என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக இத்தகைய பிளவுவாத அரசியலைச் செய்து வருகின்றனர்.
- பாரதிய ஜனதாவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டம்.
திருப்பரங்குன்றத்தை மையபடுத்தி, மதவெறித் திட்டத்தை பாஜக, சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மதச்சார்பற்ற கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டுகளில் ஒன்று தமிழ்நாடாகும். தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலங்களான பழனியாண்டவர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட இந்துமத திருத்தலங்கள், அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் மத வேறுபாடு இன்றி பொதுமக்கள் வழிபடுவதே இதற்கு சான்று.
இத்தகைய தமிழ்நாட்டில் மத வேறுபாடுகளை விதைத்து மக்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சில அமைப்புகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை பாஜகவும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் திட்டமிட்டு செய்து வருவது வழக்கமாகி இருக்கிறது. பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக இத்தகைய பிளவுவாத அரசியலைச் செய்து வருகின்றனர். அவர்களின் அடுத்த குறி தமிழ்நாடாக இருக்கிறது.
தமிழ்நாட்டிலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறு சிறு வலது சாரி அமைப்புகள் பாஜகவின் ஆதரவில் முளைவிட்டு வளரத் தொடங்கியிருந்தன. கடந்த மூன்றாண்டுகளாக அடங்கியிருந்தவர்கள் தேர்தலை கவனத்தில் கொண்டு தங்களின் பிளவுவாத அரசியலை தொடங்கியிருக்கின்றனர். பாரதிய ஜனதாவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டமிட்டு சதிகளை அரங்கேற்றி வருகின்றன.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசை நடத்துகிற வாய்ப்பு கிடைத்தும் கூட பாஜக தமிழ்நாட்டின் நலன்களுக்கான நடவடிக்கை எதையும் சொல்லிக் கொள்ளும்படியாக செய்திடவில்லை என்பதை தமிழ்நாடு அறியும். 2025 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கூட தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டிற்கோ, கோவை - மதுரை புதிய மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்போ, தமிழகத்திற்கு உரிய நிதி பங்கீடோ, பேரிடர் கால பாதிப்பு நிதியோ அல்லது மாநிலத்தின் தொழில், வர்த்தக, வேளாண் வளர்ச்சிக்கோ ஒரு சிறு துரும்பையும் கூட கிள்ளிப் போடவில்லை இந்த பா.ஜ.க.
சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் டெல்டா மாவட்டங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெள்ளப் பெருக்கினாலும், பெரும் புயல்களாலும் தாக்கப்பட்டு, மக்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொண்ட போதும் தமிழ்நாடு அரசு கோரிய நிதியை ஒதுக்காமல் தமிழ்நாட்டின் மீது வஞ்சனையோடு செயல்படுகிறது பா.ஜ.க. எனவே, தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து இவர்களைப் புறக்கணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தற்போது தனது அடுத்தகட்ட மதவெறித் திட்டத்தை பாஜகவும், அதன் சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலைஅடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதர் கோவிலும், கீழ்புறம் உச்சிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன.
2000 ஆண்டுகளுக்கு முன்பாக சமணம் இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்க்கா அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக மக்கள் எவ்வித பிரச்சனையுமின்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
நேர்மையும், அறவுணர்வும் கொண்ட நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பூசைகளும், சிக்கந்தர் தர்காவில் அவ்வப்போது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்தி அன்னதானம் (கந்தூரி) செய்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் தர்க்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.
மேற்கண்ட வழிபாட்டு முறைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் இருக்கிற சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொய் செய்திகளைப் பரப்பி பிப்ரவரி 4ம் தேதி திருப்பரங்குன்றத்தில் கூடுமாறு அழைப்பு விடுத்தது. சமூக வலைதளங்களில் மதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது.
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து பதற்றத்தை உருவாக்க முனைந்துள்ள மதவெறி சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகமும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டன.
அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் இவ்வமைப்புகளின் பொய்யையும், புரட்டையும் நம்பவில்லை; முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். எனினும், அங்கு கூடிய மதவெறி அமைப்பினர் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் வெறியூட்டக்கூடிய விதத்திலும் பேசி தங்களது பிளவுவாதத் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டின் பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்திப்பிடித்த திருப்பரங்குன்றம் உள்ளிட்டு மதுரை மக்களுக்கும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிகப்பழமையான நகரமான மதுரை எப்போதும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மதுரை மக்கள் அனைத்து மத நம்பிக்கைகளை மதித்தும், அனைத்து மத விழாக்களிலும் பங்கேற்று வருகின்றனர்.
மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையையும், அனைத்து பகுதி மக்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்க திருப்பரங்குன்றத்தின் அனைத்துப் பகுதி மக்களும் இப்போதுபோல் எப்போதும் உறுதிகாட்ட வேண்டும் எனவும், தமிழ்நாடு இத்தகைய மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணித்திட வேண்டும் எனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டு அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- கடைசி நேரத்தில் மணப்பெண்ணின் தாய் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார்.
- அவரால் மனைவியின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என்று கேட்டார்.
சிபில் [CIBIL] ஸ்கோர் என்பது நபரின் கடன் பின்னணியைக் குறிக்கும் எண் முறை ஆகும். அவர் கடன் பெறுவதற்குத் தகுதியானவரா என்பதை அவரின் சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் முடிவு செய்யும்.
இந்நிலையில் சிபில் ஸ்கோர் காரணமாக மகாராஷ்டிராவில் திருமணம் ஒன்று கடைசி நேரத்தில் நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிராவின் முர்திசாபூரை சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மணப்பெண்ணின் தாய் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார். இதன்மூலம் மணமகன் பல கடன் வாங்கி உள்ளதும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதும் தெரியவந்தது.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள ஒருவருக்கு ஏன் தங்கள் குடும்ப பெண்ணை தர வேண்டும் என்றும் அவரால் மனைவியின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என்றும் உறவினர் கேள்வி எழுப்பினார்.
இதனை பெண் வீட்டார் அனைவரும் ஏற்றுக்கொண்டு தங்கள் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக திருமணத்தை நிறுத்தினர்.
ஜாதக பொருத்தம், மன பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கும் காலம் மாறி சிபில் [CIBIL] ஸ்கோரை பார்த்து பெண் தரும் காலம் வந்துவிட்டதாக நெட்டிசன்கள் நொந்துகொள்கின்றனர்.
- ஒவைசியின் AIMIM கட்சி டெல்லியில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள 2 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
- AIMIM போட்டியிட்ட ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.
கருத்துக்கணிப்புகளின்படி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியை ஆட்சியை இழந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை மீண்டும் பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
கடந்த 2 தேர்தல்களிலும் (2015, 2020) காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒவைசியின் AIMIM கட்சி டெல்லியில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள 2 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
அந்த 2 தொகுதிகளிலும் காங்கிரசை பின்னுக்கு தள்ளி AIMIM கட்சி வேட்பாளர்கள் 3-ம் இடத்தை பிடித்துள்ளனர்.
ஓக்லா மற்றும் முஸ்தபாபாத் என்ற 2 தொகுதிகளில் AIMIM போட்டியிட்டது. ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது.
ஓக்லா தொகுதியில் பாஜக வேட்பாளரை விட 23639 வாக்குகள் அதிகம் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் AIMIM வேட்பாளர் 39558 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் காங்கிரஸ் வேட்பாளர் 12739 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பிடித்தார்.
முஸ்தபாபாத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரை விட 17578 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் AIMIM வேட்பாளர் 33474 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் காங்கிரஸ் வேட்பாளர் 11763 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பிடித்தார்.
- மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சசிகுமார் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.
- அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ருசிகரமாக பதில் அளித்தார்.
மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சசிகுமார் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ருசிகரமாக பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கல்லூரிக்கு பக்கத்து ஊரு தான் எனது வீடு. அடிக்கடி இந்த வழியாகத்தான் செல்வேன். இவ்வளவு பெரிய கல்லூரி இருக்கின்றது இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது. மேடையில் பேச வேண்டும் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை. அதுவும் கல்லூரிக்கு செல்லும் போது மாணவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும், அதனால் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்ப்பேன்.
என்னை இங்கு அழைத்துக்கொண்டு வரவில்லை இழுத்து வந்துள்ளார்கள். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே, அதற்காகத் தான் இங்கு வந்துள்ளேன். எனக்காக இதை செய்யுங்கள் என்று நண்பன் கேட்டதால் இங்கு வந்துள்ளேன், நண்பன் கேட்டால் உயிரையும் கொடுப்போம். நட்பை விட்டு விடாதீர்கள். நான் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன். குத்துனது நண்பனா இருந்தாலும் செத்தா கூட சொல்லக் கூடாது.
நான் நடித்த அயோத்தி திரைப்படம் மனிதத்தை பேசும். மொழி, மதம், ஜாதிகளை கடந்து நமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் உதவக் கூடாது, தெரியாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருத்துள்ள படம். மனிதம் நமக்குள்ளே என்றும் இருக்க வேண்டும்.
அடுத்த படம் மதுரையில் தான் இயக்க உள்ளேன். காதலா நட்பா என்று பார்த்தால் எப்பவுமே நட்பு தான் காதலாக இருக்கும், காதல் நட்பாக இருக்காது. மாணவர்கள் அனைவரும் நன்றாக படியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சசிக்குமார் தற்பொழுது டூரிஸ்ட் பேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் ராஜுமுருகன் இயக்கத்தில் ௨ மை லார்ட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது.
- சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் நான்காவது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
செக்டார் 19 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல்ப்வாசி கூடாரம் அருகே இன்று கேஸ் சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது. உடனே அங்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, செக்டார் 18 இல் உள்ள இஸ்கான் முகாமில் தீ விபத்து ஏற்பட்டு, அருகிலுள்ள 12 முகாம்களுக்கு பரவியது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.
ஜனவரி 19 ஆம் தேதி, செக்டார் 19 இல் சிலிண்டர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீ விபத்தில் சுமார் 12 முகாம்கள் எரிந்து நாசமாகின.
முன்னதாக ஜனவரி 25 ஆம் தேதி, செக்டார் 2 இல் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. கார் ஒன்றில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்திற்கும் பரவியது.
முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது.
டெல்லி தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்லி மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல இந்தியா கூட்டணியின் தோல்வி ஆகும். இதிலிருந்து இந்தியா கூட்டணி பாடம் கற்க வேண்டும். டெல்லி மாநிலத் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி உடனடியாக இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
டெல்லியில் ஆட்சி நடத்தி வந்த ஆம் ஆத்மியை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்காக பாஜக தனது அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. முதலமைச்சராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.
அதிகாரிகள் நியமனம், அன்றாட நிர்வாகம் ஆகியவற்றைச் செய்வதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்தத் தீர்ப்பை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி உடனடியாக சட்டத்திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது.
இந்த அடாவடிகளுக்கு இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தனக்கு போட்டியாக ஆம் ஆத்மியைப் பார்த்ததும், காங்கிரஸ் கட்சி பலவீனமாவது தனக்கு சாதகம் என ஆம் ஆத்மி கருதியதுமே இதற்குக் காரணம்.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்ற போதும் அது பொருந்தாக் கூட்டணியாகவே இருந்தது. டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை விட சுமார் இரண்டு சதவீத வாக்குகளையே பாஜக கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அங்கு தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் ஏழு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதி உட்பட 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகளே காரணமாகியுள்ளன.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆதரவு தெரிவித்த அந்தக் கட்சிகளுக்கு டெல்லியில் வாக்கு வங்கி எதுவும் இல்லை. எனவே அது காங்கிரஸ் அல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் எப்படி காரணமாக அமைந்துவிட்டதோ, அப்படி இந்தியா கூட்டணியில் இருந்த பிற கட்சிகளின் இந்த அணுகுமுறையும் ஒருவிதத்தில் காரணமாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு இந்தியா கூட்டணி கூட்டத்தைக் கூட்டுவதில் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுத்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு இந்தியா கூட்டணியே வழி வகுத்தது என்பதே கசப்பான உண்மையாகும்.
மக்கள் நலனை விடத் தத்தமது கட்சிகளின் வெற்றியையே இந்தியா கூட்டணி கட்சிகள் முதன்மையாகக் கருதுகின்றன என்பதையே இது காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். மக்களும்கூட நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே டெல்லி தேர்தல் முடிவுகளை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர் வெற்றியை சாதித்திருக்கும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்குகிற அதிமுக போட்டியாடாமல் பின்வாங்கியது. பாஜகவும் அதே நிலைபாட்டை எடுத்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்க விரும்பாமல், இவ்விரு கட்சிகளும் இணைந்து நாதகவுக்கு ஆதரவை நல்குவது என்கிற மறைமுக உடன்பாடு செய்துகொண்டனரோ என்கிற அய்யத்தை எழுப்புகிறது.
அதாவது, நாதக மற்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மறைமுகமான கூட்டணி ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்கு வெளிப்படையான வெறுப்பு அரசியலை நாதக முன்னெடுத்தது. குறிப்பாக, தந்தை பெரியாரை மிகவும் அநாகரிகமான முறையிலே பொது வெளியில் கொச்சைப்படுத்தியது. ஆனாலும் அதனை அதிமுக கண்டும் காணாமல் கடந்து சென்ற போக்கு அதிர்ச்சியளித்தது. அதேவேளையில், பாஜக வரிந்து கட்டிக்கொண்டு நாதகவின் வெறுப்பு அரசியலை வரவேற்றது. இவ்விரு கட்சிகளின் இந்தப் போக்கு அவர்களுக்கிடையிலான மறைமுக உடனபாட்டினை உறுதிப்படுத்துவதாகவே விளங்கியது.
தந்தை பெரியாருக்கு எதிரான நாதக'வின் இந்த அணுகுமுறை பாஜகவின் ஃபாசிச அணுகுமுறையின் இன்னொரு வடிவமே என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.
பாஜக மற்றும் சங் பரிவார்களைப் பின்பற்றியே தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் நாதக இறங்கியது. அதன்மூலம் பாஜகவின் வாக்குகளை ஈர்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அத்துடன், அதிமுகவின் திமுக எதிர்ப்பு வாக்குகளையும் இயல்பாக பெற்றுவிட முடியுமென நாதக கணக்குப் போட்டது.
ஆனால், வழக்கம்போல அந்தக் கட்சிக்கு வைப்புத் தொகையைக் கூட கிடைக்க விடாமல் செய்துள்ளனர் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள்.
இதன்மூலம், பாஜக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளின் சூது அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, தந்தைபெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்த சமூகநீதிக்கான மண்ணே தமிழ்நாடு என்பதை உணர்த்தி, நாதகவுக்கு மறைமுகமாகத் துணைபோன பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உரிய பாடத்தைப் புகட்டியுள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெண்கள் முன்னேறுவதற்கும், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி மிகவும் அவசியம் ஆகும்.
- மாணவிகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைவாக பெற்றுத் தர வேண்டும்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியர் இளைய கண்ணு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அரசு பள்ளிகள் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர், அதே பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவிகள் அதே பள்ளியின் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும் பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை உருவாக்கியது. அதன்பின் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பேராசிரியரே பாலியல் தொல்லை கொடுத்ததும் அதிர்வலைகளை உருவாக்கியது.
பெண்கள் முன்னேறுவதற்கும், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் பெற்றோர் தங்களின் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பெண் தெய்வங்களுக்கு கல்வியையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டிய அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மையங்களாக மாறினால், இனிவரும் காலங்களில் பள்ளிகளுக்கு பெண் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோரே அஞ்சும் நிலை உருவாகி விடும்.
இத்தகைய கொடுமைகள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றனவா? என்ற அதிர்ச்சியும், இந்தக் கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும்? என்ற ஏக்கமும், தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை எப்போது ஏற்படும்? என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வினாக்கள் அனைத்துக்கும் தமிழக அரசு தான் விடையளிக்க வேண்டும்.
மாணவிகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை, விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதன் வாயிலாகவும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதன் வாயிலாகவும் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பல எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
- ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த வாரம் பாஜகவில் இணைந்தனர்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.
கருத்துக்கணிப்புகளின்படி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியை ஆட்சியை இழந்துள்ளது,
குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால் , மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கிட்டத்தட்ட 3-ல் 2 பங்கு எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் பல ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த வாரம் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், இந்த 8 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. 8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்த நிலையில் அந்த 8 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி இம்முறை 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதில்,
* கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராக ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வணிக வரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* சுகாதாரத்துறை, கூட்டுத்துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* TANGEDCO தலைவர் நந்தக்குமாரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்.
- ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?
மகா கும்பமேளாவின் போது பயண இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகளவிலான பக்தர்களின் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பிரயாக்ராஜ்-க்கு செல்லும் சாலைகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இது குறித்த எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அகிலேஷ் யாதவ், "மகா கும்பமேளாவின் போது, உ.பி. மாநிலத்தில் வாகனங்களுக்கு கட்டணமில்லாச் சலுகை வழங்க வேண்டும். இது பயண தடைகளையும் போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்."
"திரைப்படங்களுக்கு பொழுதுபோக்கு வரி இலவசமாக்க முடியும் என்ற போது, மகா கும்பமேளா போன்ற பிரமாண்டமான விழாவில் வாகனங்களுக்கு ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?" என்று குறிப்பிட்டுள்ளார்.
உத்த பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம்ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கும்பமேளாவில் கலந்து கொள்ள மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
- காரில் ஒரு தம்பதியும், மற்றும் சிலரும் இருந்தனர்.
- என்ன நடந்தது என்று ஓட்டுநருக்குத் தெரியவில்லை.
உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் ஒருவர் குடிபோதையில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திறந்திருந்த பீம்பூர் ரயில்வே கேட்டை கடந்து கார் ரெயில் தண்டவாளத்திற்குள் நுழைந்தது.
ஓட்டுநர் குடிபோதையில் காரை சாலையில் கொண்டு செல்வதற்கு பதிலாக ரெயில் தண்டவாளத்தில் வேகமாக செலுத்தினார். அதிவேகமாக சென்றதால், தண்டவாளத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் நகர்ந்து, பின்னர் கற்களில் தடுக்கி கார் நின்றது.
ரெயில் தண்டவாளத்தில் கார் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு ரெயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காரை நோக்கி விரைந்து சென்றனர். காரில் ஒரு தம்பதியும், மற்றும் சிலரும் இருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்று அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்ததாக தெரிகிறது.
என்ன நடந்தது என்று ஓட்டுநருக்குத் தெரியவில்லை. அவர் தனது காரை ரெயில் தண்டவாளத்தில் கொண்டு சென்றதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அவர் உடனடியாக காரில் இருந்து இறங்கி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். கேட் கீப்பர், கட்டுப்பாட்டு அறைக்கு செய்தியை அனுப்பினார், அதன் பிறகு அதே ரெயில் பாதையை நெருங்கி டெல்லியில் இருந்து வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.
ரெயில் சுமார் 35 நிமிடங்கள் ரயில் தண்டவாளத்திலேயே நின்றிருந்தது. தண்டவாளத்தில் கார் சிக்கியிருப்பது குறித்து நிலைய கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மீட்புப் பணியை மேற்கொண்டு, நகராட்சி ஹைட்ரான்ட்டின் உதவியுடன் காரை தண்டவாளத்திலிருந்து அகற்றினார். சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில், தண்டவாளத்தில் இருந்து நகர்த்தப்பட்ட பின்னரே செல்ல முடிந்தது. தப்பி ஓடிய கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனர்.
- தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை.
மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனர். தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனர்.
இப்போது அதை மற்ற மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளனர். நமது மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்காக அவர்களைத் தண்டிக்கும் வகையில் இந்த செயல் உள்ளது.
இந்திய வரலாற்றில் எந்த அரசாங்கமும் ஒரு மாநிலத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான அணுகலை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்றதாக இருந்ததில்லை. தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகம் என்பதை பா.ஜ.க. அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






