என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • விபத்துகள் நடந்தால் உரிமையாளர்களை தமிழக அரசு கைது செய்வது வழக்கம் தான்.
    • விஜய் வீட்டில், அலுவலகத்தில் வழக்கம் போல் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன.

    கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கைது செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், விஜய் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற திருமாவளவனின் கருத்தை வரவேற்கிறேன்.

    விஜயை பார்ப்பதற்காக வந்ததால் தான் 41 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். விபத்துகள் நடந்தால் உரிமையாளர்களை தமிழக அரசு கைது செய்வது வழக்கம் தான். விஜய் வீட்டில், அலுவலகத்தில் வழக்கம் போல் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. வெளிநாட்டில் இருந்து ராகுல் கேட்டு கொண்டதால் விஜய் மீது நடவடிக்கை இல்லையா?. ராகுல் குறித்து வந்த செய்தி தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள்.
    • அமெரிக்கா ரஷியாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்குகிறது.

    ரஷியாவுடனான எரிசக்தி உறவுகளைத் துண்டிக்க இந்தியா, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவை அதிபர் புதின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ரஷியாவின் சோச்சி (Sochi) நகரில் நேற்று நடைபெற்ற வால்டாய் மன்ற (Valdai Forum) நிகழ்வில் அந்நாட்டு அதிபர் புதின் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "இந்தியா நமது எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், அது ஒரு குறிப்பிட்ட இழப்பைச் சந்திக்கும். நிச்சயமாக, இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். 

    தலைகுனிவை ஏற்படுத்தும் முடிவுகளை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மேலும், பிரதமர் மோடியை நான் அறிவேன். அவர் ஒருபோதும் இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்

    அமெரிக்காவின் தண்டனை வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷியாவில் இருந்து எண்ணை இறக்குமதியால் சமப்படுத்தப்படும்.

    இந்தியா இறக்குமதி செய்வது முற்றிலும் ஒரு பொருளாதார கணக்கீடு. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தினால் 9 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும்.

    ரஷியாவின் வர்த்தக பங்காளிகளுக்கு அதிகவரிகள் விதிக்கப்படுவது உலகளாவிய விலைகளை உயர்த்தும். இத்தகைய நடவடிக்ககைள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.

    மேற்கத்திய நாடுகள் தடை விதித்த போதிலும் நேர்மையான பொருளாதார வளரர்ச்சியை தக்க வைத்து கொள்வதே ரஷியாவின் நோக்கமாகும்.

    உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வங்குவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். போர்க்களத்தில் எங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்தார். 

    மேலும் அமெரிக்கா ரஷியாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்கும் அதே வேளையில், மற்ற நாடுகள் ரஷிய எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்பு விடுப்பதாக புதின் சுட்டிக் காட்டினார்.

    2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவுக்கு சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்புடைய யுரேனிய விநியோகம் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு 800 மில்லியனுக்கும் அதிகமாக கூட இருக்கலாம் எனவும் புதின் தெரிவித்தார்.

    "அமெரிக்கர்கள் எங்கள் யுரேனியத்தை வாங்குகிறார்கள், ஏனெனில் அது லாபகரமானது, அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள். இந்த விநியோகங்களை சீராகவும் நம்பகத்தன்மையுடனும் தொடர நாங்கள் தயாராக உள்ளோம்." என்று புதின் மேலும் கூறினார். 

    ரஷியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் இந்த கருத்து வந்துள்ளது.    

    • மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்தது.
    • இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி இறந்ததாக காவல்துறை தெரிவித்தது.

    எத்தியோப்பியாவில் தேவாலயத்தில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் பலியாகினர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அம்ஹாரா பிராந்தியத்தின் மின்ஜார் ஷெங்கோரா வோரெடா, வடக்கு ஷேவா மண்டலத்தில் உள்ள அரெர்டி செயின்ட் மேரி தேவாலயத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

    புதன்கிழமை, மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

    இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி இறந்ததாகவும், ஓரங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடி காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.   

    • சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் தேர் பவனி.
    • ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புஷ்ப யாகம் சாற்றுமுறை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-17 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி மாலை 3.26 மணி வரை பிறகு துவாதசி மறுநாள் மதியம் 2.38 மணி வரை

    நட்சத்திரம் : திருவோணம் காலை 7.22 மணி வரை பிறகு அவிட்டம் மறுநாள் காலை 7.22 மணி வரை

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி

    இன்று சர்வ ஏகாதசி. துளசி கவுரி விரதம். சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் தேர் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு. ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புஷ்ப யாகம் சாற்றுமுறை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-ஆராய்ச்சி

    கடகம்-ஆசை

    சிம்மம்-செலவு

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-ஜெயம்

    தனுசு- இன்பம்

    மகரம்-மாற்றம்

    கும்பம்-துணிவு

    மீனம்-பொறுப்பு

    • யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.
    • டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

    இங்கிலாந்து நாட்டின் வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத ஆலயம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

    உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.

    அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

    சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, "திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்" என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை போலீசார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது. 

    ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

    இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இங்கிலாந்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    ரிஷபம்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மிதுனம்

    எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மறைமுக எதிர்ப்பால் மனக்கவலை அதிகரிக்கும். உறவினர்கள் உதவி செய்வதாகச் சொல்லி கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

    கடகம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாகப் பிரிவினை முடிவிற்கு வரும். உறவினர்கள் வழியில் விரயமுண்டு. தொழில் ரீதியாக வரும் தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும்.

    சிம்மம்

    பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

    கன்னி

    இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழிலில் கூட்டாளிகள் அனுசரிப்புக் குறையும். குடும்பத்தினர்கள் உங்களைப் பற்றிக் குறை கூறுவர். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

    துலாம்

    மகிழ்ச்சி கூடும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    விருச்சிகம்

    மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    தனுசு

    கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

    மகரம்

    உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    கும்பம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதி காரிகள் வழங்குவர்.

    மீனம்

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு கூடும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி வாங்கும் முயற்சி பலன்தரும்.

    • எதிர்பாரா விதமாக அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.
    • இதனால் 11000 அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் பாராசூட் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது. இதனால் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அங்கு குவிவது வழக்கம்.

    இந்நிலையில் மிட்செல் டீக்கின் (25) என்ற இளைஞர் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.

    இதனால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

    இந்த விபத்தில் அவரது பயிற்றுவிப்பாளருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் விமானம் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • டிராக்டர் ஏரியை அடைந்தபோது சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது.
    • இதில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.

    இந்தூர்:

    விஜயதசமியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் துர்கா சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த வழிபாடுகளை முடித்து ஆங்காங்கே நீர்நிலைகளில் அவை கரைக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கந்த்வா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை டிராக்டர் ஒன்றில் எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் பந்தனா பகுதியில் உள்ள ஏரியில் கரைப்பதற்காகச் சென்றனர்.

    டிராக்டர் அந்த ஏரியை அடைந்தபோது திடீரென சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது. இதில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். உள்ளூரைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும் இந்தப் பணிகளில் களமிறக்கப்பட்டனர்.

    அவர்கள் சுமார் 6 பக்தர்களை உயிருடன் மீட்டனர். ஆனால் 11 பேர் ஏரிக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்புக் குழுவினர் நீரில் இருந்து வெளியே எடுத்து வந்தனர்.

    மேலும் யாரும் நீரில் மூழ்கி உள்ளனரா என தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சம்பவத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    துர்கா சிலை கரைப்புக்காக சென்ற பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா?
    • மக்களைப் பாதுகாக்க வேண்டியதே அரசுதான் என்றார் இபிஎஸ்.

    தர்மபுரி:

    'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.

    செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள் என்றதும் அனைவரும் அமைதி காத்தனர். அதன்பின் இபிஎஸ் பேசியதாவது:

    தர்மபுரியில் எழுச்சிப் பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது. காரணம் உங்களுக்குத் தெரியும். கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

    இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களைப் பாதுகாத்திருக்கலாம். முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? இது மக்கள் கேட்கும் குரல்.

    ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா? நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி இதுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. முதல்வரின் கையில்தான் காவல்துறை இருக்கிறது. சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால், காவல்துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால், பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தால், 41 உயிரை இழந்திருக்க வேண்டியதில்லை.

    இன்னும் ஆழமாகப் பேசமுடியும். ஆனால் இந்த அரசாங்கம் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளனர், விசாரணை தொடங்கிவிட்டது. அதனால் மேலோட்டமாகத்தான் பேச முடியும். இவ்வளவு பிரச்னை நடந்துவிட்டது. தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்று ஸ்டாலின் சொன்னார், ஆனால் இன்று தலைகுனிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாடே அதிர்ந்துவிட்டது.

    இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது, எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் இல்லாத அளவுக்கு 41 உயிர்கள் பறி போயிருக்கிறது என்று சொன்னால், இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சி உங்கள் கையில் இருக்கிறது, ஆட்சியாளர்களைத்தான் கேட்க முடியும். யார் யார் மீதோ பழி சுமத்தி தப்பிக்கக் கூடாது, ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இனியாவது பொதுக்கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    நான் 163 தொகுதியில் மக்களைச் சந்தித்தேன். 5 முதல் 6 மாவட்டத்தில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய கழகத் தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர்.

    ஆளுங்கட்சி முதல்வர் கூட்டம் நடத்தினால் ஆளே இல்லாத பகுதியில்கூட காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்பு கொடுக்கும் முதலமைச்சர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்.

    இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு மக்கள் 2026 தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், உங்களுக்குத் தகுந்த பதிலடி வழங்குவார்கள்.

    அதுமட்டுமல்ல, ஸ்டாலின் மாடல் அரசு உயர் அதிகாரிகளை, செய்தியாளர்களைச் சந்தித்து இந்த ஆட்சியின் திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று பணித்து, இந்த 10 நாட்களாக இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் என்று சொல்லிவருகிறார்கள். அது சொல்லலாம், ஆனால் கரூரில் நடந்த சம்பவத்தை எப்படி அரசு செயலாளர் சொல்ல முடியும்?

    ஒரு நபர் கமிஷன் அமைத்துவிட்டு அரசு செயலாளர்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம். உங்கள் துறையின் பணிகளை மட்டும் நீங்கள் செய்யவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் எப்போது அங்கு சென்றார், இவர் ஏன் கையைக் காட்டவில்லை என்பதெல்லாம் உங்களுடைய பேச்சாக இருக்கக் கூடாது. இதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டியெடுத்து தவறான செயலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை விடமாட்டேன்.

    என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? மக்களின் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு மக்கள் துயரத்தை எண்ணி துடித்துக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய துயர சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்தில் சரி? அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும், இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சியிலும், அதிகாரிகளிடமும் அது கிடைக்காது.

    சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி நடந்த சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறார், நீங்க என்ன அரசியல்வாதியா? சட்டத்தைப் பாதுகாப்பது தான் உங்கள் பொறுப்பு. சரியான பாதுகாப்பு கொடுக்காததால் இத்தனை பேரை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம். கரூரில் ஒரு டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கிறது, அப்படியிருக்கும்போது ஏடிஜிபி செய்தியாளர்களிடம் நியாயப்படுத்தி பேசினர், கீழே இருக்கும் அதிகாரி எப்படி நியாயமாக விசாரிப்பார்? இவை எல்லாமே நடந்த தவறை மறைப்பதற்கு அரசு நடத்தும் கண் துடைப்பு நாடகம்.

    ஸ்டாலின் அவர்களே இவ்வளவு பிரச்சனை ஏற்பட்ட பிறகும் நீங்கள் திருந்தவில்லை. கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்மணியைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள், தலை சாய்ந்து செல்கிறார்கள். இப்படி தமிழர்கள் தலை குனிந்த காட்சிகளைக் கண்டு அனைவரும் பதறிப்போயிருக்கிறார்கள், இதற்கு பதில் சொல்ல வேண்டியது முதல்வர் தானே?

    ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளீர்கள், எந்த தகவல் என்றாலும் அதை கமிஷனில் தான் கொடுக்க வேண்டும். அதிகாரிகள் மூலம், தன்னுடைய அதிகாரத்தை வைத்து உண்மை சம்பவத்தை மறைத்துவிடலாம் என்றால் நிச்சயமாக நடக்காது, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

    கரூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இருக்கக் கூடாது, ஆனால் முகத்தில் பயம் தெரிகிறது. அவர் பேச்சில் பயம் தெரிகிறது, மாறி மாறி அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் எல்லாம் உண்மையை மறைத்துப் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

    பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கரூர் எம்.எல்.ஏ நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒருமுறை மக்கள் ஏமாந்துவிட்டார்கள், இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். உங்களுடைய போலிக் கொலுசு, போலி வாக்குறுதி இனி எடுபடாது. அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 3 சென்ட் இடம் தன்னுடைய சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுப்பதாகவும், வீடுகட்டித் தருவதாகவும் 25 ஆயிரம் பேருக்கு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அத்தனையும் வெற்று அறிவிப்பு. அவற்றை எல்லாம் மாவட்ட மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள், எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறார்கள். சரியான தண்டனை வழங்குவார்கள்.

    துயர சம்பவம் நடந்துவிட்டது. முதல்வர் இரவோடு இரவாக வந்து ஆறுதல் சொன்னார். ரைட். துணை முதல்வர் உல்லாசமாக வெளிநாடு போய்விட்டார். ஏங்க இங்கே நாடு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருக்கு, நாட்டு மக்கள் பதறிக்கொண்டு இருக்கிறார்கள். உடனே தனி விமானம் பிடித்து வருகிறார், பார்த்தார், மீண்டும் விமானம் ஏறி போய்விட்டார். இவரெல்லாம் ஆண்டால் நாடு உருப்படியாக இருக்குமா? மக்கள் உயிரிழந்து துடிக்கும் நேரத்தில்கூட இவர்களுக்கு இரக்கம் இல்லை, உல்லாச சுற்றுப்பயணம் தான் முக்கியம். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாட்டு மக்கள் உணரவேண்டும்.

    ஒரு துணை முதல்வர் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்படும்போது எங்கே இருக்கவேண்டும்? தமிழ்நாட்டில் இருந்து தேவையான உதவிகளை செய்துகொடுக்க வேண்டும். அந்த நெரிசலில் சிக்கியவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையெல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தி இருந்தால் ஒரு நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். ஆனால் அதையெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் எதிர்பார்க்க முடியாது.

    யார் எப்படி இருந்தால் என்ன? தன் குடும்பம் நன்றாகயிருக்க வேண்டும். மக்களை சுரண்டி உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இதுதான் ஆட்சியாளர்களின் குறிக்கோள். இனியாவது அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு கொடுங்கள். இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பிரித்துப் பார்க்காதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நம்முடைய சகோதர, சகோதரிகள் யார் இறந்தாலும் அது நம் குடும்ப இழப்பு என்பதை உணரவேண்டும். தி.மு.க. இதை இன்னமும் உணர்ந்தபாடில்லை.

    அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜால்ரா அடிக்கின்றன. திருமாவளவன் உண்மையில் மனசாட்சியோடு பேசுகிறாரா? 41 உயிர் போன நேரத்தில் ஏதேதோ குற்றச்சாட்டுகள் சொல்லி ஆட்சியாளர்களூக்கு தூபம் போடுவதை விட்டுவிடுங்கள்.

    இதே திருமா திருச்சியில் மாநில மாநாடு நடத்தினார். அவரை எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என்பதை அவரே கூறினார். இடது கம்யூனிஸ்ட் விழுப்புரத்தில் மாநாடு நடத்தினார்கள், முழுமையான அனுமதி கொடுக்கவில்லை என்பதை எல்லாம் மறந்து விடாதீர்கள். உங்கள் கட்சிக்கும் இதே நிலை ஒரு காலத்தில் வந்தே தீரும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    இதே அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா இருக்கும்போதும், அம்மா மறைந்த பிறகும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தன. அத்தனைக்கும் அனுமதியும் பாதுகாப்பும் கொடுத்தோம். எந்த சம்பவமும் இல்லாமல் எல்லா கட்சிகளும் போராட்டம் நடத்தினார்கள். அதை நாங்கள் ஜனநாயகமாகப் பார்த்தோம், இந்த ஆட்சியில் ஜனநாயகத்தைப் பார்க்க முடியாது.

    நாங்கள் எழுச்சிப் பயணக் கூட்டத்துக்கு கரூர் பஸ் நிலையம் பக்கத்தில் ரவுண்டானா இருந்தது, அதற்கு அருகில் இடம் கேட்டோம், விஜயபாஸ்கர் கேட்டார். கொடுக்கவில்லை. இப்போது துயர சம்பவம் நடந்த இடத்தைத்தான் கொடுத்தார்கள், இருந்தாலும் வேறு வழியின்றி அவ்விடத்தில் நடத்தினோம்.

    இதே அ.தி.மு.க. ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது தி.மு.க.வுக்கு இரண்டு முறை கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் அனுமதி கொடுத்தோம். இதுதான் அ.தி.மு.க. நடுநிலையோடு நடந்தோம். திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு 3 முறை ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடத்தினீர்கள், உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை ஒடுக்கும் போக்கை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் கட்சி எதிர்காலத்தில் காணாமல் போய்விடும். ஆட்சி அதிகாரம் இருப்பதால் தான் இந்த ஆட்டம் போடுறீங்க, இதுக்கெல்லாம் மக்கள் முடிவு கட்டுகின்ற நேரம் வந்துவிட்டது என்பதை ஸ்டாலின் உணரவேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. போதை பொருள் தாராளமாக கிடைக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் கூடும் இடங்களில் கஞ்சா விற்பனை நடக்கிறது, சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாவது இந்த போதை ஆசாமிகளால் தான். கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை. மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? இப்படிப்பட்ட முதல்வரை எங்கேயும் பார்க்க முடியாது எந்த திறமையும் இல்லாத பொம்மை முதல்வர்.

    இந்த தர்மபுரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? ஆட்சி போகுற நேரத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுகிறார்களாம், எங்கே பணம் இருக்கிறது? பணமே ஒதுக்கவில்லை. அடுத்த தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும், என்பதற்காக சுமார் 8 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அத்தனையும் பொய்.

    எத்தனை திட்டத்தை அதிமுக ஆட்சியில் அறிவித்தேன், அவற்றை எல்லாம் முடக்கி வைத்திருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது எப்படி புதிய திட்டத்தை நிறைவேற்றுவீர்கள்? ஏற்கனவே தமிழக அரசு திவாலாகிவிட்டது. திமுகவின் நான்காண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டனர். இந்தாண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் இருக்கும். ஆனால் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அப்புறம் எதுக்கு கடன் வாங்குகிறீர்கள்? எதுவும் தெரியவில்லை. திறமையான முதல்வராக இருந்தால்தானே நிர்வாகம் தெரியும், இவர் பொம்மை முதல்வராக எதுவும் தெரியாமல் ஆட்சி நடத்துகிறார்.

    இந்த கடனை எல்லாம் மக்கள்தான் கட்ட வேண்டும். உங்கள் தலையில்தான் எல்லாமே விழும். எப்படி கடனை கட்ட முடியும்.? அவர் கடனை வாங்கிவிட்டு போய்விடுவார், வரி மூலமே திருப்பிச் செலுத்த வேண்டும்.

    மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67 சதவீதம் உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். இதெல்லாம் உண்மைதானே? திமுககாரருக்கு தில்லு திராணி தெம்பு இருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். இந்த கேள்வியை கூட்டத்தின் வாயிலாக கேட்கிறேன். மக்கள் கருத்தின் அடிப்படையில் பேசுகிறேன்.

    10 ரூபாய் என்றால் யார் ஞாபகம் வருது? நேற்று வீடியோவில் என்னைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5,400 கோடியுமாக இந்த 4 ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதையெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்தால் விசாரிப்போம், கவலைப்படாதீர்கள். இந்த 22 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக்கொண்டுதான் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    உதயநிதியும் சபரீசனும் 30,000 கோடியை வைத்து திணறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒருமுறை சொன்னார். இதற்கு முதல்வர் இதுவரை பதிலே சொல்லவில்லை. இரண்டு வருடத்தில் 30,000 கோடி கொள்ளை என்றால், 53 மாதத்தில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள். கொள்ளையடித்த பணத்தை, அடுத்தாண்டு தேர்தலில் கொடுத்து வாக்குகளைப் பெற திட்டமிடுகிறார்கள். ஒருமுறை ஏமாந்துவிட்டீர்கள், அதற்கே நாட்டு மக்கள் படும் துன்பம் ஏராளம். மீண்டும் ஏமாந்து விடாதீர்கள்.

    விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். எம்ஜிஆர், அம்மா இருவரும் மக்களுக்காக வாழ்ந்தனர், மக்கள் தான் வாரிசு. திட்டங்களை பார்த்துப் பார்த்து செயல்படுத்தினார்கள். அவர்கள் வழியில் அதிமுக அரசு செயல்பட்டது.

    ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.

    மகளிர் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்குச் சென்றுவர ஏதுவாக அம்மா இருசக்கர வாகன திட்டம் மூலமாக சுமார் 3 லட்சம் பேருக்கு 25,000 ரூபாய் மானியம் கொடுத்தோம். இந்த திட்டத்தையும் திமுக அரசு ரத்துசெய்துவிட்டது. உங்கள் ஆதரவினால் அதிமுக அரசு மீண்டும் அமையும்போது இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவுசெய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75,000 ரூபாய் மானியமாக கொடுக்கப்படும்.

    அதிமுக அரசு மீண்டும் அமைவதற்கு துணை நிற்க வேண்டும். திமுக அரசு மக்களுக்கு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வளமோடு செழிப்போடு அதிகாரத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் எண்ணம் அப்படிப்பட்ட எண்ணம் உடையவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் தேர்தல் 2026 தேர்தல்.

    தர்மபுரி தொகுதியில் அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டினோம், துணை மின் நிலையம் அமைத்தோம், புதிய தாலுகா அமைத்தோம், சிப்காட் 1789 ஏக்கர் ஃபேஸ் 1 திட்டம் கொண்டுவந்தோம். இதை அதிமுக கொண்டுவந்ததால் பணிகளை ஆமை வேகத்தில் செய்கின்றனர். புதிய நீதிமன்றக் கட்டிடம் அமைத்தோம். மாசுகட்டுப்பாடு அலுவலகம் கட்டப்பட்டது. இப்படி பல திட்டம் கொடுத்தோம்.

    சேஷம்பட்டி முதல் தர்மபுரி வரை வெளிவட்ட சாலை அமைக்க வேண்டும், தர்மபுரி சாலை விரிவாக்கம், புதிய ஊராட்சி தொடங்க வேண்டும், விவசாய கிணத்தில் நீர்மட்டம் உயர ஒகேனக்கல் உபரி நீரை கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் பல கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இவை எல்லாமே அதிமுக ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும். 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 40 ரன்னும், மொகம்மது நபி 38 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் தன்ஜிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய வங்கதேச வீரர்களை ரஷித் கான் சோதனைக்கு ஆளாக்கினார்.

    தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த நிலையில் பர்வேஸ் ஹொசைன் 54 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து பந்துவீசிய ரஷித் கான் தன்ஜிம் ஹசனை 51 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். சயீப் ஹசன், ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன் ஆகியோரையும் விரைவில் அவுட்டாக்கினார்.

    118 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய நூருல் ஹசன், ரிஷாத் ஹொசைன் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெறச் செய்தது.

    இறுதியில், வங்கதேசம் 18.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பத்தாம் நாளான இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்து வந்தனர்.

    திருவிழாவையொட்டி தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

    இந்நிலையில், பத்தாம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.

    இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.

    அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார்.

    அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர். 

    • தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.
    • மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள் என்றார் இ.பி.எஸ்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தர்மபுரி தொகுதியில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தை முடித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர்-தர்மபுரி பிரதான சாலையில் திரண்டிருந்த ஏராளமான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 53 மாதம் ஆகிவிட்டது. இந்த தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? சிந்தியுங்கள்.

    அ.தி.மு.க. அரசு இருக்கும்போது ஏழை, எளிய மாணவர்கள் படிக்க பொறியியல் கல்லூரி கொண்டுவந்தோம். எல்லோரும் இன்ஜினியராகும் வாய்ப்பு உருவாக்கினோம். பட்டப்படிப்புக்கு கலை அறிவியல் கல்லூரி கொண்டுவந்தோம். கிராமம் முதல் நகரம் வரை அதிகமாக பட்டப்படிப்பு படிக்கும் சூழலை உருவாக்கினோம்.

    கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அம்மாவிடம் எடுத்துச்சொல்லி 68 கலை அறிவியல் கல்லூரியை 10 ஆண்டுகளில் கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி என அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். மருத்துவக் கல்லூரி இடங்களை 3,445-ல் இருந்து 6 ஆயிரம் பேருக்கு உருவாக்கினோம்.

    அதுமட்டுமல்ல, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி உங்கள் மாவட்டத்திலும் ஒரு சட்டக்கல்லூரி கொண்டுவந்தோம், 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019-ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.

    சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், மாநிலம் மேன்மையடைய கல்வி சிறக்க வேண்டும் என கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினோம். ஒரு அரசு எப்படி செயல்பட்டது என்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியே உதாரணம்.

    தி.மு.க. ஆட்சியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தாரா? மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என ஸ்டாலின் பேசுகிறார். நாங்கள் மத்திய அரசை எதிர்பார்க்கவில்லை, அம்மா இருக்கும்போது 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மாநில அரசின் நிதியில் உருவாக்கினார். அப்படியான தில்லு திராணி ஸ்டாலினுக்கு இருக்கிறதா?

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட, அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகின்றன.

    அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன்மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது.

    ஸ்டாலினும்தான் முதலீடு ஈர்க்கிறேன் என்று வெளிநாடு போனார். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பத்தரை லட்சம் முதலீடு ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்கள். 77 சதவீத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொன்னார். அப்படி என்றால் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லையே? எல்லாம் பொய். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகும் இப்போதும் அதையே செய்கிறார்.

    ஜெர்மனிக்கு தொழில் முதலீடு ஈர்க்கப்போகவில்லை, முதலீடு செய்யப்போனதுதான் உண்மை. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் சொல்கிறார். வெள்ளை அறிக்கை விடவேண்டும் என்று கேட்டேன். வெள்ளை பேப்பரை எடுத்து தொழிற்துறை மந்திரி காட்டுகிறார். ஸ்டாலின் அவர்களே… தொழில்துறை மந்திரியும் சரி, நீங்களும் சரி சட்டமன்றத் தேர்தலில் பூஜ்ஜியம்தான் வாங்கப் போறீங்க. எப்படி வெள்ளை பேப்பரை காட்டுறீங்களோ அதேமாதிரி மக்கள் வெள்ளை பேப்பரில் பூஜ்ஜியம் போட்டுக் கொடுப்பார்கள்.

    பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேட்டால், மக்களுக்காக அதை சொல்ல வேண்டியது உங்கள் கடமை. ஆனால் கிண்டலும் கேலியும் செய்து மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இளைஞர்களை ஏமாற்றும் விதமாக வெறும் வெள்ளைப் பேப்பரை காட்டுகிறீர்கள். இதற்காகவா உங்களை அமைச்சராக்கினார்கள்? இவர்களுக்கு முடிவுகட்டும் தேர்தல் 2026 தேர்தல்.

    இப்போது எங்கு பார்த்தாலும் பள்ளி, கல்லூரிக்கு அருகில் கஞ்சா விற்பனை நடக்கிறது. போதைப் பொருளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று நான் சொன்னபோது கேட்காமல், இப்போது பேசுகிறார். மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் சீரழிந்தபிறகு சொல்லி என்ன பயன்?. மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள். தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.

    அண்மையில் கரூரில் நடந்த சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது, ஒரு நபர் கமிஷன் போட்டிருப்பதால் ஆழமாகப் போகாமல் மேலோட்டமாகப் பேசுறேன். துணை முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் போனார். செப்டம்பர் 27 துயர சம்பவத்தில் 41 பேர் இறந்ததாக தகவல் தெரிவித்தனர், உடனே தனி விமானத்தில் திருச்சி வந்தார். அங்கிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்து அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சுற்றுலா போய்விட்டார்.

    என்னங்க அநியாயம் இது? 41 பேர் இறந்துள்ளனர். இப்போது மக்கள் துயரத்தில் பங்கெடுப்பவரே உண்மையான துணை முதல்வர். இப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்றுதான் அவர் நினைக்கிறார். உண்மையிலேயே அக்கறை இருந்தால் இங்கிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் அளவுக்கு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அழகு. அதெல்லாம் கருணாநிதி குடும்பத்தினருக்கு வராது. மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சி அரசு என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.

    ஒரு பொதுக்கூட்டம் என்றால் மக்கள் எப்படி வருவார்கள், எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும். முழு கவனம் எடுத்து செயல்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். ஏற்கனவே அவர்கள் 4 கூட்டம் நடத்தினார்கள், அவற்றிலும் பாதுகாப்பில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிற போது அவர்களைக் காப்பது நம் கடமையாக இருக்க வேண்டும்.

    நடுநிலையோடு சொல்கிறேன். அ.தி.மு.க. பொன்விழா கண்ட கட்சி, எம்.ஜி.ஆர். வருகிறார் என்றால் ஒருநாள் முன்பே மக்கள் காத்துக் கிடப்பார்கள். அப்படி இருக்கும் காலத்தில்கூட எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை, அம்மா பல கூட்டம் போட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அப்போதும் எதுவும் நடக்கவில்லை.

    53 ஆண்டு காலம் பல மாநாடு, பல கூட்டம், பல ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மட்டுமல்ல தி.மு.க. உட்பட எல்லா கட்சிகளுக்கும் முழமையாக பாதுகாப்பு கொடுத்தது அ.தி.மு.க. அரசு. எந்தக் கட்சி கூட்டம் நடத்தினாலும் முழு பாதுகாப்பு கொடுத்ததால் இதுபோல எந்த சம்பவமும் நடக்கவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில், கேட்கப்பட்ட அத்தனை கூட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம், எதையும் நிறுத்தவில்லை. ஏனெனில் எதையும் சந்திக்கும் தெம்பு, திராணி அ.தி.மு.க.வுக்கு இருந்தது. இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இல்லை பொம்மை முதல்வர். தி.மு.க. ஆட்சியில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில்லை, நீதிமன்றம் போய் அனுமதி வாங்கி கூட்டம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படியே நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் இந்த அரசு பாதுகாப்பு கொடுக்க மறுக்கிறது அதனால் 41 உயிர்களை இழந்திருக்கிறோம்.

    நான் ஜூலை 7-ம் தேதி எழுச்சி பயணம் தொடங்கினேன் பாப்பிரெட்டிப்பட்டி 165-வது தொகுதி. நான்கைந்து தொகுதிகளில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தது, மீதி இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் பாதுகாப்பில்தான் நடத்தினோம். இப்போதுதான் காவல்துறை வந்திருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்து முடிந்து 41 உயிர்கள் பறிபோன பிறகுதான் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டியது தான் முதல்வரின் கடமை. அவரிடம் தான் காவல்துறை உள்ளது. தேர்தல் நேரத்தில் கருத்துகளைச் சொல்லி மோதிக்கொள்ளலாம். ஆனால், ஆட்சி அமைந்தபிறகு மக்களை கண்ணை இமை காப்பதுபோல காக்க வேண்டும். அப்படி அ.தி.மு.க. ஆட்சியில் பார்க்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் மாற்றாந்தாய் மக்கள் போல பார்ப்பது சரியல்ல, இனியாவது அரசு உணர்ந்து ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றில்லாமல் நடுநிலையோடு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.

    பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன், அவற்றில் 6 ஆயிரம் கண்மாய்கள் 1240 கோடி செலவில் தூர் வாரினோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பொதுப்பணித் துறையில் எஞ்சிய 8 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்படும். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கொடுத்தோம். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடரின்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம்.

    விவசாய தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம். முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை 1000 ரூபாய் கொடுத்தோம். ஒரே சட்டமன்ற விதி 110ன் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்து, 90 சதவீதம் பேருக்குக் கொடுத்தோம்.

    கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.

    பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 87 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.

    ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.

    இந்தப் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் திட்டத்தின் மூலமாக இங்கிருக்கும் 66 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் கேட்டு என்னிடத்தில் கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்தபோது கோரிக்கை வைத்தார். அதை ஏற்று அதை ஆய்வுசெய்வதற்கு 10 லட்சம் ஒதுக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது, மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    நாட்டில் பணம், நகை திருடுவார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட கேவலமான நிலை கிடையாது. தி.மு.க. எம்.எல்.ஏ மருத்துவமனையில் வறுமையில் வாடும் ஏழைகளை தேடிப்பிடித்து அவர்களுடைய கிட்னியை முறைகேடாக எடுத்து பல லட்சத்துக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. அரசாங்கமே குழு அமைத்து ஆய்வு செய்து உண்மை என்பதை கண்டறிந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதியை மட்டும் ரத்துசெய்தனர். இதில், யாரையும் கைது செய்யவில்லை.

    கொடுமையிலும் கொடுமை வறுமை. அந்த வறுமையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா? நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு ஆசை காட்டி கிட்னிக்குப் பதிலாக கல்லீரல் எடுத்துவிட்டனர். இப்படிப்பட்ட கொடுமையான அரசு தி.மு.க. அரசு. நான் அடிக்கடி சொல்வது போல் பொம்மை முதல்வர் நாட்டை ஆள்வதால் மக்களுக்குத் துன்பமே கிடைக்கிறது.

    இந்த அரசால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது? விலைவாசி உயர்ந்துபோச்சு, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தினந்தோறும் கொலை நிலவரம் வருகிறது.

    அ.தி.மு.க. உங்களுடைய அரசு. இது விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயி. எனக்கு வேறு எந்த தொழிலும் இல்லை, அதனால்தான் தி.மு.க. அரசால் என்மீது எந்த வழக்கும் போட முடியவில்லை. என்னென்னமோ தோண்டிப் பார்த்தார், ஒன்றும் நடக்கவில்லை. விவசாயத்தில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது, மண்ணைத்தான் அள்ளிச்செல்ல முடியும்.

    உங்களோடு பேசும் வாய்ப்பை இறைவன் கொடுத்த வரமாகக் கருதுறேன்.

    இது மண்வெட்டி பிடித்த கை. சிறு வயதில் இருந்தே என்னுடைய அப்பா விவசாயத்தில் என்னை ஈடுபடுத்தினார். விவசாயம் தெரிந்தால்தான் தொழிலாளிக்கு சொல்லிக்கொடுக்க முடியும். நெற்பயிர் எப்படி நடவேண்டும், மஞ்சள், வாழை தென்னை, பாக்கு எல்லாமே என் தோட்டத்தில் இருக்கிறது. நீங்கள் எல்லாம் தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறீர்கள், அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால் அங்கு சென்று சிகிச்சை எடுக்கலாம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். தி.மு.க. அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். இப்படி ஏதாவது திட்டம் தி.மு.க. கொண்டுவந்திருக்கிறதா?

    இந்தத் தொகுதியில் பத்தல் மலைக்கு தார்ச்சாலை, ஆரம்ப சுகாதர நிலையம் அமைத்தோம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டினோம், கால்நடை மருத்துவமனை திறந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் கடத்தூர் புதிய ஒன்றியம் அமைத்து புதிய கட்டிடம் கட்டினோம். இவற்றுக்கெல்லாம் தி.மு.க. ஆட்சியில் ரிப்பன் வெட்டி திறந்தனர். வேப்பாடு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கேட்டுள்ளீர்கள், கட்டிக் கொடுக்கப்படும், இத்தொகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும், வட்டாட்சியர் அலுவலகம் பரிசீலிக்கப்படும். 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இங்கே கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்குப் போகும்போது வாகனத்தில் பத்திரமாகப் போய்ச் சேர வேண்டும். மக்களே, உயிர் முக்கியம். இரவு நேரம் வாகன ஓட்டிகள் பத்திரமாக வீடு போய் சேரவேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பை பை ஸ்டாலின் என தெரிவித்தார்.

    ×