என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை.
    • ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தால் விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

    இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்

    இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி . அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, முகமது ஷமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே ஷமி விரதம் இருக்காமல் இருக்க இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை" என்று தெரிவித்தார்.

    • நவ்ரு உலகின் மூன்றாவது சிறிய நாடாகும்.
    • நவ்ரு, மொத்தமாக 20 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது.

    தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான நவ்ரு, வெளிநாட்டினருக்கு 1,05,000 டாலர் இந்திய மதிப்பில் ரூ.91 லட்சத்திற்கும் மேல்) செலுத்தி நாட்டின் குடியுரிமையை வழங்கும் "தங்க பாஸ்போர்ட்" திட்டத்தை தொடங்கியுள்ளது.

    உலகின் மூன்றாவது சிறிய நாடான நவ்ரு, மொத்தமாக 20 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. பசுபிக் பெருங்கடலில் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நவ்ரு நாட்டின் கடற்கரை பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆதலால் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி திரட்டுவதற்காக நவ்ரு நாடு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.

    திரட்டப்படும் நிதியின் மூலம் நவ்ரு நாட்டின் 90% மக்களை மேடான இடத்திற்கு மாற்ற அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    நவ்ரு நாட்டின் குடியுரிமை இருந்தால், இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து.
    • லண்டன் அப்பல்லோ அரங்கில் நிகழ்த்த உள்ளமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார்.

    இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா இன்று லண்டன் புறப்பட்டார்.

    இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய திரையுலகின் இசைத்துறையில் மூன்று தலைமுறையாக கோலோச்சி வருகிற இசைஞானி இளையராஜா அவர்கள், ஒரு இந்திய இசையமைப்பாளரால் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட முதல் முழுமையான மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான "வேலியன்ட்" இசையை லண்டன் அப்பல்லோ அரங்கில் நிகழ்த்த உள்ளமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் கிராமப்புரங்களில் இருந்து தொடங்கிய தனது இசைப்பயணத்தை தற்போது உலக அரங்கில் எடுத்து சென்று தனக்கென தனி முத்திரை பதித்து, சாதனைகள் பல படைத்து இன்னும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும், இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜூலை மாதத்தில் இருந்து இரு நகரங்களுக்கும் இயக்க திட்டம்.
    • இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கவில்லை.

    இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கும், நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகருக்கும் நீண்ட தூர நேரடி விமான சேவையை தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாறுவதற்கும், இந்தியாவை உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கும் இது குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

    நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து போயிங் 787 விமானத்தை குத்தகைக்கு எடுத்து நீண்ட தூர விமான போக்குவரத்தை தொடங்க இருக்கும் நிலையில், ஐரோப்பிய சந்தையில் நுழைகிறது.

    ஏர்பஸ் A321 XLR விமானங்கள் இந்த வருடமும், A350-900 விமானம் 2027-ஆம் ஆண்டும் இண்டிகோவுக்கு டெலிவரி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மார்ச் 1-ந்தேதி போயிங் 787-9 என விமானத்தை நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளது. இந்த வருடம் இறுதிக்குள் மேலும் மூன்று விமானங்களை குத்தகைக்கு வாங்க இருக்கிறது.

    ஆனால் எந்த நகரங்களில் இருந்து மான்செஸ்டர், ஆம்ஸ்டர்டாம் நகரங்களுக்கு இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவிக்கவில்லை.

    இங்கிலாந்து எங்களுக்கு முக்கியமான சந்தை. இந்தியாவில் இருந்து மான்செஸ்டருக்கு நேரடி விமான சேவை அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு மு.க.ஸ்டாலின் ?
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு.

    தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது தொடர்பாக அண்ணாமலை தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு மு.க.ஸ்டாலின் ?

    ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

    பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள்.

    வெட்கக்கேடு!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு பாஜக அரசு இடித்து வருகிறது.
    • புல்டோசரால் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

    உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி பாஜக அரசுகள் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்தன.

    இந்நிலையில், பிரயாக்ராஜில் ஒரு வழக்கறிஞர், ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று பேரின் வீடுகளை இடித்ததற்காக உத்தரபிரதேச அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடுகளை இடிக்கும் பாஜக அரசுகளுக்கு எதிரான வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மனுதாரர்களான வழக்கறிஞர் சுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது மற்றும் 3 பேர் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது "பாஜக அரசால் இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் அரசுக்கு உத்தரவிடுவோம், இதைச் செய்வதற்கான ஒரே வழி அதுதான்" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, இந்த வழக்கை மார்ச் 21 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • 2025 பனிகளே V4 பைக்கின் ஆரம்ப விலை ரூ.29.99 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • 2025 பனிகளே V4 பைக்கில் 1,103 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது 2025 பனிகளே V4 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.29.99 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2025 பனிகளே V4 பைக்கின் 1,103 சிசி என்ஜின் 216hp பவருடன் 121Nm டார்க் சக்தியையும் வெளிப்படுத்தும். 

    • நடிகர் தனுஷ் இயக்கியுள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.
    • திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    நடிகர் தனுஷ் இயக்கி உள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இப்படம் உலகம் முழுவதும் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மிக வைரலான கோல்டன் ஸ்பாரோ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் சிறப்பு நடனமாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் விருந்தளிக்க உள்ளார்.
    • 15 பள்ளிவாசல் இமாம்களுக்கு கட்சி சார்பில் அழைப்பு விடுப்பு.

    சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பு திறந்து வைக்கிறார். மேலும், நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் அவர் விருந்தளிக்க உள்ளார்.

    இந்நிலையில், நளை நடைபெறவுள்ள நோன்பு நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, டேபிள், நாற்காலி எதுவும் இன்றி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் தரையில் அமர்ந்து நோன்பு திறந்து தொழுகையில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள இஃப்தார் நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15 பள்ளிவாசல் இமாம்களுக்கு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், விஜய் வருகை ஒட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    • ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    கிங்ஸ்டன்

    ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் திவ்யா பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இப்படமே முதல் கடல் ஹாரர் திரைப்படமாக கிங்ஸ்டன் திரைப்படம் உருவாகியுள்ளது.

    ஜென்டில்வுமன்

    கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன். இந்த திரைப்படம் சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது. திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

    மர்மர்

    ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் Found footage ஹாரர் திரைப்படமாகும். Found footage ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா ஃபூட்டஜ் போலயே காட்சி படுத்திருப்பர். இதன் மூலம் உண்மையாகவவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது பார்வையாளர்களுக்கு கடத்தும். திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

    லெக்பீஸ்

    லெக்பீஸ் திரைப்படம் 5 ஆண்களை சுற்றி நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. இப்படத்தை ஸ்ரீனாத் இயக்கியுள்ளார். படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி மற்றும் ரமேஷ் திலக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் சென்னையில் 30 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை மணிகண்டனின் ஹீரோ சினிமாஸ் தயாரித்துள்ளது

     

    .

    எமகாதகி

    தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் தற்பொழுது எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். இப்படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.ரூபாவுடன் யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத். ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    நிறம் மாறும் உலகில்

    இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

     

    படவா

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விமல் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் படவா. இப்படத்தை கே.வி நந்தா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருந்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக திரைப்படம் வெளியாகவில்லை . இத்திரைப்படம் 6 ஆண்டுகளுக்கு முன் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மனிதம் என்ற திரைப்படமும் நாளை வெளியாக இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
    • தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு.

    புதிய வருமான வரிச் சட்டம் 2025-க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் வரி செலுத்துவோரின் வர்த்தக கணக்குகள், ஆன்லைன் வங்கி கணக்குகள், இணைய முதலீட்டு கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் வருமான வரி அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

    வங்கி, முதலீட்டு கணக்குகள், கம்ப்யூட்டர்களில் உள்ள விவரங்கள் அனைத்தையும் பாஸ்வேர்டு எதுவும் தேவைப்படாமல் உடைத்து உள்ளே சென்று சோதனையிடும் அதிகாரம் புதிய வருமான வரிச் சட்டம் பிரிவு 247-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

    மக்களின் சமூக வலைதள கணக்குகள், இமெயில்களில் அவர்களின் பல அந்தரங்கமான விஷயங்கள், வருமான வரி அதிகாரிகளுக்கு தேவையில்லாத பல தகவல்கள் இருக்கும்.

    மேலும், சிலர் தொழில் ரகசியம், தொழில் யுக்திகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்கள், இமெயில்கள் வைத்திருப்பார்கள். அவை அனைத்திலும், வருமானவரி அதிகாரிகள், அவர்களது அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்து தகவல்களை சேகரிக்கும் வாய்ப்புள்ளது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 19(1) (ஏ)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்குள் தலையிடும் அதிகாரமாகவும் இது பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே, தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை பழிவாங்குவதற்கு ஆளும் ஒன்றிய அரசு இதுபோன்று அதிகாரத்தை அளித்துள்ளதோ என சந்தேகமாகவுள்ளது.

    தேவைக்கு அதிகமான அதிகாரமாகவே கருதப்படுவதால் இந்த மாற்றங்களை ஒன்றிய அரசு விலக்கிக் கொண்டு, புதிய வருமான வரிச் சட்டம் 2025 சட்டத்தை அமல்படுத்தவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பச்சை நிறத்தில் இருந்த பள்ளி சீருடைகள் ஏற்கனவே கலர் மாற்றப்பட்டுள்ளது.
    • தற்போது பள்ளி கட்டிடங்களின் நிறங்களை மாற்ற பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

    ஒடிசாவில் இரண்டு தசாப்தங்களாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வந்தது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 2000 முதல் 2024 வரை முதல்வராக இருந்தார். பிஜு ஜனதா தளம் கட்சியின் கொடி பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில் காட்சியளித்தன.

    ஒடிசா மாநிலத்தில் அரசின் அதிகாரப்பூர்வ கட்டிங்கள் உள்பட அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில்தான் காட்சியளித்தன.

    கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    அதில் இருந்து பச்சை நிறம் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. முதலில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் சீருடை நிறம் பச்சையில் இருந்து லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறங்களுக்கு மாறியது.

    இந்த நிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் அடர்ந்த ஆரஞ்ச் நிறம் (orange-tan) பார்டர் உடன் லைட் ஆரஞ்ச் நிறமாக மாற்ற வேண்டும் என ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணையம் (OSEPA) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    இதனால் பச்சை நிறமாக காட்சியளித்து வந்த அரசு பள்ளிக்கூடங்கள் இனிமேல் காவி நிறமாக காட்சியளிக்க இருக்கிறது.

    பாஜக அரசின் இந்த முடிவு, கல்வியை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.

    ×