என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

    தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.

    * 6 மாத கால முதலமைச்சராக இருந்த நான் ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்தேன்.

    * ஜெயலலிதா இல்லாதபோது நான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை.

    * என்னை கட்டாயப்படுத்தி தான் முதலமைச்சராக அமர வைத்தனர்.

    * 3-வது முறையாக கட்டாயத்தின் அடிப்படையில்தான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.

    * முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

    * அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என வலியுறுத்தி வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
    • தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலி.

    பெண்கள் முன்னேற்றம், ஏழை எளிய மக்களின் நலன், சமூக நீதியை நிலை நாட்டிட பல முக்கிய நலத்திட்டங்களை முன்னெடுத்து, தமிழக மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்தவர்.

    துணிவு, தெளிவு, தீர்மானமான முடிவு மற்றும் பொதுச்சேவைக்கான அர்ப்பணிப்பு என தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்த, அவரது சீரிய பணிகளையும் தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கை முழக்கமிட்டனர்.
    • புதிய எப்.சி. கட்டண உயர்வை 3 மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடக்கிறது.

    சென்னை:

    சி.ஐ.டி.யு. சென்னை மாவட்டம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்கியது. கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. தலைவர் கபாலி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் தேவாரம் ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது.

    13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் மீட்டர் கட்டணத்தை உடனே நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கை முழக்கமிட்டனர். புதிய எப்.சி. கட்டண உயர்வை 3 மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடக்கிறது.

    இதற்கிடையில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைகள் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் போலீசார் கைது செய்தாலும் போராட்டம் நீடிக்கும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்க மாதம் ரூ.2000 வழங்கப்படும்.
    • விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    தி.மு.க. ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்வு காரணமாக விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது.

    * அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.

    * ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்.

    * வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்க மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

    * 12-ம் வகுப்பு வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

    * தெருவோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

    * மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.8,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.

    * விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீய சக்தி தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள்.
    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம்.

    மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள்.

    * தீய சக்தி தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள்.

    * முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம்.

    * தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மா ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களும், அதனால் முன்னேறிய மக்களும் ஏராளம்.
    • காலங்கள் மாறினாலும், அம்மாவின் சிறந்த ஆட்சியின் புகழ் என்றும் மறையாது.

    சென்னை:

    பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களின் பேராதரவுடன் தனியொரு பெண்ணாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடங்கி ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது வரை 360 டிகிரியிலும் மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட, 'அம்மா' என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில், அவரது பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது.

    மாணவர்களுக்கு சைக்கிள் முதல் லேப்டாப் வரை பல்வேறு பொருட்கள் வழங்கும் திட்டம், அம்மா உணவகம், தொட்டில் குழந்தைகள் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் என அம்மா ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களும், அதனால் முன்னேறிய மக்களும் ஏராளம். காலங்கள் மாறினாலும், அம்மாவின் சிறந்த ஆட்சியின் புகழ் என்றும் மறையாது.

    அத்தகைய புகழ்மிக்க தமது ஆட்சியில் போக்குவரத்துத்துறை, ஊரகத்தொழில்கள் துறை, மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை என்ற நான்கு முக்கியத் துறைகளின் அமைச்சராக என்னைப் பொறுப்பேற்கச் செய்து மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த புரட்சித்தலைவி அம்மா அவர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து அகமகிழ்வேன்! என்று கூறியுள்ளார். 



    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.
    • சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தார்.

    கட்சி கொடியை ஏற்றி வைத்த அவர், சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற பெயரிலான அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார்.

    ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக் வெட்டப்பட்டது. இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

    • விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய அரசின் தணிக்கைக்குழு மூலம் முடக்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
    • தேர்தல் என்பது அரசியலில் இடையில் வரும் ஒரு சடங்கு மட்டுமே.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால் பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் தனது ஆதரவாளர் களோடு ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து விலகுவதாகவும், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கும் புதிய கட்சியில் இணைவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சியின் பொதுச்செயலாளராக முத்தியால் பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமாரை நியமிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டு கட்சியின் தொடக்க விழா அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.

    அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் நிறுவன தலைவராக இருந்து எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் பொதுச்செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் முன்னிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சியை தொடங்கி வைத்தார்.

     

    பொதுச் செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் ஏற்பாட்டின் பேரில் கட்சியின் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். கட்சியின் தொடக்க விழாவில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தை மத்திய அரசின் தணிக்கைக்குழு மூலம் முடக்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் என்பது அரசியலில் இடையில் வரும் ஒரு சடங்கு மட்டுமே என்றும், தற்போதைக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் அதில் பங்கேற்கப்போவதில்லை என்றும் கூறினார்.

    எனினும், விஜய்யின் கொள்கைகளைத் தாங்கள் மதிப்பதாகவும், மக்களைச் சாதி, மதப் பாகுபாடின்றி சமமாகப் பாவிக்கும் தலைவரான அவரை சட்டமன்ற தேர்தலில் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

    விஜய் தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டால், தங்களது இயக்கத்தைச் சேர்த்தவர்கள் அவர்களது சின்னத்திலேயே போட்டியிடலாம் என்றும், எவ்வித பேரமும் இன்றி மக்கள் நலனுக்காகவே இந்த ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

    கட்சி தொடக்க விழாவில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் கூறுகையில், இக்கட்சியில் இணையும் தொண்டர்கள் வயது மூப்பு அல்லது உடல்நலக்குறைவால் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு கட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

    கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், இருவர் சமீபத்தில் இறந்தவிட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய்க்குரிய காசோலையை முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.

    விழாவில் கட்சியின் நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அம்மாள், கவுரி, ஜோதிராமன், ஏ.வஜ்ரவேலு, ஜெ.காமாட்சி கான் ஜெயகாந்தன், டபுள்யூ. எஸ்.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மிதுன்குமார் தனது காரில் பேராவூரணி கடைவீதிக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார்.
    • மிதுன்குமாருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியை சோ்ந்தவர் ராஜன். இவரது மகன் மிதுன்குமாா் (வயது 30).

    சம்பவத்தன்று காலை மிதுன்குமார் தனது காரில் பேராவூரணி கடைவீதிக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அங்கு ஒரு ஓட்டலின் முன்பு காரை நிறுத்தியவா் காரை விட்டு இறங்காமல் இருந்துள்ளாா். அந்த காரின் என்ஜின் நீண்ட நேரமாக இயங்கியபடி இருந்துள்ளது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது காருக்குள் மயங்கிய நிலையில் மிதுன்குமாா் கிடந்துள்ளாா்.

    உடனடியாக அவர்கள் மிதுன்குமாரை மீட்டு, பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். மிதுன்குமாருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை. திடீா் மாரடைப்பு காரணமாக அவா் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார்.
    • முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 78-ம் ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சராக தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளை நான் நினைவு கூர்கிறேன்.

    துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார். சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அதை சட்டரீதியாக முறியடித்து சமூகநீதியின் மீது தாம் கொண்டிருந்த அக்கறையை நிரூபித்தார். முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
    • தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

    வீட்டில் தவறி விழுந்ததில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நுரையீரல் பிரச்சனை, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கருவிப் பொருத்தப்பட்டு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி 101-வது பிறந்த நாளை கொண்டாடிய நல்ல கண்ணுவிற்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2 மாதமாக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நல்ல கண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரித்தார். கம்யூனிஸ்ட் தலைவர்களும், நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். செயற்கை சுவாச கருவி உதவியுடன் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    நல்லகண்ணுவின் உடல் நலம் குறித்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் கூறும் போது, வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வெண்டிலேட்டர் உதவியுடன் அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது என்றனர்.

    நல்லகண்ணுவின் உடல் நலம் பற்றிய தகவல் அறிந்தவுடன் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.

    இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் முத்தரசன், வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

    தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீர பாண்டியன் கூறும்போது, தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நல்ல கண்ணுவின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். ஆஸ்பத்திரியின் மருத்துவ அறிக்கையை எதிர்நோக்கி இருக்கிறோம் என்றார்.

    • ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • மாணவிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 20-ந்தேதி காலை இவர் கல்லூரி பஸ்சை மதுபோதையில் ஓட்டிச்சென்றபோது நெல்லை-கடையம் சாலையில் சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதன் நகர் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகத்தில் மோதினார்.

    இதில் ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த டிரைவரான சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரை சேர்ந்த மனக்காவலம் பெருமாள் (49)மற்றும் சுத்தமல்லி அருகே பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளான சுத்தமல்லியை சேர்ந்த யஸ்வனி (15), பழவூர் கிராமத்தை சேர்ந்த செல்வபாலா (15) மற்றும் 10-ம் வகுப்பு மாணவன் முத்து அருள்(15) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தொடர்ந்து 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி செல்வபாலாவின் உடல்நிலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நாளில் இருந்தே மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிலையில் மாணவிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    சுமார் 4 நாட்களாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மாணவியின் உயிரை காப்பாற்ற போராடிய நிலையில் செல்வபாலா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி விசாரணை நடத்தி கொலையாகாத மரணம் விளைவிக்க முயற்சி என வழக்குப்பதிவு செய்து டிரைவர் இசக்கியப்பனை கைது செய்திருந்த நிலையில், தற்போது மாணவி இறந்துவிட்டதால் கொலையாகாத மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்கை மாற்றம் செய்துள்ளனர். 

    ×