என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை.
- 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- கோயம்பேடு - அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை இருக்காது.
- சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே செல்லும்.
சென்னை வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மேல் 2ம் கட்ட வழித்தட கட்டுமானப் பணிகளால் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதிகள் வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்களில், காலை 5 மணி முதல் 6 மணி வரை கோயம்பேடு - அசோக் நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை இருக்காது.
மேற்குறிப்பிட்ட நேரத்தில், விமான நிலையம்/ செயிண்ட் தாமஸ் மவுண்டில் இருந்து புறப்படும் ரயில்கள் அசோக் நகர் வரை மட்டுமே இயங்கும்.
அதேபோல, சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே செல்லும். பயணிகள் வசதிக்காக அந்த நேரத்தில் மட்டும் கோயம்பேடு - அசோக்நகர் இடையே 10 நிமிட இடைவேளையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மற்ற நேரங்களில் வழக்கமான ரெயில் சேவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் பதவி ஏற்பு.
- சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வந்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம்,அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.
தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வந்தார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் போட்டியில் கொரியாவை 4-2 என இந்தியா வீ்ழ்த்தியிருந்தது.
- கடைசி போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இன்று சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என மோசமான தோல்வியை சந்தித்தது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் கொரியாவை இந்தியா 4-2 என வீழ்த்தியிருந்தது. குரூப் சுற்றில் இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு டிரா மூலம் முதலிடம் பிடித்தது.
தற்போது சூப்பர் 4 சுற்றில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளது. கடைசி போட்டியில் நாளைமறுநாள் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது. அதேவேளையில் கொரியா சீனாவை எதிர்கொள்கிறது.
கொரியா தோல்வியடைந்து, ஜப்பானுக்கு எதிராக இந்தியா டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை சீனாவுக்கு எதிராக கொரிய வெற்றி பெற்றால், ஜப்பானுக்கு எதிராக இந்தியா கட்டாயம் வெற்றி பெற்று கோல் வித்தியாசத்தில் கொரியாவை விட முன்னணியில் பெற வேண்டும்.
- இரு அணிகளும் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளன.
- ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி அபுதாபியில் நடக்கிறது. இதில் வங்கதேசம்- ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்கதேச அணி கேப்டன் லிட்டோன் தாஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளும் பி பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்திருந்தது.
- விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா?
- திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
மக்களுக்கு போலி நம்பிக்கைகள் கொடுத்து எப்படியெல்லாம் வித விதமாக ஏமாற்றலாம் என ஒரு போட்டி வைத்தால் அதில் திமுக மட்டும் தான் தனித்து வெற்றி பெறும். அந்தளவிற்கு நாள்தோறும் பொய்களிலும் புரளிகளிலும் புரண்டு கொண்டிருக்கும் தில்லுமுல்லு திமுகவின் அடுத்த போலி தேர்தல் வாக்குறுதி தான், வாக்குறுதி எண் 504.
அதாவது, மக்கள் நலனுக்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என வாய்க்கூசாமல் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்தும் அதைப்பற்றி வாயைத் திறக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்காமல் விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா? இந்த லட்சணத்தில் நாடு போற்றும் நான்காண்டு என வெற்று விளம்பரங்கள் வேறு.
கொடுத்த வாக்கின்படி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையையும் இன்று வரை குறைக்காத திமுக
அரசு, இனியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்பதும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கு என்ன எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மார்ச் மாதத்தில் இருந்து தீவிரத்தன்மையோடு நேர்மறையான சூழ்நிலையுடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.
- இது முன்னேறி கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இதில் திருப்திகரமாக உள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேர்மறையான சூழ்நிலையில் முன்னேறி வருகின்றன என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் நவம்பர் மாதத்திற்குள் வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க அந்தந்த நாட்டின் வர்த்தக மந்திரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
மார்ச் மாதத்தில் இருந்து தீவிரத்தன்மையோடு நேர்மறையான சூழ்நிலையுடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. இது முன்னேறி கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இதில் திருப்திகரமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியில் முடிவடைய இருநாடுகளும் முன்வருவதில் எந்த சிக்கலும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி, டிரம்பின் நேர்மறையாக மதிப்பீட்டை அன்புடன் வரவேற்பதாக பதில் அளித்திருந்தார்.
- அமித் ஷா- செங்கோட்டையனின் ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
- இபிஸ் முதல் செங்கோட்டையன் வரை பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.
அதிமுகவில் எந்த பிரச்னை என்றாலும் அமித்ஷாவை சந்திக்கிறார்கள்; அதிமுக டெல்லியில் இருந்து நடத்தப்படுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா கூறியதாவது:-
மத்திய அமைச்சர் அமித் ஷாவும், செங்கோட்டையனும் சந்தித்தது ஒரு மறைமுகமான செயல்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கக்கூடியவர். பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்.
ஆனால், இருவரும் மவுனமாக உள்ளனர். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் அதிமுக எப்போதோ சென்றுவிட்டது. இபிஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தற்போது செங்கோட்டையன் என பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.
அதனால், இபிஎஸ்., அல்லது தமிழ்நாடோ அதிமுகவை இயக்கவில்லை. டெல்லியில் இருந்து அதிமுக இயக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறப்பு அதிரடிப்படை, கோப்ரா வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அடர்ந்த காட்டில் நடைபெற்ற சண்டையில் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன் உள்ளூர் போலீஸ் குழுவினர் சேர்ந்து மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகளுக்கும்- வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் குறைந்தது 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராய்ப்பூர் சரக ஐஜி தெரிவித்துள்ளார்.
- கவிஞர் குவேம்பு-க்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்.
- நடிகர் விஷ்ணுவர்தனுக்கும் கர்நாடகா ரத்னா விருது வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநில அமைச்சரவை மறைந்த நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை சரோஜா தேவிக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்க முடிவு செய்துள்ளது.
மேலும், கவிஞர் குவேம்பு-க்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
உப்பேர் பத்ரா நீர்ப்பாசன திட்டத்திற்காக 75 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நாளை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் இணையத்தில் வைரலானது. இப்பாடலில் பூஜா ஹெக்டே, சௌவின் ஷாஹிர் உடன் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், கூலி படத்தில் இடம் பெற்ற மோனிகா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- இரண்டு வருடத்திற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
- இல்லையென்றால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.
தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் 2012-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதாவது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது என கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தை சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.






