என் மலர்tooltip icon

    உலகம்

    • டொனால்டு டிரம்ப்- புதின் அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர்.
    • இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன போர் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் போர் முடிவை ரஷிய அதிபர் புதின் ஏற்கவில்லை.

    இதனால் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் புதின் இதற்கு அடிபணியவில்லை.

    இந்த நிலையில்தான் ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே உக்ரைன் பிராந்தியத்தை முறையாக விட்டுக்கொடுப்பதை நிராகரிப்பதாகவும், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் உக்ரைன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் எந்வொரு அமைதி ஒப்பந்தமும் செயலில்லாத தீர்வுக்கு வழிவகுப்பதாக இருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    புதின்- டிரம்ப் அலாஸ்காவில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச இருக்கிறார்கள்.

    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது.
    • இந்த மோதலின்போது பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மே 9 ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.

    சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு விமானம், AWACS (Airborne Warning and Control System) என அழைக்கப்படும் வான்வழி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய ராணுவம் வசம் உள்ள ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

    மே 7 தாக்குதலின் போது பயங்கரவாத இலக்குகள் சேதமடைவதன் முன்னாள் இருந்த நிலை மற்றும் அதன் பின்னால் சேதமடைந்த நிலை ஆகியவற்றின் செயற்கைக்கோள் படங்களையும் அவர் திரையிட்டு விளக்கினார். ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு கூறுகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் பாகிஸ்தானின் சிங்கிள் விமானம் தாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என்ற பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பதில் அளித்துள்ளார்.

    மேலும், 3 மாதங்களாக இது தொடர்பாக இந்தியா ஏதும் கூறவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் உடனடியாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு விரிவான தொழில்நுட்ப விளக்கங்களை அளித்தது எனத் தெரிவித்தார்.

    ஆபரேசன் சிந்தூரின்போது இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்ட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் மக்களே இது பணய கைதிகளை ஆபத்தில் தள்ளும் செயல் என நேதன்யாகு முடிவை எதிர்த்து வருகின்றனர்.
    • பாலஸ்தீன அதிகாரசபை, ஹமாஸ் அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் அந்தப் பகுதியில் இருக்காது.

    காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு நேற்று இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    காசாவில் ஏற்கனவே 75 சதவீத பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் வைத்துள்ள நிலையில் மீதமுள்ள பகுதிகளையும் கைப்பற்ற பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டார்.

    இந்த முடிவை உள்நாடு மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் இஸ்ரேல் மக்களே இது பணய கைதிகளை ஆபத்தில் தள்ளும் செயல் என நேதன்யாகு முடிவை எதிர்த்து வருகின்றனர்.

    இந்த சூழலில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது திட்டம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

    நேதன்யாகு தனது எக்ஸ் தள பதிவில் "நாங்கள் காசாவை ஆக்கிரமிக்கவில்லை. காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிப்போம். காசாவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்போம். அமைதியான நிர்வாகத்தை நிறுவுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

    பாலஸ்தீன அதிகாரசபை, ஹமாஸ் அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் அந்தப் பகுதியில் இருக்காது.

    காசாவில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட நமது மக்களை விடுவிப்பதற்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும்.

    இது எதிர்காலத்தில் காசாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் நீக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    • மாதத்திற்கு ஒரு போரை டிரம்ப் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
    • உலக அமைதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்.

    இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்–ஈரான், தாய்லாந்து– கம்போடியா, அஜர்பைஜான்–ஆர்மீனியா, ருவாண்டா–காங்கோ, செர்பியா–கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா என மாதத்திற்கு ஒரு போர் வீதம் கடந்த 6 மாதங்களில் 6 போர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.

    இதனால் உலக அமைதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.

    இந்நிலையில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாட்டுத் தலைவர்கள் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று முன்மொழிந்தனர்.

    இதன் மூலம், டிரம்பை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை இப்போது ஐந்தாக உயர்ந்துள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானும் இஸ்ரேலும் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க முன்மொழிந்தன. கம்போடியாவும் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இந்த கோரிக்கையை வைத்தது.

    • 'தி ஐ பேப்பர்' (The i Paper) என்ற நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.
    • 20% அதிகமாக வேறொருவருக்கு வாடகைக்கு விட்டார்.

    பிரிட்டனின் வீட்டற்றோர் நலத்துறை அமைச்சர் ருஷனாரா அலி சர்ச்சைக்கு சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ருஷனாரா அலி லண்டனில் இருந்த தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றி, மாத வாடகையை 700 பவுண்ட் (சுமார் ரூ.73,000) அதிகரித்து வேறொருவருக்கு வாடகைக்கு விட்டதாக 'தி ஐ பேப்பர்' (The i Paper) என்ற நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.

    இது சர்ச்சையான நிலையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு எழுதிய கடிதத்தில், தான் பதவியில் தொடர்ந்தால், அரசின் லட்சியப் பணிகளுக்கு ஒரு குறுக்கீடாக இருக்கும் என்று ருஷனாரா அலி குறிப்பிட்டுள்ளார்.

    அதே சமயம், தான் எல்லா நேரங்களிலும் அனைத்து சட்டத் நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், தனது பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ருஷனாரா அலியின் கடின உழைப்பை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

    • இந்த வகையான மகத்துவத்தை மீண்டும் பெற அமெரிக்காவிற்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்காது.
    • வரலாற்றில் என்னை போன்று சோதனைகள், இன்னல்கள், நிச்சயமற்ற தன்மைகளைக் கடந்து வந்தது யாரும் இல்லை.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். சமீபத்தில் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்து அறிவித்தார். அதேபோல் பிரேசிலுக்கும் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்து உள்ளார். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. வரிகளால் பாதிக்கப்பட்ட சில நிறுவனங்கள் மற்றும் மாகாணங்கள் தொடர்ந்த வழக்குகள் அமெரிக்காவின் கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    வரி விதிப்பு நடவடிக்கையால் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்கள் எட்டப்படுகின்றன. மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் நம் நாட்டின் கருவூலத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிகள் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி வருமான வரிக்கு ஒரு மாற்றாகவும் அமையும்.

    இந்த முக்கியமான தருணத்தில் அமெரிக்கா இதுவரை கண்டிராத மிகப்பெரிய பணவரவு, செல்வம் உருவாக்கம் மற்றும் பலத்தை ஒரு தீவிர இடதுசாரி கோர்ட்டு குறைக்கும் அல்லது சீர்குலைக்கும் வகையில் நமக்கு எதிராகத் தீர்ப்பளித்தால், இந்த மிகப்பெரிய தொகைகளை நம்மால் திரும்பப் பெற முடியாது. வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிராக கோர்ட்டு தீர்ப்பு அளித்தால், அது 1929-ம் ஆண்டு ஏற்பட்ட மந்தநிலையை மீண்டும் ஏற்படுத்திவிடும்.

    இந்த வகையான மகத்துவத்தை மீண்டும் பெற அமெரிக்காவிற்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்காது. ஆனால் நமது நீதிமன்ற அமைப்பை யாரையும் விட நன்றாக எனக்குத் தெரியும், வரலாற்றில் என்னை போன்று சோதனைகள், இன்னல்கள், நிச்சயமற்ற தன்மைகளைக் கடந்து வந்தது யாரும் இல்லை. நமது நாடு வெற்றிக்கும் மகத்துவத்திற்கும் தகுதியானது, கொந்தளிப்பு, தோல்வி மற்றும் அவமானத்திற்கு அல்ல.

    இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.

    • அலாஸ்காவில் புதினை சந்திப்பதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
    • ஒருவருக்கொருவர் சில பிரதேசங்களை விட்டுக்கொடுக்க டிரம்ப் வலியறுத்த உள்ளார்.

    உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் அடுத்த வாரம் ரஷிய அதிபர் புதினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

    ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் புதினை சந்திப்பதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இந்த சந்திப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக உக்ரைன் - ரஷியா இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சில பிரதேசங்களை விட்டுக்கொடுக்க டிரம்ப் வலியறுத்த உள்ளார்.

    பிப்ரவரி 2022 இல் ரஷ்யா தொடங்கிய படையெடுப்பு உக்ரைனில் லட்சகணக்கான கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    போரை நிறுத்துவதற்கான முந்தைய மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இந்த சூழலில், டிரம்ப்-புதின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    2021 ஆம் ஆண்டு ஜெனீவாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் புதினுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் சந்திப்பது இதுவே முதல் முறை.   

    • வன்முறையை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் அது நன்மை செய்வதாகத் தோன்றினால், அந்த நன்மை தற்காலிகமானது. அது செய்யும் தீமை நிரந்தரமானது.
    • ஒருபோதும் திரும்பி வராத ஒரு குழந்தைக்காக எந்த பெற்றோரும் வலியில் காத்திருக்கக்கூடாது.

    சுதந்திரத்திற்கான போராட்டத்தின் இரண்டு உலகளாவிய சின்னங்களான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மகாத்மா காந்தியின் பேரக்குழந்தைகள் காசாவுக்காக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    மார்ட்டின் லூதர் கிங் III ஒரு பிரபலமான அமெரிக்க சிவில் உரிமை செயல்பாட்டாளர். அவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் கொரெட்டா ஸ்காட் கிங்கின் மூத்த மகன். ராஜ்மோகன் காந்தி ஒரு வரலாற்றாசிரியர். அவரது தந்தைவழி தாத்தா மகாத்மா காந்தி.

    இந்த மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், இருவரும் காசாவில் அமைதிக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

    இடது-மார்ட்டின் லூதர் கிங் III, வலது-ராஜ்மோகன் காந்தி 

    "இன்று நாங்கள் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மகாத்மா காந்தியின் வழித்தோன்றல்களாக மட்டுமல்லாமல், காசாவில் நடந்து வரும் மனிதாபிமான பேரழிவால் காயமடைந்த ஒரு மனித குடும்பத்தின் உறுப்பினர்களாகவும் பேசுகிறோம்.

    வன்முறை, இடப்பெயர்ச்சி மற்றும் வறுமையின் துயர புயலில் சிக்கிய அப்பாவி பொதுமக்களின், குறிப்பாககாசா குழந்தைகளின் அழுகை எங்கள் இதயங்களை கனமாக்குகிறது - மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தியின் வாரிசுகள் கூட்டறிக்கை

    மேலும், பணயக்கைதிகளாக உள்ள அன்புக்குரியவர்களின் இஸ்ரேலிய குடும்பங்களின் ஆழ்ந்த வலியை நாங்கள் உணர்கிறோம். அவர்களின் வலி எங்களுடையது.

    அந்த வேதனையில், மகாத்மா காந்தியின் வார்த்தைகளை நாம் மறந்துவிடக் கூடாது: 'வன்முறையை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் அது நன்மை செய்வதாகத் தோன்றினால், அந்த நன்மை தற்காலிகமானது. அது செய்யும் தீமை நிரந்தரமானது'

    தொடர்ச்சியான வன்முறை நீதியைக் கொண்டுவராது. அது துன்பத்தை மட்டுமே அதிகரிக்கிறது' - இந்த உண்மையை நாங்கள் எதிரொலிக்கிறோம். மேலும் இரத்தக்களரிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க அவசரமாகவும் அன்புடனும் அழைப்பு விடுக்கிறோம்.

    அனைத்து பணயக்கைதிகளும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் - உணவு, தண்ணீர், மருந்து - காசா மக்களை தடையின்றி அல்லது தாமதமின்றி சென்றடைய வேண்டும்.

    காசாவின் குழந்தைகள் எங்கள் குழந்தைகள். பயத்திலும் அமைதியிலும் வைக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் எங்கள் குடும்பம்.

    எந்தக் குழந்தையும் பசியை அறியக்கூடாது. ஒருபோதும் திரும்பி வராத ஒரு குழந்தைக்காக எந்த பெற்றோரும் வலியில் காத்திருக்கக்கூடாது. இந்தக் கொடுங்கனவு விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.

    சர்வதேச சமூகம் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது. உலக தலைவர்கள் சிவில் சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் . நல்லிணக்கத்திற்கான பாதை நீண்டதாக இருக்கும். ஆனால் அது இரக்கம் மற்றும் ஒழுக்கத்தின் முதல் படிகளுடன் தொடங்குகிறது. பிரிவினை, வெறுப்பு மற்றும் விரக்தியைத் தாண்டி நாம் உயர முடியும்.

    உறுதியான இதயங்களுடனும் திறந்த கரங்களுடனும், ஒரு நியாயமான அமைதி அவசியம் மட்டுமல்ல, சாத்தியமானதும் ஆகும்" என்று தெரிவித்துள்ளனர். 

    • இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தினார்.
    • டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் 22 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பைசரன் புல்வெளி சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர்.

    பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்ததாக கூறி மே 7 ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் ஏற்பட்ட மோதல் 3 நாட்களுக்கு பின் மே 9 அன்று மாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார். ஆனால் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில்தான் மோதலை நிறுத்தியதாக இந்தியா தெரிவித்தது.

    இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தபோது அமெரிக்கா நேரடியாக தலையிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

    சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரூபியோ, டிரம்ப் 'அமைதியின் அதிபர் '. "அதனால், இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்றபோது, நாங்கள் நேரடியாக தலையிட்டோம். அதிபரால் அங்கு அமைதியை நிலைநாட்ட முடிந்தது" என்று கூறினார்.

    மேலும் கம்போடியா-தாய்லாந்து, அஜர்பைஜான்-ஆர்மீனியா மற்றும் காங்கோ-ருவாண்டாவில் ஏற்பட்ட மோதல்களுக்கு அமைதியைக் கொண்டுவந்தது அமெரிக்காதான் என்றும் ரூபியோ கூறினார்.

    மேலும் டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.  

    முன்னதாக மாதத்திற்கு ஒரு போரை நிறுத்தி வரும் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • இதில் சிக்கி மாயமான 33 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

    பீஜிங்:

    சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள யூசாங், லான்சோ உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக மாறின. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்தன.

    இதையடுத்து மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. எனினும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகினர். மாயமான 33 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    அதேபோல், குவாங்டாங் மாகாணத்திலும் மழை வெளுத்து வாங்கியது. அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகினர். எனவே வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 4000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    நிலச்சரிவால் கன்சு மாகாணத்தில் உள்ள 4 கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதற்கிடையே வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்தார். அப்போது வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணியை தீவிரப்படுத்தவும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

    • வெனிசுலா அதிபர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
    • வெனிசுலா அதிபரை பிடித்து கொடுத்தால் ரூ.450 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் அதிபர் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக அதிபராக உள்ளார்.

    அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது, கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் கொக்கைன் கடத்தல் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அவரைக் கைது செய்ய உதவுவோருக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஜோ பைடன் நிர்வாகம் அந்தத் தொகையை ரூ.219 கோடியாக உயர்த்தியது.

    இந்தத் தொகை சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானதாகும். இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி மதுரோ தனது பதவியில் நீடித்து வருகிறார்.

    இந்நிலையில், வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை இரு மடங்காக, அதாவது ரூ.450 கோடியாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்.
    • அந்த விஷயங்களை நான் நேரில் கூறுவேன், பொதுவில் அல்ல.

    இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் மேலும் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதுகுறித்து கருத்து தெரிவித்தார். இந்த வரிவிதிப்பு பற்றி இருநாடுகளும் நல்ல முடிவுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

    இஸ்ரேலுக்கு வருகை தந்த இந்திய பத்திரிகையாளர்கள் குழுவிடம் பேசிய நேதன்யாகு, "பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்.

    டிரம்புடன் கையாள்வது குறித்து மோடிக்கு சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன். இருப்பினும், அந்த விஷயங்களை நான் நேரில் கூறுவேன், பொதுவில் அல்ல" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், "நான் விரைவில் இந்தியாவுக்கு வர விரும்புகிறேன், உளவுத்துறை, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட துறைகளில் இந்தியா-இஸ்ரேல் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்தார். 

    ×