என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய வம்சாவளி"
- புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற இலக்கு இருந்து கொண்டே இருந்தது.
- பெருநிறுவன வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகி வெற்றிப்பெற தற்போது புதிதாக ரூ.3 ஆயிரத்து 100 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஹோசேவில் உள்ள பள்ளியில் படித்தவர்கள் சூர்யா மிதா (வயது 22), ஆதர்ஷ் ஹைரேமத் (22). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களான இவர்களுடன் அமெரிக்காவை சேர்ந்த பிரெண்டன் பூடி (22) என்பவரும் படித்தார்.
பள்ளியில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்த இவர்களுக்கு சிறுவயதிலேயே தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அந்த கனவை நனவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே ஆதர்ஷ்சுக்கு பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கவும், சூர்யா, பிரெண்டனுக்கு ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் படிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் தற்போதைய தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் அளவுக்கு திறன் வாய்ந்த அவர்கள் புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற இலக்கு இருந்து கொண்டே இருந்தது.
இந்தநிலையில் அவர்கள் படித்து கொண்டிருக்கும் போதே சிலிக்கான் பள்ளத்தாக்கில் செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு தேவையான மென்பொருள் உரையாடு ஏ.ஐ.செயலியான 'மெட்கோர்'ரை உருவாக்கினர்.
இது பெருநிறுவன வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகி வெற்றிப்பெற தற்போது புதிதாக ரூ.3 ஆயிரத்து 100 கோடி (350 பில்லியன் டாலர்கள்) முதலீட்டை ஈர்த்துள்ளது. இதனால் அந்த மெட்கோர் நிறுவனத்தின் தலா 22 சதவீத பங்குகளை கொண்டுள்ள சூர்யா மிதா, ஆதர்ஷ் ஹைரேமத் மற்றும் பிரெண்டன் பூடி ஆகியோர் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாகிவிட்டனர். இதன்மூலம் சுயதொழில் மூலமாக கோடீஸ்வரர்கள் ஆன பட்டியலில் முதலிடத்தில் இருந்த 'பேஸ்புக்' நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை இவர்கள் முறியடித்தனர்.
- ஆஷ்லே டெல்லிஸ் ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளை சந்தித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஷ்லே டெல்லிஸ் (64), வர்ஜீனியாவின் வியன்னாவில் உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரகசிய ஆவணங்கள் உட்பட தேசிய பாதுகாப்பு தகவல்களை சட்டவிரோதமாக வைத்து இருந்ததாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க-இந்திய உறவுகள் குறித்து மரியாதைக்குரிய குரலாகக் கருதப்படும் டெல்லிஸ், பல நிர்வாகங்களின் கீழ் பணியாற்றியுள்ளார். இவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர்.
மேலும், வெளியுறவுத்துறைக்கு ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பென்டகனின் நிகர மதிப்பீட்டு அலுவலகத்தின் ஒப்பந்ததாரராகவும் FBI பிரமாணப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.
ஆஷ்லே டெல்லிஸ் வாஷிங்டன் சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் ஒரு மூத்த உறுப்பினராகவும் உள்ளார்.
- குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோவாகின் கவுண்டி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தில்ப்ரீத் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், விஷால், பவிட்டர் சிங், குர்தாஜ் சிங், மன்ப்ரீத் ரந்தாவா,சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இக்கும்பல் சித்ரவதை, சதித்திட்டம், சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பவிட்டர் சிங் படாலா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாககூறப்படும் குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு முகமை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.
- புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.
இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார்.
ஆனால் BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், டிரம்ப் அரசு வழங்கிய பதவியில் இருந்து விலகி டிரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார்.
மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.
எலான் மஸ்க் அமெரிக்கா கட்சியை தொடங்கிய நிலையில், அதன் பொருளாளராக வைபவ் தனேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் `டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டவர் வைபவ் தனேஜா.
இந்திய வம்சாவளி என்பதால், கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் ஒருவரை நியமிப்பதா? என எலான் மஸ்க் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
- சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.
- தற்கொலைக்கு முயன்ற சரிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தியாவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜூ. இவரது மனைவி சரிதா. இந்த தம்பதி தங்களது மகனுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர்.
இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு இத்தம்பதி விவாகரத்து பெற்றனர். இதில் மகனை பிரகாஷ் ராஜூ பராமரிப்பில் வளர்க்க கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும், சிறுவனை தாய் சரிதா குறிப்பிட்ட நாட்கள் தன்னுடன் அழைத்து செல்ல கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதற்கிடையே வர்ஜீனியாவில் வசித்து வந்த சரிதா தனது 11 வயது மகனை கலிபோர்னியாவின் சாண்டாஅனாவில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார். இதற்காக அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் சரிதா போலீசுக்கு போன் செய்து தனது மகனை கொன்றுவிட்டு தான் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார்.
உடனே போலீசார் ஓட்டல் அறைக்கு சென்றபோது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். தற்கொலைக்கு முயன்ற சரிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மகனை, பிரகாஷ் ராஜூவிடம் ஒப்படைக்கும் நாளில் அவனை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு சரிதா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மகனை தான் வளர்க்க சரிதா விரும்பிய நிலையில் அது தொடர்பாக முன்னாள் கணவருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சரிதாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பிரகாஷ் ராஜூக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டி னார். ஆனால் அதை பிரகாஷ் ராஜூ மறுத்து உள்ளார்.
- மன் பிரீத் மோனிகா சிங், கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினார்.
- முறையாகும். புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ்க வுண்டி சிவில் கோர்ட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய இன பெண் நீதிபதியாக பதவி ஏற்று உள்ளார்.
அவரது பெயர் மன் பிரீத் மோனிகா சிங். இவர் கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினார். அவர் ஏராளமான வழக்குகளில் வாதாடி உள்ளார். ஹாஸ்டன் நகரில் பிறந்த மன்பிரீத் மோனிகா சிங் தற்போது பெல்லாரில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அமெரிக்காவில் சீக்கிய பெண் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். சீக்கிய மக்களுக்கு இது பெருமையை தரும் என அவர் கூறினார்.
- அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- ஐரோப்பிய நாடான அயர்லாந்தை ஆட்சி செய்வதும் ஒரு இந்திய வம்சாவளிதான்.
வாஷிங்டன் :
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நிக்கி ஹாலே களம் இறங்கி இருக்கிறார். இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதன் மூலம் நிக்கி ஹாலே உலக நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த பெண் அரசியல் தலைவரான கமலா ஹாரிஸ் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்தார்.
இந்தியாவை சேர்ந்த தாய்க்கும், ஜமைக்கா நாட்டின் தந்தைக்கும் பிறந்த கமலா ஹாரிசின் இந்த வெற்றி அமெரிக்க அரசியல் அரங்கில் இந்திய வம்சாவளியினரின் பங்கு தவிர்க்க முடியாததாக மாறியிருப்பதை காட்டியது.
அதன் எதிரொலியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சாளியை சேர்ந்த 5 பேர் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகினர்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், அமி பெரா மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகிய 5 பேரும் அமெரிக்க நாடாளுமன்ற பிரநிதிகள் சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அமெரிக்கா மட்டும் இன்றி உலகின் பிற முக்கிய நாடுகளின் அரசியலிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீண்டு வருவதை காண முடிகிறது.
அந்த வகையில் இந்தியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த இங்கிலாந்தின் பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்று, உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்.
210 ஆண்டுகளில் இங்கிலாந்தை ஆட்சி செய்யும் மிக இளைய பிரதமர் இவர்தான். அந்த நாட்டின் முதல் இந்து பிரதமரும் இவரே.
ரிஷி சுனக்கை தவிர்த்து இன்னும் சில இந்திய வம்சாவளியினர் இங்கிலாந்து அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ரிஷி சுனக்கின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை மந்திரியாக உள்ளார்.
அதேபோல் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசில் இந்திய வம்சாவளி பிரிதி படேல் உள்துறை மந்திரியாகவும், மற்றொரு இந்திய வம்சாவளி அலோக் சர்மா சர்வதேச வளர்ச்சி மந்திரியாகவும் இருந்தனர்.
இ்ங்கிலாந்தை போல மற்றொரு ஐரோப்பிய நாடான அயர்லாந்தை ஆட்சி செய்வதும் ஒரு இந்திய வம்சாவளிதான். கடந்த 2017 முதல் 2020 வரை அந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்த இந்திய வம்சாவளி லியோ வரத்கர், கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே போல் 2015-ம் ஆண்டு முதல் போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக இருந்து வரும் அன்டோனியோ கோஸ்டா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
கனடாவின் ராணுவ மந்திரியாக இருந்து வரும் அனிதா ஆனந்தின் பெற்றோர் இந்தியர்கள். இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர்.
அனிதா ஆனந்தை தவிர, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளிகளான ஹர்ஜித் சஜ்ஜன் மற்றும் கமல் கேரா ஆகிய இருவரும் மந்திரிகளாக உள்ளனர்.
அதேபோல் நியூசிலாந்தில் மந்திரியாக பதவியேற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்கிற பெருமைக்குரியவர் பிரியங்கா ராதாகிருஷ்ணன். சென்னையில் கேரள தம்பதிக்கு பிறந்த இவர், நியூசிலாந்தின் சமூகம் மற்றும் தன்னார்வத் துறை மந்திரியாக உள்ளார்.
கயானா நாட்டின் அதிபர் முகமது இர்பான் அலி, மொரீஷியஸ் நாட்டின் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்னாட், சீஷெல்ஸ் நாட்டின் அதிபர் வாவல் ராம்கலாவன் ஆகியோரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களே.
இப்படி உலகம் முழுவதும் இந்திய வம்சாவளி தலைவர்கள் பலரும் உயர் பதவிகளில் இருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
- இந்திய வம்சாவளியினர் வீட்டின் பெல்லை அழுத்திய பின் சிறுவர்கள் ஓட்டம்
- காரில் துரத்திச் சென்று விபத்துக்குள்ளாக்கியதில் 3 சிறுவர்கள் பலி
1985-ம் வருடம் வெளிவந்த "பூவே பூச்சூட வா" எனும் திரைப்படத்தில் சில சிறுவர்கள், ஏதாவது ஒரு வீட்டில் அழைப்பு மணியை அழுத்தி விட்டு, அவ்வீட்டின் உள்ளே இருந்து யாரேனும் வெளியே வந்தால், உடனே ஓடிவிடும் "டோர்பெல் டிட்ச்" (Doorbell Ditch) எனப்படும் சுட்டித்தனத்தில் ஈடுபடுவார்கள்.
அமெரிக்காவில் ஜனவரி 19, 2020 அன்று நடைபெற்ற அதே போன்றதொரு சம்பவத்தில் விளையாட்டுத்தனமான ஈடுபட்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
இச்சம்பவத்தை துப்பு துலக்கிய கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து துறை தெரிவித்திருக்கும் தகவல்களின்படி, இந்த 3 சிறுவர்களும் அவர்களில் ஒரு சிறுவன் வீட்டில் இரவு தங்கியிருக்கின்றனர். அப்போது அதில் ஒருவன் டோர்பெல் டிட்ச் (Doorbell Ditch) விளையாடலாம் என கூறியிருக்கிறான். சம்மதித்த அனைத்து சிறுவர்களும் அருகிலிருந்த மோட்ஜெஸ்கா ஸம்மிட் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தி விட்டு தங்கள் காருக்கு வேகமாக திரும்பியிருக்கின்றனர்.
அவ்வீட்டில் தங்கியிருந்த கலிபோர்னியா பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான அனுராக் சந்திரா (45), கோபமடைந்து காரில் தப்பிய அந்த சிறுவர்களை தனது காரில் துரத்தி சென்றுள்ளார்.
ஸ்குவா மலை சாலையில் தனது காரின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ.க்கும் மேல் அதிகப்படுத்தி சிறுவர்களின் கார் மீது மோதினார். இதில் காரிலிருந்த 6 சிறுவர்களில் 16 வயதுடைய டேனியல் ஹாகின்ஸ், ஜேக்கப் இவாஸ்கு மற்றும் டிரேக் ரூயிஸ் ஆகிய 3 சிறுவர்கள் அங்கேயே பலியானார்கள். 18, 14, 13 வயதுடைய மீதம் 3 பேர் காயத்துடன் தப்பித்தனர்.
இதனையடுத்து ஜனவரி 20, 2020 முதல் ரிவர்ஸைட் பகுதியில் உள்ள ராபர்ட் பிரெஸ்லி தடுப்புக்காவல் மையத்தில் அனுராக் சந்திரா காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேல் விசாரணை தீர்ப்பு கடந்த 14-ந்தேதி வழங்கப்பட்டது.
ரிவர்ஸைட் கவுண்டி பகுதியின் நீதிமன்றத்தில், நடுவர் குழு குற்றவாளி என ஒருமித்த கருத்தை தெரிவித்தவுடன், சந்திராவிற்கு பரோலில் வெளி வர முடியாதபடி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
சில சிறுவர்களின் விளையாட்டுத்தனத்தாலும், ஒருவரின் கோபத்தாலும் அனைவரின் வாழ்வும் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் வருத்தத்துடன் பேசி வருகின்றனர்.
- சிங்கப்பூரில் சில குற்றச்சாட்டுகள் உறுதியானால் பிரம்படி தண்டனை வழங்கப்படுவது வழக்கம்
- கலையரசன் ஏற்கெனவே 16 வருடங்கள் தண்டனை பெற்றவர்
சிங்கப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம்.
சமீபத்தில் பல மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சில குற்றச்சாட்டுகள் உறுதியானால் இங்கு பிரம்படி வழங்குவதும் வழக்கம்.
ஒரு குற்றத்திற்கு தண்டனை பெற்று அதனை அனுபவித்த பிறகும் மீண்டும் அதே குற்றத்தை ஒருவர் புரிந்தால் அவர் மீது சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் கிடைக்கும். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு இத்தகைய கடுமையான தண்டனைகள் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரில் வசித்த மார்க் கலைவாணன் கலையரசன் (44) என்பவர் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக 16 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவர். 2017-ம் வருடம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சில நாட்களிலேயே, சிறையிலிருந்து வெளியே வந்த கலையரசன் ஒரு அபார்ட்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு ஃப்ளாட்டில் அத்துமீறி நுழைந்தார். அந்த வீட்டில் ஒரு பணிப்பெண் துணிகளை மடித்துக்கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
போதையில் இருந்த கலையரசன், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். அப்பெண்ணின் கூக்குரலால் பிடிக்கப்பட்ட மார்க், கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர் கொண்டார்.
இதன்படி, கலையரசன் சமூகத்தில் உள்ள பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியவர் என வாதிடப்பட்டு அவருக்கு 18 வருடம் தடுப்பு காவல் சிறை தண்டனை (Preventive Detention) வழங்கப்பட்டது. இத்துடன் சிங்கப்பூரின் தண்டனை சட்டத்தின்படி 12 பிரம்படிகளும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இத்தகைய கடுமையான தண்டனைகள் அவசியம் என அந்நாட்டு அரசாங்கம் பலமுறை கூறி வந்திருக்கிறது.
- மினால் பட்டேல் ஜார்ஜியா மாநிலத்தில் லேப் சொல்யூஷன்ஸ் பெயரில் மருத்துவ ஆய்வகம் நடத்தி வந்தார்
- இதை தவிர, தனிப்பட்ட முறையில் ரூ.175 கோடி மோசடியாக பெற்று கொண்டார்
உலகின் முன்னணி நாடான அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் மிக அதிகம் என்பதால், அங்குள்ள மக்கள் காப்பீடு மூலம்தான் தங்களுக்கு தேவைப்படும் மருத்துவ செலவினங்களை செய்து கொள்ள முடியும்.
இதற்கு பல காப்பீடு நிறுவனங்கள் இருந்தாலும், மெடிகேர் எனும் அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் காப்பீடுகளைத்தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதன்படி பயனாளிகளுக்கு தேவைப்படும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட ஆய்வக பரிசோதனகள், ஸ்கேன் உள்ளிட்ட இமேஜிங் பரிசோதனைகள் மற்றும் உயர்-ரக தொழில்நுட்ப உடற்கூறு பரிசோதனைகளுக்கான தொகை, மெடிகேர் நிறுவனத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஆய்வக மற்றும் பரிசோதனை கூடங்களுக்கு செலுத்தப்பட்டு விடும்.
இது சம்பந்தமான ஊழல் ஒன்று அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ளது லேப் சொல்யூஷன்ஸ், எல்.எல்.சி. எனும் மருத்துவ ஆய்வகம். இதை மினால் பட்டேல் (44) எனும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நடத்தி வருகிறார். இவர் பெரும் பணம் சம்பாதிக்க ஒரு திட்டம் தீட்டி மெடிகேர் பயனாளிகளை குறி வைத்தார்.
பயனாளிகளுடன் தொடர்பில் உள்ள சில முகவர்கள், கால் சென்டர்கள் மற்றும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் அகியவற்றை தொடர்பு கொண்டார். இவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மூலம், பயனாளிகளுக்கு அவசியம் இல்லாத சில புற்றுநோய் சம்பந்தமான அதிநுட்ப மரபியல் சோதனைகளை பயனாளிகள் செய்து கொண்டே ஆக வேண்டும் என நம்ப செய்தார்.
இந்த பரிசோதனைகள் காப்பீட்டுக்கு உட்பட்டது என கூறி அவர்களை பரிசோதனைகளை செய்து கொள்ள வைத்தார். இதற்காக அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஒப்புதல்களையும் மோசடி செய்து பெற்றார். தேவையற்ற இந்த பரிசோதனைகளுக்கான செலவுகளுக்கு ரசீதுகளை மெடிகேரில் செலுத்தி பணத்தையும் பெற்றுக் கொண்டார்.
இந்த வழிமுறையில் மினால் பட்டேல் ஜூலை 2016 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.3 ஆயிரத்து 850 கோடிக்கு ($463 million) மேல் மோசடி செய்தார்.
மத்திய புலனாய்வு அமைப்பின் சுகாதார ஊழல் தடுப்பு படைக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆபரேஷன் டபுள் ஹெலிக்ஸ் எனும் பெயரில் மினாலை பிடிக்க ஒரு ரகசிய திட்டம் போட்டது. இதில் அவர் பொறி வைத்து பிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்தது. இறுதியில் நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இருக்கிறது.
ஆகஸ்ட் 25 அன்று அவரது சொத்துக்களை முடக்குவது தொடர்பான விசாரணை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் பிரசாரத்தில் சரிகா பன்சால் மீது இனவெறி வெறுப்பு பிரசாரம் பரப்பப்பட்டுள்ளது.
- சரிகா பன்சாலின் பிரசார அடையாளங்கள் சிதைக்கப்பட்டன.
நியூயார்க்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கேரி டவுன் கவுன்சிலுக்கு (நகரசபை) தேர்தல் வருகிற அக்டோபர் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான சரிகா பன்சால் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் சரிகா பன்சால் மீது இனவெறி வெறுப்பு பிரசாரம் பரப்பப்பட்டுள்ளது. சரிகா பன்சாலின் பிரசார பதாகையில் அவரது முகத்தில் ஒரு கறுப்பின நபரின் முகத்தின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அவர் போட்டியிடும் வெஸ்ட் கேரி தொகுதியில் உள்ள ஹைகி ராப்ட் கிராமத்தில் நடந்துள்ளது. அங்கு சரிகா பன்சாலின் பிரசார அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. இந்த இனவெறி பிரசாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக சரிகா பன்சால் கூறும்போது, இனவெறி பிரசார சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. எனது பிரசாரத்துக்கு எதிராக இனவெறிச் செயலால் உண்மையிலேயே வருத்தம் அடைந்தேன். நமது நகரத்தில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான வழிமுறையாக நாம் பன்முகத்தன்மையை ஏற்று கொள்ள வேண்டும்.
கேரி நகரில் பழுப்பு அல்லது கறுப்பு நிற மக்களுக்கு எதிரான மத வெறி அல்லது இன வெறிக்கு இடமில்லை என்றார்.
மேயர் ஹரோல்ட் கூறும் போது, இந்த இனவெறி வெறுக்கத்தக்க செயல். கேரி நகரில் நாம் விரும்பும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானது. இது எங்கள் சமூகத்தை நெருக்கமாக கொண்டுவர மட்டுமே உத வும் என்றார்.
- மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.
- தர்மன் சண்முக ரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இது அந்நாட்டின் 7-வது அதிபர் தேர்தல் ஆகும். இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தர்மன் சண்முக ரத்னத்தின் தாத்தா, பாட்டி, தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள் தர்மன் 1957-ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். அவரது தந்தை கனகரத்தினம் மருத்துவ துறையில் பேராசிரியராக பணியாற்றியவர்.
தர்மன் சண்முகரத்னம், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார். 2001-ம் ஆண்டு அரசியலில் ஈடுபட்ட அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் மக்கள் செயல் கட்சியில் அமைச்சராக பணியாற்றினார்.
தர்மன் சண்முக ரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார்.
சிங்கப்பூர் எம்.பி.யாக இவர் கடந்த 2001-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இவர் கல்வி, நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றினார்.






