின் வழிபாட்டு தலமான குருத்வாரா உள்ளது. கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது.

    அப்போது அங்கிருந்த சீக்கியர்களில் பெரும்பாலானோர் வெளியேறி இந்தியாவில் குடியேறினர். இதனால் அந்த குருத்வாரா பயன்பாடுஇன்றி கிடந்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அதை மூடி விட்டது.

    அந்த குருத்வாரா ரோக் தாஸ் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே அதை உலக பாரம்பரிய சின்னமாக ஐ.நா.வின் ‘யுனெஸ்கோ’ நிறுவனம் அறிவித்தது.

    அதை தொடர்ந்து அந்த குருத்வாரா புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. தற்போது நாடு பிரிவினை நடந்த 72 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குருத்வாரா சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது.

    அதில், பாகிஸ்தானில் பிற பகுதிகளில் வாழும் ஏராளமான சீக்கியர்கள் குவிந்தனர். தற்போது அங்கு பிரார்த்தனையும் பக்தி பாடல்களும் ஒலிக்கின்றன.

    வருகிற நவம்பரில் சீக்கிய மத குருவான குருநானக்கின் 550-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் வந்து பங்கேற்க உள்ளனர்.

    இந்த குருத்வாரா 1834-ம் ஆண்டு மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு குருநானக் தங்கியிருந்ததாகவும் அப்போது அங்கு நிலவிய கடும் பஞ்சத்தை போக்க தனது கையில் இருந்த பிரம்பால் ஒரு கல்லை அகற்றியதும் அங்கு நிரூற்று ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து இப்பகுதி செழிப்பானதாகவும் நம்பப்படுகிறது.

    Next Story
    ×