என் மலர்
நீங்கள் தேடியது "immersion ceremony"
- டிராக்டர் ஏரியை அடைந்தபோது சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது.
- இதில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.
இந்தூர்:
விஜயதசமியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் துர்கா சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த வழிபாடுகளை முடித்து ஆங்காங்கே நீர்நிலைகளில் அவை கரைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கந்த்வா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை டிராக்டர் ஒன்றில் எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் பந்தனா பகுதியில் உள்ள ஏரியில் கரைப்பதற்காகச் சென்றனர்.
டிராக்டர் அந்த ஏரியை அடைந்தபோது திடீரென சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது. இதில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். உள்ளூரைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும் இந்தப் பணிகளில் களமிறக்கப்பட்டனர்.
அவர்கள் சுமார் 6 பக்தர்களை உயிருடன் மீட்டனர். ஆனால் 11 பேர் ஏரிக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்புக் குழுவினர் நீரில் இருந்து வெளியே எடுத்து வந்தனர்.
மேலும் யாரும் நீரில் மூழ்கி உள்ளனரா என தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சம்பவத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துர்கா சிலை கரைப்புக்காக சென்ற பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று தல விருட்ச மரக்கன்றை நட்டு வைத்தார்.
நாமக்கல்:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று தல விருட்ச மரக்கன்றை நட்டு வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இன்று(நேற்று) ஒரே நாளில் 12 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. சட்டப்பேரவை அறிவிப்பின்படி ஆஞ்சநேயர் கோவில் திருப்பணி நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. கடந்த 28 மாதங்களில் 8,006 கோவில்களுக்கு திருப்பணிகள் நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க.வினர் கோவில் திருப்பணிக்கு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
ஈரோடு மணடலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூ.69.09 கோடிமதிப்பீட்டில் 345 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 1 லட்சம் தல விருட்ச மரங்கள் நடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2,000 கிராம கோவில்களுக்கு ஒரு கால பூஜை செய்வதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022-2023-ம் ஆண்டில் 2,500 கோவில்கள், 2023-2024-ம் ஆண்டு 2,500 கோவில்கள் என 5,000 கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் முடிவுறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 5,436 கோடி ரூபாய் மதிப்புள்ள 5,480 ஏக்கர் இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மேலும் தொடரும்.
திருச்செங்கோடு அர்த்தநா ரீஸ்வரர் கோவில் ரோப்கார் திட்டம் ஆய்வில் உள்ளது. மலைசார்ந்த கோவில்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 28 கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற அடிப்படையில் அர்ச்சகர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல் 8 பெண்கள் ஓதுவார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் 36 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன. 5 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளனர். அவர்களுக்கும் நீதிமன்ற வழக்கு முடிந்தபின் அர்ச்சர்களாகும் சூழல் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர் அமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில், அறங்காவல் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் ராம.சீனிவாசன், மல்லிகா குழந்தைவேலு, செல்வசீராளன், ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.






