என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முன்னாள் அமைச்சர் பதறுவது ஏன்? செந்தில் பாலாஜியை தாக்கிய இ.பி.எஸ்.
    X

    முன்னாள் அமைச்சர் பதறுவது ஏன்? செந்தில் பாலாஜியை தாக்கிய இ.பி.எஸ்.

    • ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா?
    • மக்களைப் பாதுகாக்க வேண்டியதே அரசுதான் என்றார் இபிஎஸ்.

    தர்மபுரி:

    'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.

    செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள் என்றதும் அனைவரும் அமைதி காத்தனர். அதன்பின் இபிஎஸ் பேசியதாவது:

    தர்மபுரியில் எழுச்சிப் பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது. காரணம் உங்களுக்குத் தெரியும். கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

    இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களைப் பாதுகாத்திருக்கலாம். முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? இது மக்கள் கேட்கும் குரல்.

    ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா? நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி இதுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. முதல்வரின் கையில்தான் காவல்துறை இருக்கிறது. சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால், காவல்துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால், பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தால், 41 உயிரை இழந்திருக்க வேண்டியதில்லை.

    இன்னும் ஆழமாகப் பேசமுடியும். ஆனால் இந்த அரசாங்கம் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளனர், விசாரணை தொடங்கிவிட்டது. அதனால் மேலோட்டமாகத்தான் பேச முடியும். இவ்வளவு பிரச்னை நடந்துவிட்டது. தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்று ஸ்டாலின் சொன்னார், ஆனால் இன்று தலைகுனிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாடே அதிர்ந்துவிட்டது.

    இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது, எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் இல்லாத அளவுக்கு 41 உயிர்கள் பறி போயிருக்கிறது என்று சொன்னால், இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சி உங்கள் கையில் இருக்கிறது, ஆட்சியாளர்களைத்தான் கேட்க முடியும். யார் யார் மீதோ பழி சுமத்தி தப்பிக்கக் கூடாது, ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இனியாவது பொதுக்கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    நான் 163 தொகுதியில் மக்களைச் சந்தித்தேன். 5 முதல் 6 மாவட்டத்தில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய கழகத் தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர்.

    ஆளுங்கட்சி முதல்வர் கூட்டம் நடத்தினால் ஆளே இல்லாத பகுதியில்கூட காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்பு கொடுக்கும் முதலமைச்சர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்.

    இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு மக்கள் 2026 தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், உங்களுக்குத் தகுந்த பதிலடி வழங்குவார்கள்.

    அதுமட்டுமல்ல, ஸ்டாலின் மாடல் அரசு உயர் அதிகாரிகளை, செய்தியாளர்களைச் சந்தித்து இந்த ஆட்சியின் திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று பணித்து, இந்த 10 நாட்களாக இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் என்று சொல்லிவருகிறார்கள். அது சொல்லலாம், ஆனால் கரூரில் நடந்த சம்பவத்தை எப்படி அரசு செயலாளர் சொல்ல முடியும்?

    ஒரு நபர் கமிஷன் அமைத்துவிட்டு அரசு செயலாளர்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம். உங்கள் துறையின் பணிகளை மட்டும் நீங்கள் செய்யவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் எப்போது அங்கு சென்றார், இவர் ஏன் கையைக் காட்டவில்லை என்பதெல்லாம் உங்களுடைய பேச்சாக இருக்கக் கூடாது. இதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டியெடுத்து தவறான செயலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை விடமாட்டேன்.

    என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? மக்களின் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு மக்கள் துயரத்தை எண்ணி துடித்துக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய துயர சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்தில் சரி? அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும், இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சியிலும், அதிகாரிகளிடமும் அது கிடைக்காது.

    சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி நடந்த சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறார், நீங்க என்ன அரசியல்வாதியா? சட்டத்தைப் பாதுகாப்பது தான் உங்கள் பொறுப்பு. சரியான பாதுகாப்பு கொடுக்காததால் இத்தனை பேரை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம். கரூரில் ஒரு டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கிறது, அப்படியிருக்கும்போது ஏடிஜிபி செய்தியாளர்களிடம் நியாயப்படுத்தி பேசினர், கீழே இருக்கும் அதிகாரி எப்படி நியாயமாக விசாரிப்பார்? இவை எல்லாமே நடந்த தவறை மறைப்பதற்கு அரசு நடத்தும் கண் துடைப்பு நாடகம்.

    ஸ்டாலின் அவர்களே இவ்வளவு பிரச்சனை ஏற்பட்ட பிறகும் நீங்கள் திருந்தவில்லை. கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்மணியைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள், தலை சாய்ந்து செல்கிறார்கள். இப்படி தமிழர்கள் தலை குனிந்த காட்சிகளைக் கண்டு அனைவரும் பதறிப்போயிருக்கிறார்கள், இதற்கு பதில் சொல்ல வேண்டியது முதல்வர் தானே?

    ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளீர்கள், எந்த தகவல் என்றாலும் அதை கமிஷனில் தான் கொடுக்க வேண்டும். அதிகாரிகள் மூலம், தன்னுடைய அதிகாரத்தை வைத்து உண்மை சம்பவத்தை மறைத்துவிடலாம் என்றால் நிச்சயமாக நடக்காது, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

    கரூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இருக்கக் கூடாது, ஆனால் முகத்தில் பயம் தெரிகிறது. அவர் பேச்சில் பயம் தெரிகிறது, மாறி மாறி அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் எல்லாம் உண்மையை மறைத்துப் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

    பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கரூர் எம்.எல்.ஏ நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒருமுறை மக்கள் ஏமாந்துவிட்டார்கள், இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். உங்களுடைய போலிக் கொலுசு, போலி வாக்குறுதி இனி எடுபடாது. அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 3 சென்ட் இடம் தன்னுடைய சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுப்பதாகவும், வீடுகட்டித் தருவதாகவும் 25 ஆயிரம் பேருக்கு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அத்தனையும் வெற்று அறிவிப்பு. அவற்றை எல்லாம் மாவட்ட மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள், எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறார்கள். சரியான தண்டனை வழங்குவார்கள்.

    துயர சம்பவம் நடந்துவிட்டது. முதல்வர் இரவோடு இரவாக வந்து ஆறுதல் சொன்னார். ரைட். துணை முதல்வர் உல்லாசமாக வெளிநாடு போய்விட்டார். ஏங்க இங்கே நாடு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருக்கு, நாட்டு மக்கள் பதறிக்கொண்டு இருக்கிறார்கள். உடனே தனி விமானம் பிடித்து வருகிறார், பார்த்தார், மீண்டும் விமானம் ஏறி போய்விட்டார். இவரெல்லாம் ஆண்டால் நாடு உருப்படியாக இருக்குமா? மக்கள் உயிரிழந்து துடிக்கும் நேரத்தில்கூட இவர்களுக்கு இரக்கம் இல்லை, உல்லாச சுற்றுப்பயணம் தான் முக்கியம். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாட்டு மக்கள் உணரவேண்டும்.

    ஒரு துணை முதல்வர் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்படும்போது எங்கே இருக்கவேண்டும்? தமிழ்நாட்டில் இருந்து தேவையான உதவிகளை செய்துகொடுக்க வேண்டும். அந்த நெரிசலில் சிக்கியவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையெல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தி இருந்தால் ஒரு நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். ஆனால் அதையெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் எதிர்பார்க்க முடியாது.

    யார் எப்படி இருந்தால் என்ன? தன் குடும்பம் நன்றாகயிருக்க வேண்டும். மக்களை சுரண்டி உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இதுதான் ஆட்சியாளர்களின் குறிக்கோள். இனியாவது அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு கொடுங்கள். இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பிரித்துப் பார்க்காதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நம்முடைய சகோதர, சகோதரிகள் யார் இறந்தாலும் அது நம் குடும்ப இழப்பு என்பதை உணரவேண்டும். தி.மு.க. இதை இன்னமும் உணர்ந்தபாடில்லை.

    அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜால்ரா அடிக்கின்றன. திருமாவளவன் உண்மையில் மனசாட்சியோடு பேசுகிறாரா? 41 உயிர் போன நேரத்தில் ஏதேதோ குற்றச்சாட்டுகள் சொல்லி ஆட்சியாளர்களூக்கு தூபம் போடுவதை விட்டுவிடுங்கள்.

    இதே திருமா திருச்சியில் மாநில மாநாடு நடத்தினார். அவரை எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என்பதை அவரே கூறினார். இடது கம்யூனிஸ்ட் விழுப்புரத்தில் மாநாடு நடத்தினார்கள், முழுமையான அனுமதி கொடுக்கவில்லை என்பதை எல்லாம் மறந்து விடாதீர்கள். உங்கள் கட்சிக்கும் இதே நிலை ஒரு காலத்தில் வந்தே தீரும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    இதே அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா இருக்கும்போதும், அம்மா மறைந்த பிறகும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தன. அத்தனைக்கும் அனுமதியும் பாதுகாப்பும் கொடுத்தோம். எந்த சம்பவமும் இல்லாமல் எல்லா கட்சிகளும் போராட்டம் நடத்தினார்கள். அதை நாங்கள் ஜனநாயகமாகப் பார்த்தோம், இந்த ஆட்சியில் ஜனநாயகத்தைப் பார்க்க முடியாது.

    நாங்கள் எழுச்சிப் பயணக் கூட்டத்துக்கு கரூர் பஸ் நிலையம் பக்கத்தில் ரவுண்டானா இருந்தது, அதற்கு அருகில் இடம் கேட்டோம், விஜயபாஸ்கர் கேட்டார். கொடுக்கவில்லை. இப்போது துயர சம்பவம் நடந்த இடத்தைத்தான் கொடுத்தார்கள், இருந்தாலும் வேறு வழியின்றி அவ்விடத்தில் நடத்தினோம்.

    இதே அ.தி.மு.க. ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது தி.மு.க.வுக்கு இரண்டு முறை கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் அனுமதி கொடுத்தோம். இதுதான் அ.தி.மு.க. நடுநிலையோடு நடந்தோம். திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு 3 முறை ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடத்தினீர்கள், உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை ஒடுக்கும் போக்கை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் கட்சி எதிர்காலத்தில் காணாமல் போய்விடும். ஆட்சி அதிகாரம் இருப்பதால் தான் இந்த ஆட்டம் போடுறீங்க, இதுக்கெல்லாம் மக்கள் முடிவு கட்டுகின்ற நேரம் வந்துவிட்டது என்பதை ஸ்டாலின் உணரவேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. போதை பொருள் தாராளமாக கிடைக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் கூடும் இடங்களில் கஞ்சா விற்பனை நடக்கிறது, சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாவது இந்த போதை ஆசாமிகளால் தான். கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை. மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? இப்படிப்பட்ட முதல்வரை எங்கேயும் பார்க்க முடியாது எந்த திறமையும் இல்லாத பொம்மை முதல்வர்.

    இந்த தர்மபுரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? ஆட்சி போகுற நேரத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுகிறார்களாம், எங்கே பணம் இருக்கிறது? பணமே ஒதுக்கவில்லை. அடுத்த தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும், என்பதற்காக சுமார் 8 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அத்தனையும் பொய்.

    எத்தனை திட்டத்தை அதிமுக ஆட்சியில் அறிவித்தேன், அவற்றை எல்லாம் முடக்கி வைத்திருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது எப்படி புதிய திட்டத்தை நிறைவேற்றுவீர்கள்? ஏற்கனவே தமிழக அரசு திவாலாகிவிட்டது. திமுகவின் நான்காண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டனர். இந்தாண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் இருக்கும். ஆனால் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அப்புறம் எதுக்கு கடன் வாங்குகிறீர்கள்? எதுவும் தெரியவில்லை. திறமையான முதல்வராக இருந்தால்தானே நிர்வாகம் தெரியும், இவர் பொம்மை முதல்வராக எதுவும் தெரியாமல் ஆட்சி நடத்துகிறார்.

    இந்த கடனை எல்லாம் மக்கள்தான் கட்ட வேண்டும். உங்கள் தலையில்தான் எல்லாமே விழும். எப்படி கடனை கட்ட முடியும்.? அவர் கடனை வாங்கிவிட்டு போய்விடுவார், வரி மூலமே திருப்பிச் செலுத்த வேண்டும்.

    மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67 சதவீதம் உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். இதெல்லாம் உண்மைதானே? திமுககாரருக்கு தில்லு திராணி தெம்பு இருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். இந்த கேள்வியை கூட்டத்தின் வாயிலாக கேட்கிறேன். மக்கள் கருத்தின் அடிப்படையில் பேசுகிறேன்.

    10 ரூபாய் என்றால் யார் ஞாபகம் வருது? நேற்று வீடியோவில் என்னைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5,400 கோடியுமாக இந்த 4 ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதையெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்தால் விசாரிப்போம், கவலைப்படாதீர்கள். இந்த 22 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக்கொண்டுதான் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    உதயநிதியும் சபரீசனும் 30,000 கோடியை வைத்து திணறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒருமுறை சொன்னார். இதற்கு முதல்வர் இதுவரை பதிலே சொல்லவில்லை. இரண்டு வருடத்தில் 30,000 கோடி கொள்ளை என்றால், 53 மாதத்தில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள். கொள்ளையடித்த பணத்தை, அடுத்தாண்டு தேர்தலில் கொடுத்து வாக்குகளைப் பெற திட்டமிடுகிறார்கள். ஒருமுறை ஏமாந்துவிட்டீர்கள், அதற்கே நாட்டு மக்கள் படும் துன்பம் ஏராளம். மீண்டும் ஏமாந்து விடாதீர்கள்.

    விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். எம்ஜிஆர், அம்மா இருவரும் மக்களுக்காக வாழ்ந்தனர், மக்கள் தான் வாரிசு. திட்டங்களை பார்த்துப் பார்த்து செயல்படுத்தினார்கள். அவர்கள் வழியில் அதிமுக அரசு செயல்பட்டது.

    ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.

    மகளிர் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்குச் சென்றுவர ஏதுவாக அம்மா இருசக்கர வாகன திட்டம் மூலமாக சுமார் 3 லட்சம் பேருக்கு 25,000 ரூபாய் மானியம் கொடுத்தோம். இந்த திட்டத்தையும் திமுக அரசு ரத்துசெய்துவிட்டது. உங்கள் ஆதரவினால் அதிமுக அரசு மீண்டும் அமையும்போது இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவுசெய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75,000 ரூபாய் மானியமாக கொடுக்கப்படும்.

    அதிமுக அரசு மீண்டும் அமைவதற்கு துணை நிற்க வேண்டும். திமுக அரசு மக்களுக்கு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வளமோடு செழிப்போடு அதிகாரத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் எண்ணம் அப்படிப்பட்ட எண்ணம் உடையவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் தேர்தல் 2026 தேர்தல்.

    தர்மபுரி தொகுதியில் அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டினோம், துணை மின் நிலையம் அமைத்தோம், புதிய தாலுகா அமைத்தோம், சிப்காட் 1789 ஏக்கர் ஃபேஸ் 1 திட்டம் கொண்டுவந்தோம். இதை அதிமுக கொண்டுவந்ததால் பணிகளை ஆமை வேகத்தில் செய்கின்றனர். புதிய நீதிமன்றக் கட்டிடம் அமைத்தோம். மாசுகட்டுப்பாடு அலுவலகம் கட்டப்பட்டது. இப்படி பல திட்டம் கொடுத்தோம்.

    சேஷம்பட்டி முதல் தர்மபுரி வரை வெளிவட்ட சாலை அமைக்க வேண்டும், தர்மபுரி சாலை விரிவாக்கம், புதிய ஊராட்சி தொடங்க வேண்டும், விவசாய கிணத்தில் நீர்மட்டம் உயர ஒகேனக்கல் உபரி நீரை கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் பல கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இவை எல்லாமே அதிமுக ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும். 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின் என தெரிவித்தார்.

    Next Story
    ×