என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக வாழ்வுரிமை கட்சி"
- பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
- சபாநாயகரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து வேல்முருகன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டசபை கூட்டத்தொடரின் 4-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது, ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பவானி தொகுதி பிரச்சனையை பேச அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. உள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
அமைச்சர் துரைமுருகனின் பதிலை அடுத்து அடுத்த கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு சென்றார்.
சபாநாயகரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து வேல்முருகன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வான வேல்முருகன், ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பி சட்டசபையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- விபத்துகள் நடந்தால் உரிமையாளர்களை தமிழக அரசு கைது செய்வது வழக்கம் தான்.
- விஜய் வீட்டில், அலுவலகத்தில் வழக்கம் போல் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன.
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கைது செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விஜய் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற திருமாவளவனின் கருத்தை வரவேற்கிறேன்.
விஜயை பார்ப்பதற்காக வந்ததால் தான் 41 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். விபத்துகள் நடந்தால் உரிமையாளர்களை தமிழக அரசு கைது செய்வது வழக்கம் தான். விஜய் வீட்டில், அலுவலகத்தில் வழக்கம் போல் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. வெளிநாட்டில் இருந்து ராகுல் கேட்டு கொண்டதால் விஜய் மீது நடவடிக்கை இல்லையா?. ராகுல் குறித்து வந்த செய்தி தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.
- தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ரவிசங்கர் (35) ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.
தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- எந்த நடிகர்களாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன?
- அரசியலுக்கு வாங்க... மக்களோடு நில்லுங்கள்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேல்முருகன் பேசியதாவது:-
கலைஞர் ஆட்சியில் போராடி வாதாடி இன்றைக்கு 36 மெடிக்கல் காலேஜ் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனை கொண்டு வந்தவன் வேல்முருகன், கூத்தாடி என்றால் உங்களுக்கு குறைந்து விட்டது என்கிறீர்கள். கூத்து என்றால் எனது தமிழனின் மரபு வழி கலையாகும், அதில் என்ன உங்களுக்கு குறைச்சல்.
எந்த நடிகர்களாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? வேல்முருகன் ஆற்றிய பங்களிப்பு என்ன? ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். போராளிகளை பற்றி போராளிகளிடம் மைக் நீட்டி கேளுங்கள். அவர்களுக்கு போராளிகள் பற்றி தெரியாது. அவர்களின் உலகம் வேறு. எங்கள் அண்ணனை விமர்சித்து விட்டீர்கள் என்கிறார்கள். பள்ளி மாணவர்களை வைத்து பேச வைக்கிறார்கள் நாங்கள் தற்குறி என்கின்றனர். அவர்கள் தான் தற்குறி.
உங்கள் அண்ணன் மட்டுமல்ல இந்த நாட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் தவறு செய்தபோது அதை தவறு என்று கூறியவன் நான். ரஜினி ரசிகர்கள், விஜயகாந்த் ரசிகர்களை விட நீங்கள் என்ன பெரிய ஆள்களா? இவர்கள்தான் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்களாம். இவர்கள்தான் பரிசுகளை கொடுக்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் துணை நடிகர் பாலா என்பவர் கதாநாயகன் அல்ல. தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வீடுகள் கட்டி, ஆம்புலன்ஸ் வாங்க உதவி புரிந்து வருகிறார். அவர் சூட்டிங் நடத்துவதில்லை. ஷோ நடத்துவதில்லை.
ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை எத்தனையோ முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களுக்கு வழங்கி வருகிறார். அவர் எப்போதும் சூட்டிங் நடத்தவில்லை ஷோ நடத்தவில்லை. அரசியலுக்கு வாங்க... மக்களோடு நில்லுங்கள்.
நீங்கள் எல்லாம் 10-வது 12-வது படிக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறீர்கள். கடலூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் அப்துல்கலாம்களாக வரவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு பத்திரிகை இல்லாமல் ஒரு புகைப்படக்காரர் இல்லாமல் செல்பி எடுக்காமல் ஒரு கோடி ரூபாய் நிதியை அறிவித்து விஞ்ஞான கல்விக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உதவியவன் நான் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல.
- மக்களுக்காக களத்திற்கு வராதவர் விஜய்.
கடலூர்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழக உரிமைகள், தமிழ்த்தேசிய அரசியலை தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும்.
* த.வெ.க. தலைவர் விஜய் நிகழ்ச்சி குறித்து தான் சொல்லாததை திரித்து கூறுகிறார்கள். மாணவர்களுடன் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியை நான் கொச்சைப்படுத்தி பேசியதாக வதந்தி பரப்பப்படுகிறது.
* பெற்றோர் முன்னிலையில் ஒரு நடிகரை மாணவிகள் கட்டிப்பிடிப்பது தமிழ் கலாச்சாரம் அல்ல.
* கலையை கலையாக பார்க்காமல், நடிகரை தூக்கி வைத்து கொண்டாடுவது வருந்தத்தக்கது.
* விஜயின் அரசியல் வருகைக்கு ஒரு போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை வாழ்த்து கூறினேன்.
* சினிமாக்காரர்களிடம் பிள்ளைகள் அதிக உரிமை எடுக்க பெற்றோர் அனுமதிக்க கூடாது என்று கூறினேன்.
* தமிழராக விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை, ஆனால் வந்தவுடனேயே முதலமைச்சர் கனவுடன் வரக்கூடாது.
* தவெக தொண்டர்கள் என்னை மிரட்டுவதெல்லாம் வேண்டாம், அனைத்தையும் பார்த்துவிட்டு வந்தவன் நான்.
* காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல.
* காமராஜரோடு விஜயை ஒப்பிடுவதை ஏற்க முடியாது, மக்களுக்காக களத்திற்கு வராதவர் விஜய் என்றார்.
- கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று 2ம் கட்டமாக விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சியில் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக இன்றும் த.வெ.க. தலைவர் விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும்போது சில மாணவ- மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும், சிலர் ஹார்டின் போன்ற சைகை காட்டியும், சிலர் ரோஜா பூ கொடுத்தும், சிலர் கட்டி அணைத்தும் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இதன் நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சர்சையாக பேசியுள்ளார்.
இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் வேல்முருகன் பேசியதாவது:-
நடிகனை குற்றம் சொல்ல மாட்டேன். ஒரு வயசு பெண்ணை கூட்டிட்டு போறான்.. 2 கிராம் பரிசு கொடுத்ததும் நம் முட்டாள் பயளுங்க.. அறிவு வேணாமா தமிழனுக்கு..?
பெற்று, வளர்த்து ஆளாக்கி நாளை மாற்றான் மனைவியாக வாழ வேண்டிய ஒரு பெண்ணை அப்பா, அம்மா, ஊடகப் பத்திரிகையாளர்கள் என அத்தனைப் பேர் முன்பு ஒரு சினிமா கூத்தாடிப் பயனை கட்டிப்பிடிக்க எப்படி அனுமதிக்கிற..?
இது என்ன ஈனப்பிறவி..? தமிழனுடைய பிறவியா இது? விஜய் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அஜித் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. ரஜினி நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அதைவிட்டு அப்படியே விஜய் அண்ணா என்று.. பெற்றோர்கள் எப்படி இதையெல்லாம் அனுமதிக்கிறீங்க..?
இதுவா தமிழ் சமூகம்? இதுவா தமிழருடைய பாரம்பரியம்? இதுவா வீரக்குல பெண்கள் வாழ்ந்த மண் என்கிறோம் ?
எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க. எந்த கூத்தாடி பயளுகளுடைய பிறந்தநாள் என்றால் என்ன..? அவர்களின் படம் நூறு நாள் ஓடினால் என்ன? ஓடவிட்டால் என்ன ? அவனா உனக்கு சோறு போடப் போறான்..? அவனா உன் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட போறான்? அவனா பள்ளிக்கூடம் கட்ட போறான் ?
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தில் கன்னட படங்களை வெளியிட முடியாது.
- கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.
சென்னை:
நடிகருக்கும், மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்புகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் என்று கமல்ஹாசன் பேசியதற்கு வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், கமலின் தக் லைப் படத்தை கர்நாடகவில் வெளியிடாவிட்டால் தமிழகத்தில் கன்னட படங்களை வெளியிட முடியாது.
கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.
- நேற்று சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டி வெளிநடப்பு செய்து இருந்தார்.
- தான் பேசும்போதெல்லாம் சபாநாயகர் இடையூறு செய்வதாக குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நேற்று சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டி வெளிநடப்பு செய்து இருந்தார்.
இந்த நிலையில், நேற்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த வேல்முருகன் இன்று சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளார். தான் பேசும்போதெல்லாம் சபாநாயகர் இடையூறு செய்வதாக குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளார்.
சபாநாயகர் செயல்பாடு குறித்து நாளை முதலமைச்சரை சந்தித்து பேசவும் வேல்முருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இந்த கூட்டத்தொடரில், என்னை மட்டும் குறிவைத்து, பேசவிடாமல் சபாநாயகர் தடுப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியிருந்தார். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேல்முருகன் மீது கடிந்து கொண்டார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வேல்முருகன் விளக்கம் அளித்து இருந்தார்.
- பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து வேல்முருகன் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிகிறார்.
- மாவட்டச் செயலாளர் அப்துல் சபீக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னை:
தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆலோசனை கூட்டம் வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசுகிறார்.
கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கிளை கழகம் தோறும் கொடியேற்று விழா நடத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. விரிவாக விவாதிக்கிறார்.
பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் வேல்முருகன் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிகிறார். மாவட்டச் செயலாளர் அப்துல் சபீக் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். அண்ணாநகர், வில்லிவாக்கம், பெரம்பூர், கொளத்தூர் பகுதி நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் முன்னின்று செய்து வருகிறார்.
- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக 5 சுங்கச்சாவடியை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-
இந்தியா என்பது பன்முகம் கொண்ட நாடாகும். இந்த நாட்டை மதவாத நாடாக மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பா.ஜ.க. அரசின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதோடு, இறையாண்மை எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும். பாசிச நடவடிக்கை என்பது விஷ விதை மண்ணில் புதைப்பதாகவும், ஆகையால் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இதனை எதிர்க்க வேண்டும்.
ஆகையால் மத்திய அரசு உடனடியாக இக்குழுவை திரும்பப் பெற வேண்டும். ஒற்றை ஆட்சி முறை பேராபத்தும் பெரிய அபாயத்தையும் விதைக்கிறது. கடந்த பத்தாண்டு காலமாக அதிமுகவினர் மிகப்பெரிய ஊழல் செய்து உள்ளனர். அதனை தற்காத்துக் கொள்வதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதனை ஆதரித்து உள்ளனர். அவர்கள் இந்தியாவை பாதுகாத்திட வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். பா.ஜ.க. அரசு 7.5 லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை வீண் செய்துள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இதில் தமிழகத்தில் 5 சுங்கசாவடியை சோதனை செய்தபோது சுமார் 128 கோடி கார்ப்பரேட் நிறுவனம் கொள்ளை அடித்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.
ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக 5 சுங்கச்சாவடியை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒற்றுமையை கெடுக்கும் விதமாக சட்டம் உள்ளிட்ட எந்த நடவடிக்கை கொண்டு வந்தாலும், கொசு, காலரா ஒழித்தது போல் பாசிச தன்மையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருப்பதாக தெரிய வருகிறது.
இவ்வாறு கூறினார்.
பேட்டியின்போது மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
- தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டி.வி.கே. என வருகிறது.
சென்னை:
விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் கூறுகையில், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டிவிகே என வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் தொடங்கப்பட்டு, கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.
- பருவ மழை, பேரிடர் கால நிவாரண நிதிகளை மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு வழங்கியது இல்லை.
- ஜிஎஸ்டி வரி வசூலித்த தொகைகளை கூட வழங்கவில்லை.
தஞ்சாவூா்:
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை டெல்டா மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வரக்கூடாது.
ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறு தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மாபேட்டை பஸ் நிலையம் முன்பு தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன் உள்ளிட்ட பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் திருநாவுக்கரசு, திருமாவளவன், வேல்முருகன் , மணியரசன் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி அம்மாபேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். இதற்கு அப்போதைய அ.தி.மு.க அரசு எங்கள் மீது வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜரானேன். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கபட்டது. சம்மன் அனுப்பப்பட்டதால் நான் ஆஜர் ஆனேன்.
பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
மக்கள் பிரச்சனைக்காக போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுக அரசு திரும்ப பெற்றது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் பெய்த கனமழையில் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கள்ளச்சாராய மரணத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின்கம்பம் சீரமைக்கும் பணியில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. மனித உயிர் விலை மதிக்க முடியாதது. நிவாரணம் என்பது ஒரே மாதிரியாக வகுக்க வேண்டும். குறைந்தது ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்து ஒரே மாதிரியாக வழங்க வேண்டும். இதில் பாகுபாடுக்கூடாது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துரித நடவடிக்கை எடுக்க 15-க்கும் மேற்பட்ட அமைச்சசர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். எனவே நியமிக்கப்பட்ட அனைவரும் துரிதமாக பணி செய்து இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காக்க வேண்டும்.
பருவ மழை, பேரிடர் கால நிவாரண நிதிகளை மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு வழங்கியது இல்லை. ஜிஎஸ்டி வரி வசூலித்த தொகைகளை கூட வழங்கவில்லை. எனவே தமிழக அரசே உரிய நிதிகளை ஒதுக்கி வழங்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம், நீர்வளத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது. இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசால் தமிழ் ஈழ மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






