என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- ரூ.31,592.39 கோடி முதலீடு உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு இன்று (பிப். 23) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்பட உள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்படவுள்ள 46 திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்களினால் ரூ.31,592.39 கோடி முதலீடு உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- நாளை மறைந்த ஜெயலலிதா பிறந்த நாள்.
- ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை.
தமிழக சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக, தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். சசிகலா தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாளை மறைந்த அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதான் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று சென்னையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது "நாளை பசும்பொன்னில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டத்தில் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளேன்" என்றார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
- பிப்.1ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகியுமான நல்லகண்ணு நூற்றாண்டை தாண்டியுள்ள நிலையில், வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி எழுந்துவருகிறது. இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.
அந்தவகையில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் இம்மாத தொடக்கத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் 20 நாட்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளையும் ஈஷா இலவசமாக வழங்கி வருகிறது.
- பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள சூர்யகுண்ட மண்டபத்தில் பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு 'சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை' வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈஷா அறக்கட்டளை சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அந்த வரிசையில், இந்த ஆண்டு சிங்கபதி, சாடிவயல், நல்லூர்பதி, முள்ளங்காடு, தானிக்கண்டி, மடக்காடு, சர்க்கார்பதி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியினக் குடியிருப்புகள் மற்றும் போளுவாம்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையினை ஈஷா பிரம்மச்சாரிகள் வழங்கினர்.
ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொருளாதாரம் அல்லது குடும்பச் சூழல் காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முறையான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் பி.எஸ்.ஜி, ராமகிருஷ்ணா, வி.எல்.பி ஜானகியம்மாள், கலைமகள், அவினாசிலிங்கம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகளில் மேற்கல்வி பயின்று வருகின்றனர். இதில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் அடங்குவர்.
குறிப்பாக, இளங்கலை வணிகவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், தடய அறிவியல் மற்றும் குற்றவியல், விமான நிலைய மேலாண்மை, தாவரவியல், வேதியியல் மற்றும் ஆங்கில இலக்கியம் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து இம்மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஈஷா கல்வி உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமில்லாமல், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சி, மென்பொருள் துறை சார்ந்த பயிற்சிகள், வேலைக்கான நேர்காணல்களில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் மற்றும் 'சயின்ஸ் ஸ்பார்க்' என்ற பெயரில் அறிவியல் தொடர்பான பல்வேறு சிறப்புப் பயிற்சிகளையும் இந்த மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளையும் ஈஷா இலவசமாக வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயின்ற பல மாணவர்கள் இன்று ஐடி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பொறியாளர்கள், கணக்காளர்கள், முன்னணி மருத்துவமனைகளில் செவிலியர் மற்றும் ஈஷா யோக மையத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
இவ்விழாவில் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் அவர்களது பெற்றோர், முந்தைய ஆண்டுகளில் கல்வி உதவித் தொகை பெற்று தற்போது பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக மாணவர்கள் தங்களின் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இதனுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த விழாவின் அனைத்து அம்சங்களையும் மாணவர்களே முன்னின்று ஒருங்கிணைத்து நடத்தியது குறிப்பிடத்தக்கது..
- ஊழலற்ற ஆட்சியை தருவதாக கூறுவதால் விஜய்யை ஆதரிக்கிறோம்.
- வரும் தேர்தலில் விஜய் ஆட்சிக்கு வரவேண்டும்
தமிழ்நாடு அரசியலில் பல சதாப்தங்களாக இருந்துவரும் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக தொடங்கியுள்ள கட்சி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் அமைச்சரவையில் இருந்த இவர், கடந்த சிலநாட்களாக ஓபிஎஸ் அணியில் இருந்துவந்தார். இந்நிலையில் அந்த அணியில் இருந்து பிரிந்து புதியக் கட்சித் தொடங்கினார்.
இக்கட்சியின் முதல் கூட்டம் இன்று காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார், "விஜய்க்கு எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்கும்" என அறிவித்துள்ளார்.ய
ஊழலற்ற ஆட்சியை தருவதாக கூறுவதால் விஜய்யை ஆதரிக்கிறோம். வரும் தேர்தலில் விஜய் ஆட்சிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
- எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று, 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
இது தான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே? இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது?
இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?
பிரச்சார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் பொம்மை முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா?
தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த பொம்மை முதல்வர்?
மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக மக்களே- சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக!
- தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது
- SIR பணிகளுக்கு பின் தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதன்படி SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும் பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். SIRக்கு பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் இடம்பிடித்துள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள்: 5,36,991 ஆகும்.
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் இடம்பிடித்துள்ளது. இந்த தொகுதியில்மொத்த வாக்காளர்கள்: 1,16,896 ஆகும்
முன்னதாக தமிழ்நாட்டில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவை தொகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி நீண்ட காலமாக இருந்த நிலையில், சென்னை துறைமுகம் தொகுதி அந்த இடத்தைப் பிடித்துள்ளது
- பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது.
- ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம் பெறுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க. தேர்தல் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைகிறது. இதற்கான வேலைகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த அலுவலகத்தில் பிரசாரங்களை ஒருங்கிணைப்பது, விளம்பரத் துறை, பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, சமூக ஊடகப் பிரிவு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, சட்ட உதவி, தலைவர்கள் சுற்றுப்பயண ஏற்பாடு, அகில இந்திய தலைவர்கள் வருகை, தங்க வைத்தல், பிரசாரத்துக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 30 துறைகள் அமைக்கப்படுகிறது.
இதுதவிர கூட்ட அரங்கம், தலைவர் அறை, முக்கிய தலைவர்கள் கலந்துரையாடும் அறை உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம் பெறுவார்கள்.
இந்த பணிகள் அனைத்தும் வருகிற 25-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். 26-ந்தேதி (வியாழன்) இந்த அலுவலகத்தை மத்திய மந்திரி பியூஷ்கோயல் திறந்து வைக்கிறார். அதன் பிறகு கட்சி அலுவலகமும் தற்காலிகமாக இங்கு செயல்படும்.
- தேர்தல் ஆதாயத்தை மனதிற்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுத்தது சந்தர்ப்பவாத திமுக.
- விஜய்யின் தலைக்கனமும், ஆணவமும் மிக மிக ஆபத்தானது
கடந்தாண்டு செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக மாநாடு கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடங்கும். விஜய்யின் வருகை பல மணி நேரம் தாமதமானதாலும், அவரைக் காண மக்கள் திடீரென முண்டியடித்ததாலும் இந்த நெரிசல் ஏற்பட்டது என்றும், மின்வெட்டு மற்றும் போதிய தண்ணீர் வசதி இல்லாததும் உயிரிழப்புக்கு காரணங்களாகச் சொல்லப்பட்டன.
விஜய் தரப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ரூ.2 லட்சம் அறிவித்தது. சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தற்போதுவரை ஆளும்கட்சியான திமுகவை மட்டுமே விஜய் குறைக்கூறி வருகிறார். இந்நிலையில் இன்றும் முதலமைச்சர் தன்மீது பழிபோட்டதாக வேலூரில் பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாதகவின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"தெலங்கானாவில் அல்லு அர்ஜுனைக் கைதுசெய்தது போல, கரூர் பேரவலத்திற்குக் காரணமான விஜய்யைக் கைதுசெய்திருக்க வேண்டும். ஆனால், வழக்குக்கூட போடாது முழுமையாகக் காப்பாற்றிவிட்டது கேடுகெட்ட திமுக.
'விஜய்யைக் கைதுசெய்து, அது திமுகவுக்கு வாக்கரசியலில் எதிர்மறையாகத் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது?' எனும் இலாப, நட்டக் கணக்குப் போட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காது விட்டது திமுக. அவ்வளவு அக்கறை மக்கள் மீது? வெட்கக்கேடு!
41 பேரின் பிணங்களின் மேல் கூட்டணி அமைக்க அதிமுகவும், பாஜகவும் முயற்சித்ததென்றால், தேர்தல் ஆதாயத்தை மனதிற்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுத்தது சந்தர்ப்பவாத திமுக. 41 பேரின் மரணத்தைவிட அரசியல் இலாபம்தான் முக்கியமெனக் கருதிய ஸ்டாலின் அரசின் அயோக்கியத்தனம் அது!
இன்றைக்கு, "கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டார்கள்" என்கிறார் விஜய். அப்படியென்றால், கரூர் பேரவலத்தில் விஜய்க்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? எந்தவிதத்திலும் அவர் காரணமில்லையா? எப்படி இப்படியெல்லாம் பேச விஜய்க்கு மனம் வருகிறது?
இப்போதுவரை கரூர் மரணங்கள் விஜய்க்கு எந்த உறுத்தலையும், குற்ற உணர்ச்சியையும், வலியையும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு அவரது இந்தப் பேச்சே உதாரணம்.
விஜய் என்றைக்கும் திருந்தப் போவதுமில்லை; வருந்தப் போவதுமில்லை. தன்னிடமிருக்கும் பணத்தையும், திரைக்கவர்ச்சியையும் முதலீடாகக் கொண்டு மக்களை ஆண்டுவிடத் துடிக்கும் விஜய் மிக மோசமானக் காரியக்கிறுக்கன். கடந்தக் கூட்டத்தில் இறந்தவரின் பெயரைச் சொல்லி இரங்கல்கூட தெரிவிக்காத விஜய்யின் தலைக்கனமும், ஆணவமும் மிக மிக ஆபத்தானது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாய்க்கும் தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் மாணவி தனது தாயுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் மகள் என்றும் பாராமல் அவருக்கு தாயே தூக்கமாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்திக்கு விருந்தாக்கினார். இதில் கர்ப்பம் அடைந்த மாணவி தாயின் பிடியில் இருந்து தப்பி திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார்.
இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது வாழ்க்கையை சீரழித்த கொடூர தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தார்.
இதையடுத்து பெற்ற மகளையே தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
- பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
பெரும்பாறை:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளில் பல்வேறு வண்ணப்பூக்கள் பூத்து கவர்ந்திழுப்பது வழக்கம். அதன்படி, தற்போது கொடைக்கானல் நகர்ப்பகுதி, மலைப்பாதைகள் மற்றும் கிராமங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
குறிப்பாக கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, கே.சி. பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களுக்குள் யாரும் செல்லாமல் இருக்க வேலிக்காக சங்கு பூச்செடிகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். அதேபோல் மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை சாலையோரங்களில் மின் விளக்குகளை தோரணங்களாக கட்டிவிடப்பட்டது போன்று சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன. இதனால் அவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், தங்களது கேமரா, செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
- கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மொத்தம் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
- கோவை தெற்கில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கி டிசம்பர் 14-ந்தேதி வரை நடைபெற்றது.
இதில் இறந்த வாக்காளர்கள் உள்பட 6½ லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் 25 லட்சத்து 75 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தனர்.
இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மொத்தம் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 96 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 889 பேரும், பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 95 ஆயிரத்து 396 வாக்காளர்கள் அடங்குவர்.
இறுதி வாக்காளர் பட்டியலில் சட்டசபை தொகுதி வாரியாக இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் விவரம் வருமாறு:-
மேட்டுப்பாளையம் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 22 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 46 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 34 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 438 வாக்காளர்கள் உள்ளனர்.
சூலூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 987 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 57 ஆயிரத்து 452 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 102 பேரும் என மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 541 வாக்காளர்களும் உள்ளனர்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 430 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 8 ஆயிரத்து 963 பெண் வாக்காளர்கள், 114 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை வடக்கில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 383 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 122 பெண் வாக்காளர்கள், 28 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 91 ஆயிரத்து 533 வாக்காளர்கள் உள்ளனர்.
தொண்டாமுத்தூரில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 968 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 371 பேரும், 103 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2 லட்சத்து 87 ஆயிரத்து 442 வாக்காளர்களும் உள்ளனர்.
கோவை தெற்கில் ஆண் வாக்காளர்கள் 90 ஆயிரத்து 214 பேரும், பெண் வாக்காளர்கள் 96 ஆயிரத்து 263 பெண் வாக்காளர்களும், 32 மூன்றாம் பாலினத்தவர்களும் என 1 லட்சத்து 86 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளனர்.
சிங்காநல்லூர் தொகுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 758 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 37 ஆயிரத்து 277 பெண் வாக்காளர்கள், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 58 பேரும், கிணத்துக்கடவு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 562 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 55 ஆயிரத்து 888 பேரும், 36 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 486 வாக்காளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சி தொகுதியில் 96 ஆயிரத்து 61 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 919 பெண் வாக்காளர்களும், 35 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 15 வாக்காளர்கள் உள்ளனர். வால்பாறையில் 81 ஆயிரத்து 504 ஆண் வாக்காளர்கள், 90 ஆயிரத்து 759 பெண் வாக்காளர்கள் 21 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 284 வாக்காளர்கள் உள்ளனர்.






