என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
    • தனது கடைசி போட்டியில் கன்தரை எதிர்கொண்ட ஜான் சீனா Tap out முறையில் தோல்வியடைந்தார்.

    WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.

    16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்தாண்டு அறிவித்தார்.

    இந்நிலையில், தனது கடைசி போட்டியில் கன்தரை எதிர்கொண்ட ஜான் சீனா Tap out முறையில் தோல்வியடைந்தார். இதன்மூலம் 90's கிட்ஸின் Hero ஜான் சீனா தோல்வியுடன் WWE மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

    மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.

    அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்து காயமடைந்தார்.
    • திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்து காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    தொடர் சிகிச்சைக்குப்பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அக்.10-ந்தேதி அவர் வீடு திரும்பினார்.

    இதையடுத்து, வயிற்றுப் பகுதியில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (100) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிசிச்சை அளித்து வருகின்றனர்.

    • உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது.
    • 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன.

    சென்னை:

    இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 பேர் இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 146 கோடியாக உயர்ந்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது ஆண்டுக்கு 1.5 சதவீதம் என்ற அடிப்படையில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இருக்கிறது.

    உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. நாட்டில் இறப்பு விகிதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனை விட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதே மக்கள்தொகை உயர்வுக்கான முக்கிய காரணமாக உள்ளது.

    ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இங்கு பிறப்பு விகிதம் ஆண்டுக்கு, ஆண்டு கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    பிறப்பு விகிதங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

    அதன்படி தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். அதாவது தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 591 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு, நேற்று வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக இருக்கிறது. அதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 138 குழந்தைகள்தான் பிறந்துள்ளனர்.

    இன்னும் டிசம்பர் மாதம் முடிய 18 நாட்கள் மட்டுமே இருப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறக்க வாய்ப்பு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும் 8 லட்சத்தை தாண்டுவது சற்று சிரமம்தான் என்று தெரிகிறது.

    இந்த எண்ணிக்கையை கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதாவது 6 ஆண்டுகளில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 1.5 சதவீதம் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டு களில் சராசரியாக ஆண்டுக்கு 3.1 சதவீதம் அளவுக்கு பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 788 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். 2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 875 ஆக குறைந்தது. தொடர்ந்து 2022-ம் ஆண்டில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 361 குழந்தைகளும், 2023-ம் ஆண்டில் 9 லட்சத்து 2 ஆயிரத்து 329 குழந்தைகளும் பிறந்து இருக்கிறார்கள்.

    ஆனால் மிக குறைவாக தொடர்ந்து 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன. கடந்த 2024-ம் ஆண்டுடன், இந்தாண்டு இதுவரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையை ஒப்பிட்டால் சுமார் 67 ஆயிரத்து 715 குழந்தைகள் குறைவாக பிறந்து இருக்கிறது. இது 8 சதவீதம் சரிவு ஆகும்.

    ரிசர்வ் வங்கியும், தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருவதை தனது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவலாக சுட்டிக்காட்டி உள்ளது.

    அந்த அறிக்கையில் 'கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தில் 1,000 மக்களுக்கு 17 குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த 2024-ம் ஆண்டில் இது 12 என்று கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.

    தமிழகத்தில் இந்த போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக குறைந்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சி தடைபடும். அதேபோல மக்கள்தொகையின் அடிப்படையில்தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதால், தமிழகத்திற்கான பங்கீட்டு தொகை குறையும். ஆனால் அதே நேரத்தில், சரியான கொள்கை திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டால், குறைந்த மக்கள்தொகையுடன் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கும் வாய்ப்பாக இது இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    அதேசமயம் முதியோர் விகிதம் அதிகரித்தால் சமூக பாதுகாப்பு செலவுகள் உயர்வு, முதியோர் நலத்திட்டங்களுக்கு கூடுதல் அழுத்தம் போன்ற சவால்களை தமிழக அரசு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.

    • பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

    தலைநகர் டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '450' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் எட்டியுள்ளதால் நான்காம் கட்ட 'கிராப்' கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

    அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்தே பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே, கட்டுமானப் பணிகளுக்கும், பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • ரோகித் சர்மா 2015 ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார்.
    • இந்த தம்பதிக்கு சமைரா என்ற பெண் குழந்தையும் ஆஹான் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தையும் 2024 இல் ஆஹான் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.

    நேற்று ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி தங்களது 10 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில், தங்களது திருமண நாளை இருவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை ரோகித் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

    • துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும் அவர் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

    பல்கலைக்கழகத்தில் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும் அவர் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
    • டிரம்ப் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்தது.

    அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் அதிபர் டிரம்ப் பல பெண்களுடன் நிற்கும் சர்ச்சை புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

    கைப்பற்றப்பட்ட 19 புகைப்படங்களில் டிரம்ப் மட்டுமில்லாமல் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், பில் கேட்ஸ் உள்ளிட்டோர் உள்ளனர்.

    யார் இந்த எப்ஸ்டீன்?

    ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

    2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.

    2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

    ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

    'எப்ஸ்டீன் கோப்புகள்'

    ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.

    இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டிரம்ப் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்தது. இந்த கோப்புகளில் டிரம்ப் பெயர் இடம்பெற்றுள்ளதாக உலக பணக்காரர் எலான் மஸ்க் ஏற்கனவே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து பின்னர் அந்த பதிவை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. 

    • கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
    • அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.

    கூட்ட நெரிசல்..!

    கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களை வடமாநிலங்களில் தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததா என்றால் அது கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

    அதன்பிறகு அரசியல் வரலாற்றில் மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் இதுவரை இல்லாத மிகவும் சோகமான, கருப்பு நாளாக 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி மாறியது.

    தமிழ்நாட்டில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி மக்கள் சந்திப்பு என்ற அரசியல் பரப்புரை கூட்டங்களை நடத்தி வந்தார். அதன்படி, 27-ந்தேதி சனிக்கிழமை மதியம் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய் பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்றுவதை காண காலை முதலே மக்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

     

    குறுகிய இடத்தில் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். மேலும் காலை முதல் தண்ணீர், உணவு ஏதுமின்றி வெயிலில் இரவு வரை காத்திருந்ததுதான் கொடுமை. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வராத விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்து மக்களிடையே உரையாற்றினார்.

    அவர் பேசும்போதே கூட்டத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் பேசிமுடித்துவிட்டு சென்றதும் அங்கு கூடியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியே செல்ல முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

    41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சம்பவ இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையே பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கூட்ட நெரிசல் குறித்து தெரிந்ததும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    இதனிடையே, கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலில் கரூர் நகர காவல்துறையினர் விசாரணை தொடங்கிய நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. எனினும் இவ்வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணையை கண்காணிக்க உத்தரவிட்டது.

     

    இதனை தொடர்ந்து, விசாரணையை தொடங்கி நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையின் போது இறந்தவர்கள் கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தார்களா, மூச்சுத் திணறி இறந்தார்களா, அல்லது அதிர்ச்சியில் இறந்தார்களா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

    கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

    கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு த.வெ.க.வினரே முழு காரணம் என்று குற்றம்சாட்டப்படும் நிலையில், த.வெ.க.வினரோ ஆளும் கட்சியின் சதிதான் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்று தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வருகிறது.

    எது, எப்படியோ... கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் எவராலும் மறக்கமுடியாத துயர நிகழ்வாக மாறிவிட்டது. இந்நிகழ்விற்கு பிறகு மக்கள் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.

    மேலும் அரசியல் சார்ந்த கூட்டமோ, இல்லை வேறு எந்த கூட்டமாக இருந்தாலும் சரி முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் செல்வதை தவிர்ப்பது நல்லது.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கடந்து அரசியல் கட்சிகள், தலைவர்கள், மக்கள் என அனைவரும் அவரவர் பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டனர். எனினும், இத்துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அதிலிருந்து மீண்டுவர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

    • பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
    • முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    நிகழ்ச்சியையொட்டி மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் கட்சி கொடிகளால் அலங்காரங்களும், மின்னொளி அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அளவில் மேடை அலங்காரம் செய்யப்பட்டு இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சி திடலுக்கு செல்லும் வழியில் பிரமாண்டமாக வரவேற்பு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மண்டலங்கள் வாரியாக நடைபெறும் இந்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மண்டலத்தில் இருந்து தொடங்கப்பட்டு அதுவும் திருவண்ணாமலையில் முதலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • எஸ்ஐஆர் களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.
    • பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிற 19-ந் தேதி வெளியிடப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4-ந் தேதி தொடங்கின. இந்தப் பணியின்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

    எஸ்ஐஆர் களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி இந்த பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகின்றன. வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று, அவை முழுவதையும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.

    இந்த பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிற 19-ந் தேதி வெளியிடப்படுகிறது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-28 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : தசமி இரவு 10.06 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : அஸ்தம் நண்பகல் 12.06 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சிபுரம், சமயபுரம், புன்னைநல்லூர், சோழவந்தான் மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-அமைதி

    கடகம்-பண்பு

    சிம்மம்-பணிவு

    கன்னி-இன்பம்

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- நற்செயல்

    மகரம்-பக்தி

    கும்பம்-மேன்மை

    மீனம்-பயணம்

    ×