என் மலர்tooltip icon

    உலகம்

    • அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் உள்பட பிற நாட்டை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டனர்.
    • இந்தியர்கள் கை விலங்கிட்டு நாடு கடத்தப்பட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அமெரிக்க அதிபராக டெனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் உள்பட பிற நாட்டை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டனர்.

    இந்தியர்கள் கை விலங்கிட்டு நாடு கடத்தப்பட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதியில் இருந்து இம்மாதம் (ஜூலை) 15-ந்தேதி வரை அமெரிக்காவில் இருந்து இதுவரை 1,563 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

    இதில் பெரும்பாலானவர்கள் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக செய்தி தொடர்பாளர் ரந்தீஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்து உள்ளார்.

    மேலும் அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.
    • அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அறிக்கை வெளியிட்டார்.

    கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.

    இந்நிலையில் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளியுறவுத்துறை, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும் (FTO), (லஷ்கர் தொய்பாவால்) நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதியாகவும் (SDGT) அறிவிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

    • சிரிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை, உள்நாட்டு மோதல் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 374 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறது.
    • மதகுருமார்களுக்கு அப்பகுதியில் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியை வழங்கியதாகக் கூறினார்.

    சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து ஸ்விடா மாகாணத்துக்கு கூடுதல் அரசுப்படைகள் அனுப்பப்பட்டன. இதில் ட்ரூஸ் மதத்தினர் மீது அரசுப்படைகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல், சிரியா மீது தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது.

    தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரியா ராணுவ தலைமையக கட்டிடம் மீது இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையை வீசியது. இதைதொடர்ந்து இஸ்ரேலுக்கு சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அவர் கூறும்போது, "போருக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. சவால்களை எதிர்கொண்டு எங்கள் மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் வாழ்க்கையை செலவிட்டுள்ளோம். சிரியா மக்களின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போராடத் தயாராக இருக்கிறோம். பொதுமக்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது" என்றார்.

    இந்நிலையில் அமெரிக்கா, துருக்கி மற்றும் அரபு நாடுகளின் மத்தியஸ்தத்தின் கீழ் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.  

    இதையடுத்து சிரிய இராணுவத்திற்கும் ட்ரூஸ் படைகளுக்கும் இடையே பல நாட்கள் நீடித்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.

    போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, சிரிய இராணுவ படையினர் ஸ்விடா மாகாணத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.

    சிரிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை, உள்நாட்டு மோதல் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 374 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறது. அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

    சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா, ட்ரூஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்களுக்கு அப்பகுதியில் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியை வழங்கியதாகக் கூறினார். 

    • உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் ஆவார்.
    • பிரதமர் மாற்றப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

    ரஷியாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    மார்ச் 2020 முதல் பிரதமராக இருந்த டெனிஸ் ஷ்மிஹால்,உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் ஆவார்.

    இந்நிலையில் உக்ரைனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நேற்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரைனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாகியவர். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளுக்கும் அவர் தலைமை தாங்கினார்.

    2022 ஆம் ஆண்டு ரஷியாவுடனான போர் தொடங்கியதிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத் தலைவர்கள் மாற்றப்பட்டாலும், பிரதமர் மாற்றப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

    • போப் ஆண்டவருக்கு தகவல்கள் வழங்கி வந்த விகார் ஜெனரல் பாதிரியார் கேப்ரியல் ரோமானெல்லி இந்த குண்டுவீச்சில் காயமடைந்தார்.
    • கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

    காசாவில் சுமார் 1,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். பாலஸ்தீன முஸ்லிம்களுடனும் அவர்கள் இணக்கமான உறவைக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று, காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்தது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

    பாலஸ்தீனத்தின் நிலைமை குறித்து போப் ஆண்டவருக்கு தகவல்கள் வழங்கி வந்த விகார் ஜெனரல் பாதிரியார் கேப்ரியல் ரோமானெல்லி இந்த குண்டுவீச்சில் காயமடைந்தார். அவரது காலில் காயம் ஏற்பட்டது.

    போப் லியோ இந்தத் தாக்குதலைக் கண்டித்து, காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தார்.

    இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தாக்குதல் குறித்து விசாரித்து வருவதாகக் கூறின. தேவாலயம் அழிக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது.

    இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 29 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், காசாவில் கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 58,500ஐ கடந்துள்ளது. 1,39,600க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    • வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார்.
    • அப்போது மத்திய கிழக்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    வாஷிங்டன்:

    மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காசா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

    இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து விருந்து அளித்துள்ளார்.

    அதன்படி, பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ஆகியோரை தனித்தனியாக டிரம்ப் சந்தித்து விருந்து அளித்தார்.

    ஏற்கனவே தனது 2-வது பதவிக் காலத்தின்போது சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். இதன்மூலம் காசா போரில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.

    தற்போதைய இந்தச் சந்திப்பின்போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, அமெரிக்க ஜெட் விமானங்கள், கணினி சேவையகங்கள், அலுமினிய உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

    அதேபோல், அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின்னுடன் ஆலோசிக்கப்பட்டது.

    • வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.
    • அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.

    கடந்த ஆண்டு இந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்துள்ளது அந்நாட்டு அரசு. இதன்மூலம் ஜனநாயகத்தில் மக்கள் அதிகளவில் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 59.7 சதவீதம் வாக்குகளே பதிவானது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் சுமார் 7.5 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. எனவே அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.

    ஏற்கனவே ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் 16 வயதுடையவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்கு செலுத்தும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷாப்பிங் மால் திறக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே தீ விபத்து.
    • 45 பேரை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

    ஈராக்கில் நேற்றிரவு 5 மாடி கட்டிட ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஈராக்கில் உள்ள வாசிட் மாகாணம் குட் நகரில் கடந்த வாரம் ஐந்து மாடி ஷாப்பிங் மால் திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்தில் சிக்கிய 45 பேருக்கும் மேற்பட்டோரை அவர்கள் மீட்டனர். இருந்தபோதிலும் 60-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயில் கருகிய 14 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கட்டிட உரிமையாளர், ஷாப்பிங் மால் உரிமையாளர் மீ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • காசாவில் உள்ள தேவாலயம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்.
    • தாக்குதலில் தேவாலயத்தின் காம்பவுண்ட் சேதமடைந்துள்ளது.

    காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அங்குள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காம்பவுண்ட் சேதமடைந்துள்ளது.

    தேவாலயத்தின் வளாகப் பகுதி மீதான இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர். காசாவில் உள்ள ஒரேயொரு தேவாலயம் பேமிலி கத்தோலிக்க ஆலயம்தான். போரினால் வீடுகளை இழந்த கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் இந்த ஆலயத்தின் வளாகத்தில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேவாலயத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து அறிந்திருப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், "மதத் தலங்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் தீங்கைக் குறைக்க அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், அவற்றுக்கு ஏற்பட்ட எந்தவொரு சேதத்திற்கும் வருந்துவதாகவும்" தெரிவித்துள்ளது.

    • சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.
    • இஸ்ரேலுக்கு சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து ஸ்விடா மாகாணத்துக்கு கூடுதல் அரசுப்படைகள் அனுப்பப்பட்டன. இதில் ட்ரூஸ் மதத்தினர் மீது அரசுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல், சிரியா மீது தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.

    தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரியா ராணுவ தலைமையக கட்டிடம் மீது இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையை வீசியது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அவர் கூறும்போது, "போருக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. சவால்களை எதிர்கொண்டு எங்கள் மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் வாழ்க்கையை செலவிட்டுள்ளோம்.

    சிரியா மக்களின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போராடத் தயாராக இருக்கிறோம். பொதுமக்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது" என்றார்.

    • இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • சத்யஜித் ரேயின் இல்லத்தை புனரமைக்க உதவி செய்வதாக இந்தியா தெரிவித்தது.

    இந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேயின் மூதாதையர்களுக்குச் சொந்தமாக வங்கதேசத்தில் உள்ள இல்லத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை வங்கதேச அரசு வெளியிட்டது. இதையடுத்து, இந்த நடவடிக்கையை கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வங்கதேச அரசுக்கு கடிதம் எழுதியது. அக்கடிதத்தில் சத்யஜித் ரேயின் இல்லத்தை புனரமைக்க உதவி செய்வதாக இந்தியா தெரிவித்தது.

    இந்நிலையில், சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. மேலும் அதை எவ்வாறு மீண்டும் கட்டுவது என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    • மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாண மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிற்கு தெற்கே சுமார் 87 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.

    20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

    இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீப கற்பத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. சாண்ட் பாயிண்ட் கடற்கரை பகுதிகளில் அதிகபட்சமாக 6.1 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் 2 மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

    ஆனாலும் அலாஸ்கா கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்கா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய 'ரிங்க் ஆப் பயர்' என்ற இடத்தில் அமைந்துள்ளது.

    ×