என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
    • ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா?

    அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு எடுத்த முடிவு குறித்த விவாதம் அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

    பெங்களூரில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா விழாவில் இன்று கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் ஹோசபாலே பேசினார்.

    அப்போது, "பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.

    முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவால் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை குறித்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஹோசபாலே, ஔரங்கசீப் போன்றோர் சின்னமாக மாற்றப்பட்டனர். ஆனால் சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவரது சகோதரர் தாரா ஷிகோ போன்றோர் மறக்கப்பட்டனர். இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிராகச் சென்றவர்கள் சின்னங்களாக மாற்றப்பட்டனர்.

    ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய வர படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

    • "இதயம் முரளி" படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
    • "இதயம் முரளி" படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும்,"இதயம் முரளி" படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

    முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் "இதயம் முரளி" படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. "இதயம் முரளி" படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான இதயா பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது.பாடல் மிகவும் மெலடியாக அமைந்துள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் தமன் மற்றும் விஷால் மிஷ்ரா இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் பாடல் வெளியாகி 1 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.

    தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
    • ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.

    முதல் ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. 2வது ஓவரில் 2வது ஓவரில் 14 ரன்னும் கிடைத்தது.

    3வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட் 21 ரன்கள் கிடைத்தது. 4வது ஓவரில் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. இதனால் பவர்பிளே முடிவில் ஐதராபாத் 94 ரன்களைக் குவித்தது.

    ஐதராபாத் அணி 8 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 21 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி அடித்து அரை சதம் கடந்தார்.

    • சாலையோர மின்கம்பம் அருகே குப்பைகளை சேகரித்துகொண்டிருந்தார்.
    • வெடிப்பின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவர் பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குசாய்குடாவில் நேற்று (சனிக்கிழமை) மாலை மர்ம பொருள் வெடித்ததில் 37 வயது துப்புரவு பணியாளர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

    துப்புரவு பணியாளர் எஸ். நாகராஜு, நேற்று மாலை அப்பகுதியில் சாலையோர மின்கம்பம் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் குப்பைகளை சேகரித்துகொண்டிருந்தபோது காலாவதியான பெயிண்ட் டப்பா வெடித்ததாக கூறப்படுகிறது. அடையாளம் கண்டறியப்படாத ரசாயனங்கள் அதில் இருந்ததாக தெரிகிறது.

    வெடிப்பின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவர் பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த வெடிவிபத்து சம்பவம் அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.
    • தற்கொலைக்கு முயன்ற சரிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்தியாவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜூ. இவரது மனைவி சரிதா. இந்த தம்பதி தங்களது மகனுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர்.

    இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு இத்தம்பதி விவாகரத்து பெற்றனர். இதில் மகனை பிரகாஷ் ராஜூ பராமரிப்பில் வளர்க்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும், சிறுவனை தாய் சரிதா குறிப்பிட்ட நாட்கள் தன்னுடன் அழைத்து செல்ல கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதற்கிடையே வர்ஜீனியாவில் வசித்து வந்த சரிதா தனது 11 வயது மகனை கலிபோர்னியாவின் சாண்டாஅனாவில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார். இதற்காக அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் சரிதா போலீசுக்கு போன் செய்து தனது மகனை கொன்றுவிட்டு தான் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் ஓட்டல் அறைக்கு சென்றபோது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். தற்கொலைக்கு முயன்ற சரிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மகனை, பிரகாஷ் ராஜூவிடம் ஒப்படைக்கும் நாளில் அவனை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு சரிதா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    மகனை தான் வளர்க்க சரிதா விரும்பிய நிலையில் அது தொடர்பாக முன்னாள் கணவருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சரிதாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பிரகாஷ் ராஜூக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டி னார். ஆனால் அதை பிரகாஷ் ராஜூ மறுத்து உள்ளார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டது.

    மவுண்ட் மனுவா:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் 2-1 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி மவுண்ட் மனுவாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி 20 பந்தில் 50 ரன்களில் அவுட்டானார். டிம் செய்பர்ட் 22 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

    கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் 26 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராவத் 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்தின் துல்லிய பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.

    அப்துல் சமது 44 ரன்னும், இர்பான் கான் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 3-1 என கைப்பற்றியது.

    நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டும், ஜகாரி போக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • அமரன்’ல் இந்து ரெபேக்கா என படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சாய்பல்லவி.
    • தனது அன்றாட வாழ்க்கை பற்றி அளித்த சுவாரசியமான பேட்டியில் கூறினார்

    தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையான சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

    மருத்துவ படிப்பை முடித்திருந்தும் அவரது வாழ்க்கை சினிமாவை நோக்கி நகர்ந்தது. படங்களில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர், 'அமரன்'ல் இந்து ரெபேக்கா என படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சாய்பல்லவி. சமீபத்தில் அவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் நடந்த நேர்காணலில் தனது அன்றாட வாழ்க்கை பற்றி அளித்த சுவாரசியமான பேட்டியில் கூறியதாவது:-

    நான் இரவு 9 மணிக்கு தூங்கி காலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். ஜார்ஜியாவில் படித்துக் கொண்டிருந்த போது அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து படிக்கும் பழக்கம் இருந்தது. அந்த பழக்கம் அப்படியே பழகி விட்டது. 4 மணிக்கு மேல் நானே தூங்க முயற்சி செய்தாலும் என்னால் தூங்க முடியாது. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து என்னுடைய அன்றாட பணிகளை தொடங்கி விடுவேன். அது போல் பல படப்பிடிப்புகள் இரவு முழுவதும் படமாக்கப்படுகிறது. என்னால் இரவு 9 மணிக்கு மேல் கண் விழித்திருக்க முடியாது. இதை பார்த்து இயக்குனர்கள் பலர் என்னை சின்ன குழந்தை என்று சொல்வார்கள். இரவு நேர சூட்டிங்கே எனக்கு பிரச்சினைதான். ஆனாலும் எப்படியாவது அடம்பிடித்து இரவு 9 மணிக்கு தூங்கி விடுவேன்." இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத்தி படேல் சமூகத்தினரால் நடத்தப்படும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

    குஜராத்தை சேர்ந்தவர் பிரதீப் படேல் (வயது 56). மெஹ்சானாவில் உள்ள கனோடா கிராமத்தை சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் 2019-ம் ஆண்டு அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வசித்து வந்தார்.

    அங்குள்ள அக்கோ மாக் கவுண்டியில் லாங்க் போர்ட் நெடுஞ்சாலையில் குஜராத்தி படேல் சமூகத்தினரால் நடத்தப்படும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பிரதீப் படேல் தனது மகள் ஊர்மி யுடன் (வயது 24) அதிகாலையில் கடையை திறக்க சென்றார். அவர்கள் கடைக்குள் சென்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

    இதில் தந்தை-மகள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் பிரதீப் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஊர்மியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பலனளிக்காமல் ஊர்மி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் ப்ரேசியர் டெவன் வார்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திமுக அரசு இந்தாண்டு அறிவித்துள்ள திட்டங்களை எதையும் செயல்படுத்த முடியாது.
    • சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திமுக அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுள்ளது. தமிழகத்தில் ஊழல் மலிந்து உள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது.

    தற்போதைய பட்ஜெட், தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக தான். திமுக அரசு இந்தாண்டு அறிவித்துள்ள திட்டங்களை எதையும் செயல்படுத்த முடியாது.

    சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார்.

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். பாராளுமன்ற வளாகத்தில் நடந்த திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

    தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பத்திரிகையாளராக இருப்பது "மரண தண்டனைக்கு சமம்" என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் விமரிசித்துள்ளது.
    • பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பயப்படப் போவதில்லை, ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்த வேண்டும்

    இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் கொள்கைகளை விமர்சித்த டெம்போ என்ற பத்திரிகைக்கு கொடூரமான முறையில் அச்சுறுத்தல் விருட்க்கப்பட்டுள்ளது.

    ஒரு பன்றியின் தலையும், வெட்டபட்ட எலிகளின் உடல்கள் அடங்கிய பெட்டியும் டெம்போ பத்திரிகையின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

    1970 களில் இருந்து இந்தோனேசியாவின் சிறந்த வாராந்திர வெளியீடுகளில் ஒன்று டெம்போ. சமீபத்தில் அதிபர் பிரபோவோவின் கொள்கைகள் குறித்த விமர்சன அறிக்கைகளை வெளியிட்டது.

    இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) (மார்ச் 22), டெம்போவின் அலுவலகத்தில் துண்டாக்கப்பட்ட எலிகளின் உடல்கள் அடங்கிய பெட்டியை துப்புரவுப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். அதே நேரத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு பன்றியின் தலையும் அங்கு அனுப்பப்பட்டது.

    இந்த அச்சுறுத்தலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு ஒரு தீவிரமான கவலையாக மாறியுள்ளது.



    இந்தோனேசியாவில் பத்திரிகையாளராக இருப்பது "மரண தண்டனைக்கு சமம்" என்று ஆய்வு அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் - இன் இந்தோனேசியாவின் நிர்வாக இயக்குனர் உஸ்மான் ஹமீத் விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். சர்வதேச பத்திரிகையாளர் குழுவும் இந்த சம்பவத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    "பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பயப்படப் போவதில்லை, ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்த வேண்டும்" என்று டெம்போவின் இதழின் தலைமை ஆசிரியர் செட்ரி யசாரா தெரிவித்துள்ளார். அரசின் சமீபத்திய பட்ஜெட் வெட்டுகள் தொடர்பான விமர்சனங்களும், அதைத் தொடர்ந்து போராட்டங்களும் இந்தோனேசியாவில் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    • ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
    • இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணி:-

    டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷண், நிதிஷ் ரெட்டி, கிளாசன், அங்கித் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ், சிமர்ஜித் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    சச்சின் பேபி, ஜெய்தேவ் உனத்கட், ஜிஷன் அன்சாரி, ஆடம் ஜமபா, வியான் முல்டர்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:-

    ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ரானா, ரியான் பராக், துருவ் ஜுரல், ஹெட்மயர், ஜோப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, பரூக்கி பரூக்.

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    சஞ்சு சாம்சன், குனல் சிங் ரதோர், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குவேனா மாபாகா

    • ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் தொடக்க உரையாற்றினார். தலைமை செயலக சங்க ஒருங்கிணைப்பாளரான வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினரான விஜய குமரன், மாநில ஒருங்கிணைப்பாளரான சீனிவாசன் உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வருகிற 30-ந்தேதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்.

    ×