என் மலர்
இந்தியா

ம.பி.யில் சோகம்: துர்கா சிலைகளை எடுத்துச்சென்ற டிராக்டர் ஏரியில் கவிழ்ந்து 11 பேர் பலி
- டிராக்டர் ஏரியை அடைந்தபோது சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது.
- இதில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.
இந்தூர்:
விஜயதசமியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் துர்கா சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த வழிபாடுகளை முடித்து ஆங்காங்கே நீர்நிலைகளில் அவை கரைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கந்த்வா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை டிராக்டர் ஒன்றில் எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் பந்தனா பகுதியில் உள்ள ஏரியில் கரைப்பதற்காகச் சென்றனர்.
டிராக்டர் அந்த ஏரியை அடைந்தபோது திடீரென சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது. இதில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். உள்ளூரைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும் இந்தப் பணிகளில் களமிறக்கப்பட்டனர்.
அவர்கள் சுமார் 6 பக்தர்களை உயிருடன் மீட்டனர். ஆனால் 11 பேர் ஏரிக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்புக் குழுவினர் நீரில் இருந்து வெளியே எடுத்து வந்தனர்.
மேலும் யாரும் நீரில் மூழ்கி உள்ளனரா என தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சம்பவத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துர்கா சிலை கரைப்புக்காக சென்ற பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






